Tuesday 1 July 2014

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம் தொடர்ச்சி   - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை  இப்பதிவில்  பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : "கண்"


எனக்கு நன்றாக நிணைவிருக்கிறது - எனது சிறுவயதில், எனக்கு உடல் நலம் சரியில்லாத போது, என் தாயார் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது,  என்னை  சற்று உற்றுப்பார்த்த  மருத்துவர், சற்றே யோசித்தவராக எனது இரு கண்களின் கீழ் இமைகளையும் ஒவ்வொன்றாக கீழிழுத்துப்பார்த்து, உடனேயே சொன்னார் "பையன் உடம்பிலே ரத்தமே இல்லையே!" என்று.

எவ்வளவு எளிதான பரிசோதனை! உடனடி report!!


நமது உடலில்  இரத்தத்தின் அளவு குறைந்திருக்குமேயனால், கல்லீரலில், அவசரத்தேவைக்காக சேமித்து வைக்கப்படும் இரத்தத்தின் அளவும் அதே விகிதத்தில் குறைந்து விடும்.

கண்களின் கீழிமையை சற்று கீழிழுத்துப்பார்க்கும் போது தெரியும் உட்பகுதியில் நாம் காணும் சிகப்பு நிறத்தின் அடர்த்தி,  உடலின் இரத்த அளவினைக்காட்டும் "meter" ஆக விளங்குகிறது.

அடர்ந்த சிகப்பு நிறம், போதுமான இரத்தம் நமது உடலில் இருப்பதையும், வெளிறிய சிகப்பு நிறம்  உடலில் இரத்தம் குறைவாக இருப்பதையும் தெளிவாக காட்டுகிறது.

கண்ணின் வெண்விழிப்படலத்தில் தெரியும் மஞ்சள் நிறம், கல்லீரல் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

கண்ணில் எரிச்சல், மற்றும் நீர் வடிதல் ஆகியவை கல்லீரல் நச்சுப்பொருட்களால் பாதிக்கப்படுவதை அவ்வப்போது நமக்கு உணர்த்தும் குறிகளாகும்.

மரம் மூலகத்தின் சுவை  : "புளிப்பு"

நமது உடலின் உள்ளுறுப்புகளுக்கும் சுவைகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதென்பதை நாம் அறிவோம்.  அந்த வகையில் "மரம்" மூலகத்தின் சுவை இயல்பு  "புளிப்பு" ஆகும்.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புளிப்புச்சுவை அளவோடு இருக்க வேண்டும். ஏறக்குறைய இருப்பின்  "மரம்" மூலகத்தின் உறுப்புகளான கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

அதிகப்படியாக புளிப்பு உணவை எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் அமிலச்சுவை அதிகரிப்பதின் காரணமாக உடலின் அனைத்து இணைப்பு பாகங்களிலும் வலி ஏற்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது.

நீண்டநாளாக, உடலின் இணைப்பு பாகங்களில் மிகுந்த வலியினால் அவதிப்படுபவர்கள், நிச்சயமாக  அதிகமாக புளிப்புச்சுவை மிகுந்த உணவில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புளிப்பு சுவை அதிகம் சேராமல் கவனத்துடன் இருப்பார்களேயானால்,  நிச்சயமாக மருந்துகளின் உதவியின்றி, படிப்படியாக வலியிலிருந்து  விடுபட அதிக வாய்ப்பு  உள்ளது.

மரம் மூலகத்தின் நிறம் : "பச்சை"

கல்லீரலானது, பித்தநீரினை பித்தப்பையில் சேமித்து வைத்து பயன் படுத்துகிறது.  பித்தநீரின் மிக முக்கியமான பணியாகிய கொழுப்பு ஜீரணம் சரிவர நடைபெறாமல் தடைபட்டுப்போகும் நேரத்தில், பச்சை நிற "பித்தப்பை கற்கள்" பித்தப்பையில் உருவாகின்றன.

சிறுகுடலில் அடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும்போதும், அல்லது சிறுகுடலில் வைரஸ்  தாக்குதல் ஏதாவது ஏற்பட்டுள்ளபோதும், பித்தநீரானது சிறுகுடலினுள் செல்ல வழியின்றி, மேலேறி இரைப்பையை அடையும்போது, இரைப்பையானது பித்தநீரினை சகித்துக்கொள்ளும் திறன் இல்லாததால் பித்தநீரை, பச்சைநிற பித்தவாந்தியாக வெளியேற்றுகிறது. 

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில், குளோரபில் அல்லது இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட மருந்துகள் ஏதும் சேராதபோது, திடக்கழிவில் பச்சை நிறம் காணப்பட்டால், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றின் இயல்புக்கு மாறான அதிவேக செயல்பாட்டினை உணர்த்துகிறது

Monday 23 June 2014

"மரம்" - மூலகம்: தொடர்ச்சி - உட்புற இணைஉறுப்பு : பித்தப்பை GALL BLADDER

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், கல்லீரல், மற்றும் பித்தப்பை  ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "மரம்" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன

உட்புற இணை உறுப்பு :   பித்தப்பை  GALL BLADDER - அக்குபஞ்சர் குறியீடு "GB" 

கல்லீரலின் அடிப்பக்கத்தில் அமைந்துள்ள பித்தப்பையானது சுமார் 50 முதல் 60 மில்லி லிட்டர் மட்டுமே  கொள்ளளவு உடையது.

கல்லீரலானது  பித்தநீரினை சுரந்து பித்தப்பையில் சேமிக்கிறது. பச்சை  நிறமான காரத்தன்மையுடையதான பித்தநீர், நாளொன்றுக்கு சுமார் 600 முதல் 1000 மில்லி லிட்டர்  வரை  சுரக்கப்படுகிறது.

கல்லீரல் ஓரளவு தொடர்ச்சியாக பித்தநீரினை சுரந்து கொண்டிருந்தாலும், பித்தப்பையானது, நாம் உணவு எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது இரைப்பையில் அரைக்கப்பட்ட உணவு முன்சிறுகுடலில்  நுழையும் போதோதான் பித்தநீரினை சிறுகுடலுக்கு அனுப்பித்தருகிறது.

சுமார் 50 அல்ல்து 60 மி.லி. கொள்ளளவே கொண்ட  பித்தப்பை கல்லீரலிலிருந்து தொடர்ச்சியாக  பெறப்படும் சுமார் 600 முதல் 1000 மில்லி லிட்டர் வரையான பித்த நீரை சேமித்து வைத்து பயன்படுத்த  வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் பெறக்கூடிய பித்தநீரின் அடர்த்தியை  10 முதல் 15 மடங்கு  வரை அதிகரித்து சேமித்து வைத்து தேவைப்படும்போது அதனை நீர்த்து பயன்படுத்துகிறது.

பித்தப்பையானது,  பித்தநீரை சிறுக்குடலுக்கு அனுப்பும்போது "மியூசின்" (musin) எனும்  திரவச்சுரப்பினையும் சேர்த்து அனுப்புகிறது. இந்த மியூசின் அரைக்கப்பட்ட  உணவு சிறுகுடலில் எளிதாக  தடையின்றி நகர்ந்து செல்ல எண்ணைப்பசை (lubricant) போல செயல்படுகிறது.

பித்தநீரானது 89 சதவீகிதம் நீரும், மீதம் 11 சதவிகிதத்தில்  பித்த உப்புக்கள், பித்த நிறமிகள், மியூசின்  போன்ற கரிம (organic) பொருட்களும், சோடியம், கால்சியம், பொட்டாசியம், பை-கார்போனேட்  போன்ற  கனிம (inorganic) திடப்பொருட்களும் கொண்டதாக அமைகிறது.

பித்த உப்புக்கள், சிறுகுடலில் கொழுப்பு ஜீரணத்திற்கு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது.

பித்த உப்புக்கள், சிறுகுடலில் உருண்டைகளாக உருவாகும் கொழுப்பினை நுண்ணிய துகள்களாக உடைத்து கூழ் போன்று  திரவநிலைக்கு மாற்றி, சிறுகுடல் உறிஞ்சத்தக்கதாக மாற்றித்தருகின்றன.

சிறுகுடலின், peristatic movement எனப்படும் சுருங்கி விரியும் தன்மையை ஊக்குவித்து,  உணவுத்  திரவக்கூழின் சிறுகுடல் பயணத்தை எளிதாக்குகின்றன.

மேலும், பித்தநீரின் திரவத்தன்மையை தொடர்ந்து பாதுகாப்பதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாகுவதை முற்றிலும் தவிர்க்கச் செய்கின்றன.

சிதைக்கப்பட்ட இரத்த சிக்கப்பணுக்களிலிருந்து பெறப்பட்ட பிலிருபின் - bilirubin - மனித உடலின் முக்கியமான  பித்த நிறமியாகின்றது. நமது மல, நீர்க்  கழிவுகளில் தெரியும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு காரணமாக அமைவது  இந்த பிலிருபின்தான்.

கல்லீரலின் செயல்திறனில் குறைபாடு ஏற்படுவதன் காரணமாக தோன்றும் நோய்களின் போது, பிலிருபின் இரத்ததில் அதிகமாக கலந்துவிட நேருவதால், மலம், சிறுநீர் மற்றும் கண்ணின் வெண்விழிப்படலம் ஆகியவற்றில் தோன்றும் மஞ்சள் நிறம், நோய்த்தாக்கத்தை நமக்கு உணர்த்தும் வகையில் பிலிருபினின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
 
கொழுப்பினை ஜீரணிக்க அத்தியாவசியமான பித்தநீரினை முறையாக பயன்படுத்தும் வகையில் நமது உணவுப்பழக்க வழக்கங்கள் அமையவில்லையெனில், பித்தப்பையில் அளவுக்கு அதிகமாக பித்தநீர், சேர்ந்துவிடும்

இறுகிய பித்தநீர், கற்களாக மாறி பித்தப்பையினை வெடித்துவிடச்செய்யும் அளவுக்கு மோசமான நிலைக்கு நம்மை தள்ளிவிடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது.



                                                       வருமுன் காப்போம் . 


Thursday 12 June 2014

பஞ்ச பூதங்கள் : "மரம்" - மூலகம் - உள்ளுறுப்பு " கல்லீரல்"

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், கல்லீரல், மற்றும் பித்தப்பை ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "மரம்" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :  கல்லீரல் - LIVER - அக்குபஞ்சர் குறியீடு "LIV"

நமது உடலின் மிகப்பெரிய சுரப்பியாக விளங்கும் -LIVER - எனப்படும் கல்லீரல், நமது உடலின் "இரசாயனத் தொழிற்சாலை" என்று அழைக்கப்படும் அளவுக்கு, நமக்கு அன்றாடம் தேவைப்படும் பலவித  உயிர்ச்சத்துக்களை நாம் உண்ணும் உணவிலிருந்து தயாரித்துத் தரும் முக்கிய பணியினைச் செய்கிறது.

ஒரு மரமானது, எவ்விதம் நிலத்திலிருந்து சத்துக்களை உறிஞ்சி தனது அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறதோ, அதேபோன்று, கல்லீரலானது நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் அனைத்து சத்துக்களையும் நமது உடலின் அனைத்து பாகங்களும் பயன்படுத்தும் வகையில் தயாரித்து அனுப்பித்தருகிறது. தவிர, தான் வெட்டப்பட்டாலும், மீண்டும் முழுமையாக வளர்ந்துவிடக்கூடிய தன்மையுடையதாய் விளங்குவதால், கல்லீரல் மரம் மூலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லீரல் ஆற்றும் அனைத்து பணிகளைப்பற்றியும் சொல்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. முக்கியமான பணிகளை மட்டும் சொல்லலாம் என்று யோசித்தால் எதை சொல்வது, எதை விடுவது என்று பிரிக்கவும் முடியவில்லை. ஓரளவு சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

* நமது உடலின் அனைத்து பாகங்களிலிருந்து பெறப்படும் திரவ நிலையினை கண்காணித்து நிர்வகிக்கும் கல்லீரல், நமது உடலின் அனைத்து பாகங்களுடனும் நேரடியாகத் தொடர்புடையது.

* கார்போஹைடிரேட் எனப்படும் மாவுச்சத்து, மற்றும் புரோட்டீன், கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை மாற்றம் - metabolism - கல்லீரலில் நடக்கிறது.

* கொழுப்பினை ஜீரணிக்கச்செய்யும் பித்தநீரினைச் சுரந்து, பித்தப்பையில் சேமிக்கிறது.

* மாசுபட்ட உணவு மற்றும் நீர், நோய்க்கிருமிகள், போதை தரும் மருந்துகள் மற்றும் மது - இவற்றினால்  இரத்தத்தில் சேரும் அனைத்து நச்சுப்பொருட்களையும் மற்றும் கழிவுகளையும் நீக்குகிறது.

* முக்கியமாக, பெருங்குடலில் நுண்ணுயிரிகளால் சேரக்கூடிய, உயிருக்கு உலை வைக்கக்கூடிய அளவுக்கு கொடிய நச்சுப்பொருளான "அமோனியா"வை  யூரியாவாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றச் செய்கிறது.

* இரத்தச்சுற்றோட்டத்தின் போது, மொத்த இரத்தத்தில் பத்து முதல் பதினைந்து சதவிகிதம் வரை தன்னுள் எப்போதும் இருக்குமாறு வைத்துக்கொள்கிறது - அவசரகாலத் தேவைக்காக.

* சிறுகுடலிலிருந்து பெறப்படும்  - வைட்டமின், மற்றும் தாதுப்பொருள் சத்துக்களை சேகரித்து வைத்து, தேவைப்படும் போது வெளியிடுகிறது.

* இரத்தத்தில் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரைச் சத்து சற்று அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதனை கிளைகோஜனாக மாற்றி சேமித்து வைத்து, தேவைப்படும்போது குளுக்கோஸாக மாற்றி வெளியிடுகிறது.

*  இரத்தம் உறைதலைத் தடுக்கத் (anticoagulant) தேவையான ஹெபாரின் - Heparin - எனப்படும் காரணியினை  சுரக்கிறது.

* இரத்த அழுத்தத்தை தொடர்ந்து சீராக வைத்திருக்கச் செய்கிறது.

* உடலின் electrolyte எனப்படும் "மின்பகு பொருள்" (ion) மற்றும் "நீர்" ஆகியவற்றின் சமநிலையினை பராமரிக்கிறது.

* இறந்துவிட்ட மற்றும் செயலற்றுப்போன இரத்த சிகப்பணுக்களில் உள்ள "ஹீமோகுளோபின்"களை சிதைத்து, மறுசுழற்சி முறையில் மீண்டும் இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்தினை பிரித்து எலும்பு மஜ்ஜைக்கு அனுப்புவதோடு, அதில் பெறப்படும் கழிவினை வெளியேற்றவும் செய்கிறது.

இன்னும் பலவிதமான வளர்சிதைமாற்றச் செயல்பாடுகளை, கல்லீரலானது, நமது உடலில் ஆரோக்கியம் நிலைத்திருக்கும் வகையில் இடைவிடாது செயாலாற்றிக் கொண்டிருக்கிறது.

அமிர்தம் வேண்டி, பாற்கடலை கடையும்போது விளைந்த விஷத்தின் தாக்குதலிலிருந்து தேவகணங்களை காக்குமுகமாக, அவ்விஷத்தை விழுங்க முற்பட்ட சிவபெருமானைப்போல், நாம் உண்ணும் உணவு, மற்றும் நமக்கு ஏற்படும் கிருமித்தாக்குதல் ஆகியவற்றால் நமது இரத்தத்தில் கலந்துவிட்ட கொடிய விஷத்தை தனக்குள்ளேயே  வைத்துக்கொண்டு, தீங்கில்லாத உயிர்ச்சத்துக்களை மட்டும் இரத்ததில் கலக்கச்செய்து தான் இருக்கும் உடலின் ஆரோக்கியம் ஒன்றே பிரதானம் என்று செயலாற்றும் கல்லீரலின் கடமையுணர்ச்சியை என்னென்பது!

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"

தெரிந்தோ, தெரியாமலோ நாம் நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் கைக்கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்.

                                               வருமுன் காப்போம். 
                          ஆரோக்கியவாழ்வினை அனுபவிப்போம்.

Wednesday 4 June 2014

பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும்

ஒரு நபரின் உடலில்,  பஞ்சபூத மூலகங்களின் தற்போதைய நிலைப்பாடு  எந்த அளவில் இருக்கிறது என்று நாம் நாடிப்பரிசோதனை மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். எனினும் அதை  உறுதிப்படுத்தும் வகையில், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று - கழிவு நீக்க செயல்பாடு. 

ஒவ்வொரு மூலகத்தின் உள்ளுறுப்பின் செயல்பாடும், அந்தந்த உறுப்பின் கழிவு வெளியேற்றத்தினால்  எளிதாக  உணரப்படுகிறது. ஆரோக்கிய நிலையில், ஒரு உறுப்பின் கழிவின் தன்மை, மற்றும் அளவு  அதன் இயல்பான  நிலையில் அமைந்திருக்கும். உள்ளுறுப்பின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கழிவுகள் வெளியேறுவதில் இயல்பு நிலையில் மாற்றம் நிகழ்கிறது.

அக்குபஞ்சர் தத்துவத்தில், பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகள் அனைத்திற்குமான கழிவுகள் நாம் எளிதில் அவதானிக்கக்கூடிய வகையில் திரவ நிலையில் அமைந்துள்ளன. அந்த வகையில், "நிலம்" மூலகத்தின் உள்ளுறுப்பான  மண்ணீரலின் கழிவுத்திரவம் எச்சில் எனப்படும் "உமிழ்நீர்" ஆகும்.

நிலம் மூலகத்தின் உறுப்புகளான இரைப்பை மற்றும் மண்ணீரலின் செயல்திறனில் பாதிப்பு ஏற்படும்  வேளையில், அதன் வெளியுறுப்பான வாய் அல்லது  உதட்டில், உமிழ்நீரானது உடனே சுட்டிக்காட்டுகிறது.

அடிக்கடி வாய் உலர்ந்து விடுதல், அல்லது எப்போதும் அதிக உமிழ்நீர் சுரந்து கொண்டிருத்தல் - நிலம்  மூலகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினைக் குறிக்கிறது.

பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும் பின்வருமாறு :



Sunday 25 May 2014

பஞ்சபூதங்கள் "நிலம்" மூலகம் - தொடர்ச்சி : மன உணர்ச்சி - "கவலை"

நமது உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் நேரடியாக நமது கட்டுப்பாட்டுக்குள்  இல்லை.

மூளையானது, நரம்பு மண்டலம் வழியாக உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டினை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. நமது உள்ளுறுப்புகள் யாவும், என்னதான் தன்னாட்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு செயலிலும் இறங்குமுன்,   மூளையின்   கட்டளைக்காக  காத்திருக்கிறது.

உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு, நமது உடலில் உள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும்  "ஹார்மோன்" எனப்படும் "உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர்" அடிப்படை காரணமாக அமைகின்றது. இதனை சுருக்கமாக "இயக்கு நீர் / சுரப்பு நீர் " எனலாம். இத்தகைய "சுரப்பு நீர்" வகைகள் யாவும் உடலின் தேவைக்கேற்ப, மூளையின் கட்டளைப்படி, அந்தந்த உறுப்புகளிலும், இரத்தத்திலும்  சுரக்கப்படுகின்றன.

"நிலம்" மூலகத்தின் உறுப்புகளில் ஒன்றாகிய இரைப்பையில், உணவு ஜீரணம் நடைபெறும் விதத்தை நாம் ஏற்கெனவே "உணவு ஜீரணத்தில் உமிழ்நீரின் மகத்துவம்" பதிவினில் பார்த்தோம். நாவில் படும் சுவை, நாசியில் ஏறும்  மணம், இவைகளுக்கேற்ப இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் ஜீரணத்தை நடத்த உதவுகின்றன.

தவிர, உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமான, "ஆற்றல்" அல்லது "சக்தி நிலையில்" குறைவு ஏற்படும்போது, மூளையின் ஹைபோதலாமாஸ் பகுதியின் தூண்டுதலால்,  "பசி" உணர்வினை ஏற்படுத்தும் "HUNGER HARMONE" எனப்படும்  "க்ரெளின் "  (Ghrelin)  வயிற்றில்  சுரக்கிறது.

வயிற்றில் நடக்கும் இவ்வளவு நிகழ்ச்சிகளும் -  மூளையானது, மிக இயல்பாக, அதாவது, அதன் "நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள்" எனப்படும் "மின் அலை கடத்தி"களின் செயல்பாட்டிற்கு எந்த ஒரு  இடையூறும்   இல்லாத  பட்சத்தில் - செவ்வனே நடத்தித் தரும்.

நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான "இரசாயன சமிக்ஞைகள்" - CHEMICAL SIGNALS - சுதி விலகாத  தாள-லயத்துடன் நடக்கும்போது, மூளைக்கும் உள்ளுறுப்புகளுக்குமான தொடர்பில் பாதிப்பு  இல்லை. அவ்வேளையில் சுரக்கப்படும்  "செரோடோனின்" - SEROTONIN - எனும் மூளையின் சுரப்பானது, பசி உணர்வினை முறைப்படுத்துகிறது.  மேலும் - உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருத்தல், "MOOD" எனப்படும் மன நிலையினை  சீராக வைத்திருத்தல், தேவைப்படும் தூக்கத்தை தரும் வகையில் மன அமைதி தருதல், மற்றும் வலி  நிவாரணம் தருதல்  - போன்றவையும்  "செரடோனின்"  துணை  புரியும் முக்கிய  பணிகள் தான்.

ஒருவேளை, ஒரு நபர், நடந்து முடிந்த வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சியைப்பற்றியும், அதன் விளைவாக, வருங்காலத்தில் "என்ன நடந்துவிடுமோ?" என்று தொடர்ந்து "கவலை"ப்பட்டுக்கொண்டிருந்தால் விளைவு என்ன ஆகும்? விரைவில் அவரது நிலைமை கவலைக்கிடமாகிவிடும். அதாவது, நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான தொடர்பில் துண்டிப்பு ஏற்பட்டு, செரோடோனின் சுரப்பு தடைபடுகிறது. செரோடோனின் சுரப்பு தடைபடுவதனால் பசி உணர்வு அதிகமாகவோ அல்லது குறையவோ செய்யலாம். அதாவது பசி முறைபடுத்தப்படமாட்டாது. அதனால்,  இரைப்பை,  மண்ணீரல் மற்றும் கணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் தடைபடும். விளைவு ஆரோக்கியக்குறைவு. மண்ணீரலின் குறைபாட்டினால், இரத்தசோகை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவு, மேலும் கணையத்தின் கவனக்குறைவால் இன்சுலின் சரிவரச் சுரக்காததால் நீரழிவு  எனும் சர்க்கரை நோய் கூட உருவாகலாம்.

அதிகமாக, எந்நேரமும் கவலைப்படும் ஒருவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து, அதனால்  ஆரோக்கியம் கெடும் - என்பது மட்டுமல்லாமல் - முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களினால் அவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து அதன் விளைவாக,  அவருக்கு தேவை இல்லாமல் அடிக்கடி கவலை உணர்வு தோன்றவும் செய்யும் எனபதை நாம்  மறுக்க இயலாது.

இவ்வளவு விஞ்ஞான விளக்கங்கள் எதற்கு? அதையெல்லாம் விட்டுவிடுங்கள்.  மறந்துவிடுங்கள். “நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்" என்ற நமது முன்னோர் சொல்லி வைத்திருக்கும் வார்த்தைகளின் அர்த்தத்தை சற்று  யோசித்துப்பாருங்கள். 

நீங்கள்  எதெற்கெடுத்தாலும்  அதிகமாக  கவலைப்படுகிறவரா?

குறைந்தபட்ச கவலை தேவைதான். இல்லையென்றால் வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி? ஓரளவுக்கு,  அடுத்ததாக செய்ய வேண்டியவற்றுக்கான திட்டமிடுதல் இருந்தால் போதும். கூடவே கொஞ்சம் தைரியத்தை  சேர்த்துக்கொள்ளுங்கள். அதிக கவலையினைத் தவிர்த்து விடுங்கள். இந்த நாளின்  அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலை மட்டும் இருக்கட்டும். இன்னும் ஒருமாதம் கழித்து ஏதோ ஒருநாள்  எடுத்துக்கொள்ளபோகும் மதிய உணவைப்பற்றிய கவலை  இப்போதே  எதற்கு?

தேவையில்லாமல் அதிகமாக கவலைப்படுகிறவர் எனில், அருகில் உள்ள அக்குபஞ்சர் சிகிச்சையாளரிடம் ஆலோசனை பெறுங்கள். செரோடனின் சுரப்பினை  சரிப்படுத்தும் வகையில், ஓரிரண்டு அக்குபஞ்சர் புள்ளிகளில் மட்டும் சிசிச்சை தந்து,   அவர் உங்கள்  ஆரோக்கியம் மேம்பட உதவுவார்.

                  கவலையைப்பற்றிய கவலையை  இனி விட்டுவிடுங்கள்.

                                               வருமுன் காப்போம் 

Tuesday 20 May 2014

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் : தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை

"நிலம்" மூலகத்தின்  - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : உதடு (வாய்).

அக்குபஞ்சர் மருத்துவத்தில், நோயறிதல் பகுதியில், முதலாவது செய்யப்படும் வெளிப்புற பரிசோதனை, "அகத்தின் அழகு  முகத்தில் தெரியும்" என்னும்  பழமொழியின் அடிப்படையில்தான்.  பஞ்ச மூலகங்களின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும், கிட்டத்தட்ட அதன் வடிவத்தையொத்த உறுப்பு ஒன்று முகத்திலேயே  படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் "நிலம்" மூலகத்தின் வெளிப்புற உறுப்பாக கணையத்தின்  வடிவத்தையொத்த "உதடு" அமைந்துள்ளது.

அந்தந்த உள்ளுறுப்புகள் பாதிப்படைந்திருக்கும் பட்சத்தில், அதன் வெளியுறுப்பில் அந்த பாதிப்பு  சுட்டிக்காட்டப்படுகிறது. மண்ணீரலின் அல்லது கணையத்தின் செயல்திறன் மாறுபட்டிருக்கும்போது  உதட்டிலும், உதட்டின் உட்புறத்திலும், உதட்டோரத்திலும் அதன் அறிகுறியாக புண்கள் தோன்றும்.

இரைப்பையில் அஜீரணப்பிரச்சினைகள் அல்லது புண்கள் இருக்கும் பட்சத்தில் உதடுகள் உலர்ந்து போகும்.  மேலும், உதட்டில் தோல் உரிய ஆரம்பிக்கும்; புண்கள் கூட ஏற்படும். மண்ணீரல் குறைபாடு நோய்களின்  அறிகுறியாக வாயோரத்தில், உதடுகள் இணையும் இடத்தில் சிறு கொப்புளங்கள் அல்லது புண்கள்  ஏற்படும்.

நிலம் மூலகத்தின் நிறம் : மஞ்சள்

"நிலம்"  மூலகத்தின் நிறம் " மஞ்சள் " ஆகும். ஒருவரது உடலில் நிலம் மூலகத்தின் செயல்திறன்  ஏறக்குறைய இருக்குமானால்,  அவரது முகம், மஞ்சள் பூத்தாற்போல் ஆகிவிடுகிறது. ஜீரணக்  கோளாறுகள், மற்றும் இரத்தக்குறைவு ஆகிய பிரச்சினைகள் முகத்தில் மஞ்சள் நிறமாக வெளிப்படுகிறது.

தவிர, கண்களில் தோன்றும் மஞ்சள் நிறம், கல்லீரலின் குறைபாட்டால் ஏற்படும் மஞ்சள் காமாலையின்  அறிகுறியாக இருப்பினும், அதில் "நிலம்" மூலகத்தின் மண்ணீரலும் ஒரு காரணமாகிறது. மண்ணீரலில்  இரத்த சிகப்பணுக்கள் மிக அதிக அளவில் சிதைக்கப்பட்டு, அதன் காரணமாக ஏராளமாக  உற்பத்தியாகும்  "பிலுரூபின்" - Bilurubin - என்னும் கல்லீரல் சுரக்கும் பித்தநீருக்கு  நிறம் தரும் நிறமியானது, இரத்தத்தில்  அதிகமாக கலப்பதினால்,  அதன் அறிகுறியாக "மரம்" மூலகத்தின் வெளிப்புற உறுப்பான "கண்"ணில்,  "நிலம்" மூலகத்தின் "மஞ்சள்" நிறம் வெளிப்படுகிறது.

நிலம் மூலகத்தின்  சுவை : இனிப்பு, துவர்ப்பு

"நிலம்" மூலகத்தின் சுவை இயல்பு  "இனிப்பு" ஆகும். எனினும் உடலில் இரத்தம் ஊறுவதற்கு மிக  அவசியமான  "துவர்ப்புச் சுவை"  மண்ணீரலின் சிறப்பு சுவையாகச் செயல்படுகிறது

பொதுவாக, நமது உடலின் திசுக்கள் சேதமடைய நேரும்போது, அதனை மூளை நமக்கு "வலி"-யாக  உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளின் நிலையும் அதுதான். ஆனால், திசுக்கள் சேதமடைவதற்கு  முன்னதாகவே, திசுக்களின் அடிப்படை கட்டமைப்பான "செல்"களின் இயக்கத்தில் குறைபாடு தோன்ற  ஆரம்பித்திருக்கும் அல்லவா?  சற்றே யோசிப்போம் - ஆரம்பகட்டத்திலேயே  அதனை  நாம்  உணரமுடியுமானால் எவ்வளவு நல்லது? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அக்குபஞ்சர் அறிவியலின்படி அதற்கு பதில் "நிச்சயம் இருக்கிறது."

அது எப்படி?

ஒருவர், தான் உணவினைத் தேர்ந்தெடுக்கையில், அதன் சுவையில் நிச்சயமாக கவனம் கொள்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அந்த சுவை, அவரது உள்ளுறுப்புகளின்  நிலையினை, மனதின் உணர்ச்சியாக வெளிப்படுத்துகிறது.

ஒருவர்,  அவரது உணவில் ஆறு சுவைகளும் அளவுடன் எடுத்துக்கொள்கிறார் என்றால், அவரது  ஆரோக்கியம் முழுமையாக இருக்கிறது என்று அர்த்தம். இனிப்பு அனைவராலும் விரும்பி ஏற்க்கப்படும்  ஒரு சுவை. ஓர் ஆரோக்கியமான நபர், இனிப்பு சுவை கொண்ட ஒரு பதார்த்தத்தை விரும்பி  எடுத்துக்கொள்வார் - ஆனால் ஒரு நிலையில் "போதும்- திகட்டிவிட்டது" என்றபடி நிறுத்திக்கொள்வார். சுவை உணர்ச்சியானது, - ஆரோக்கிய நிலையில் - தேவைக்கு மட்டும் - குறிப்பிட்ட சுவையுடன் கூடிய  உணவை அனுமதித்து, உடலின் ஆரோக்கியம் நிலைத்திருக்கச் செய்யும்.

ஒருவர் - "இனிப்பு எனக்கு அறவே பிடிக்காது"  என்று இனிப்பு சுவையை  ஒதுக்கினாலும், அல்லது  "  இனிப்பினை நிறைய எடுத்துக்கொள்வேன்" என்று  மிக அதிகமாக இனிப்பை உட்கொண்டாலும் - அவரது  "நிலம் மூலகம்"  முறையாக இயங்கவில்லை என்பதனை உணரலாம்.

தொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் ஒருவருடனான "கேள்வி - பதில்" பகுதியிலேயே,  அக்குபஞ்சர் சிகிச்சையாளர்,  உருவாகவிருக்கும் பிரச்சினையை ஆரம்பத்திலேயே இனம் கண்டு  கொண்டு, நாடிப்பரிசோதனை மூலம் அதை  உறுதி செய்து, சிகிச்சை தர முடியும். எனவே சுவை  உணர்ச்சி, அக்குபஞ்சர் நோயறிதல் பரிசோதனையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லவும்  வேண்டுமா?

                                              "வருமுன் காப்போம்"

Friday 16 May 2014

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் :

நிலம் - மூலகம் :

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், இரைப்பை, மற்றும் மண்ணீரல் ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "நிலம்"  மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :   மண்ணீரல் - SPLEEN - அக்குபஞ்சர் குறியீடு "SP"

SPLEEN- எனப்படும் மண்ணீரலானது இரத்த சிகப்பணுக்களின் தரத்தினை சரிபார்க்கும் முக்கியமான பணியைச் செய்கிறது. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவும்  மண்ணீரலுக்கு வந்து, கடந்து தான் செல்லவேண்டும்.

ஒரு இரத்த சிகப்பணுவின் ஆயுள் 120 நாட்கள் மட்டுமே. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவின் தரம் மற்றும் ஆயுள் - quality  & validity-  அங்கு சரிபார்க்கப் படுகிறது.

நிலமானது  எவ்வாறு இறந்த மற்றும் கழிவுப்பொருட்களைச்  சிதைத்து, மறு சுழற்சிக்கு  தயார்ப்படுத்துகிறதோ,  அதேபோல்  இறந்த  மற்றும் பலமிழந்த இரத்த சிகப்பணுக்களை  சிதைத்து,  கல்லீரலின் துணையுடன் மறு சுழற்சிக்கு தயார்ப்படுத்துகிறது. "இரத்த  சிகப்பணுக்களின் கல்லறை" என்று அழைக்கப்படும் மண்ணீரலின், மண்ணிணையொத்த செயல்பட்டினை  அறிந்த நமது முன்னோர்கள் -  உங்கள் சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள் - எத்தனையோ   ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,  தமிழில் "மண்-ஈரல்"
என்று பெயர் வைத்து விட்டார்கள்.

தவிர, T- லிம்போசைட் மேலும்  B - லிம்போசைட்  ஆகிய வெள்ளையணுக்களின் இருப்பிடமாக விளங்குவதால், மண்ணீரலானது உடலின் மிகப்பெரிய "நிணநீர் உறுப்பு" எனப்படுகிறது.

எப்போதெல்லாம் மூலகத்தை சம்பந்தப்படுத்தி SPLEEN என்று குறிப்பிடுகிறோமோ, அப்போதெல்லாம் PANCREAS எனும் கணையமும் அதில் சேரும் - என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.  இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் போலவே, கணையத்திலுள்ள நாளமுள்ள சுரப்பிகளிலிருந்து கணையநீர் நொதியங்களும், நாளமில்லா சுரப்பிகள் பகுதியிலிருந்து, இரத்தத்தில் சர்க்கரையின்அளவைக்கட்டுப்படுத்தும்  இன்சுலினும் சுரந்து, சிறுகுடலில் உணவை ஜீரணிக்கும் வகையில் செயல்படுகின்றன.

மண்ணீரல் கெட்டியான உறுப்பாதலால் "யின்" உறுப்புகள் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.


உட்புற இணை உறுப்பு :  இரைப்பை STOMACH - அக்குபஞ்சர் குறியீடு "ST"

எவ்வாறு, EARTH - நிலம் , மண்  - தனக்குள் விதைத்ததை, இயற்கை உரமூட்டி, நாம் உண்ணத்தகுந்ததாக - காய், கனி, பூ, இலை, கிழங்கு என விளைவித்து நமக்குத் தருகிறதோ, அதே போல், இரைப்பை - STOMACH - நாம் வயிற்றுக்குள் விதைத்ததை  - நாம் உண்ட உணவினை - "நொதியம்" எனும் உரம் சேர்த்து நன்கு அரைத்து, பதமாக்கி, சிறுகுடலானது - சர்க்கரைச்‌ சத்து, புரோட்டீன், கொழுப்பு, மற்றும் சத்துக்களை - உறிஞ்சும் வகையில்  - தயாரித்துத் தருகிறது.

மண்ணீரலின்   இணை  உறுப்பான இரைப்பை, குழிவான உறுப்பாதலால் "யாங்"   உறுப்பாக  அறியப்படுகிறது.

நிலம் மூலகத்தின் குணாதிசயங்களான - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை, மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி, இம்மூலகத்தின்  செயல்திறன் பாதிப்பினால் உடல் மற்றும் மனதில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Thursday 15 May 2014

பஞ்சபூத மூலகங்களின் குணாதிசயங்கள்

மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சையில், இருக்கும் நோய்களை குணப்படுத்துவதற்கும்,  வருமுன் காக்கும் வகையில் சிகிச்சை தருவதற்கும்  "உயிர் சக்தி ஒட்டப்பாதை"யில் அமைந்துள்ள  பஞ்சபூதங்களின் தொடர்பிலான அக்குபஞ்சர் புள்ளிகள் பெரிதும் பயன்படுகின்றன. எனவே பஞ்சபூதங்களான " நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம் " பற்றி நன்கு அறிந்திருக்க  வேண்டியது   மிகவும்  அவசியமாகிறது.

பஞ்சபூத மூலகங்களின் தனித்தன்மை, தனித்தனியே அவற்றின் குணாதிசயங்கள் ஒன்று  மற்றொன்றினுடன்  சேர்ந்து செயலாற்றும் விதம் ஆகியவற்றின் தெளிவு மிகவும் அவசியம்.

அக்குபஞ்சர் சிகிச்சையில் வலி நிவாரணப்புள்ளிகளில் அளிக்கப்படும் சிகிச்சை வலியினை நீக்குவது  மட்டுமல்லாது, அந்த வலி ஏற்படுவதற்குக் காரணமான பிர்ச்சினையினையும்  குணமாக்குகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனினும் பஞ்சமூலகங்களின் நிலையினை நாடிப்பரிசோதனை மூலம்  சோதித்தறிந்து, அதன் அடிப்படையில் தரப்படும் சிகிச்சையே  முழுமையானதாகும்.

எனவே, வரும் பதிவுகளில், நாம்  முதலில் தெரிந்துகொள்ளப்போகும் மூலகம் "EARTH - நிலம், மண் "


                                                         "வருமுன் காப்போம்"


Sunday 11 May 2014

அக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்?

நோயெதிர்ப்பு போராட்டம் 


"அக்குபஞ்சர் புள்ளிகள்"
தூண்டிவிடப்படுவதன் மூலம் செய்யப்படும், மருந்தில்லா மருத்துவம் எனும் அக்குபஞ்சர்  மருத்துவம், பஞ்சபூதங்கள் எனப்படும்  "நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்"  ஆகியவற்றின்  அடிப்படை சக்தியில் செயல்படுகிறது.

நாம் ஜீவித்திருக்கும் சதா சர்வ காலமும் நமது  உடல் நலம் பேணும் வகையில், பஞ்சபூத மூலகங்களின் ஒருங்கிணைந்த சீரான "செயல்பாடு" தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. "செயல்பாடு" என்று சொல்வதைவிட "போராட்டம்" என்று சொல்வது மிகவும் பொருந்தும். கண்ணிமைக்கும்  நேரம் கூட கவனப்பிசகில்லாமல், ஓர் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது உடலின் ஆரோக்கியத்திற்காக.

"அறுபடைவீடுகள்"


1. உடலெங்கும் அமைந்துள்ள நிணநீர் முடிச்சுக்கள் எனும்  போர்க்கூடாரங்கள்

2. போராட்ட வீரர்களான  "B-லிம்போசைட்"  வெள்ளை அணுக்களை  உற்பத்தி செய்து பயிற்சி தரும்  எலும்பு மஜ்ஜை

3. சிறுகுடலின் மூன்றாவது பகுதியான -  "இலியம்" பகுதியில் அமைந்திருக்கும், குடல் பகுதியினை பாதுகாக்கக்கூடிய வெள்ளையணுக்கள் நிரம்பிய "பேயரின் திட்டுக்கள்"

4. "மாக்றோபேகஸ் செல் " எனும் "பாதுகாப்பு நுண்ணுயிர்விழுங்கி" அமைந்துள்ள,  இரத்தத்தின் அளவை கட்டுபடுத்தும் திறன் கொண்ட மண்ணீரல்.

5. வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா ஆகியவற்றை எதிர்த்துப்போராடும்  "T-லிம்போசைட்" - எனப்படும் பாதுகாப்பு செல்களுக்கு "இராணுவப்பயிற்சி" தரும் "தைமஸ் சுரப்பி"

6. நாம் அருந்தும் எந்த உணவானாலும், அதில் வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா ஆகியவை இருந்தால்  அவற்றுடன் போராடுவது, மேலும்,  நாசி மற்றும் வாய் வழியே சுவாசக்குழாயினுள் நுழைய எத்தனிக்கும்  கிருமிகளை செயலிழக்கச் செய்வது என கோவிலின் கருவறைக்கு பாதுகாப்பாக இருபுறமும் நிற்கும் துவாரபாலகர்கள் போல், தொண்டையின் நுழைவுப்பகுதியில் இருபுறமும் - "டான்சில்ஸ்"

இவ்வாறாக, ஆறு படைத்தளங்கள், எம்பெருமான் ஸ்ரீ முருகனின் , "அறுபடைவீடுகள்" எனும் வகையில்  அமைந்துள்ளன.  "யாமிருக்க பயம் ஏன்?" என்று பகை விரட்டி அபயம் தரும் இறைவனின் கருணைக்கு  ஈடாக, உடலுக்கு பகையான கிருமிகளை எதிர்த்துப்போராடும் அற்புத அமைப்புகளாகும் அவை.  நமக்கு  இயற்கை அளித்துள்ள இந்த பாதுகாப்பு கவசம் நன்றாக செயல்பட்டாலே போதும் - நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

 

உணவு, உழைப்பு, உறக்கம்  


உணவு, உழைப்பு, உறக்கம் - இம்மூன்றையும் நன்னெறியில் முறைப்படுத்திக் கொண்டாலே நமது உடலில்  அமைந்துள்ள அனைத்து பாதுகாப்புக் கவசங்களும் முழுமூச்சுடன் செயல்பட ஏதுவாகும்.

நல்ல பழக்க வழக்கங்களை தவறவிடும்போது, பஞ்ச பூதங்களின் அற்புத செயல்பாடு திறம்பட இயங்க  முடியாத நிலை ஏற்பட்டு, " உயிர் சக்தி ஒட்டப்பாதையில்" அடைப்புகள் ஏற்பட்டு - அதனால் நோயெதிர்ப்பு  சக்தி சரியான முறையில் செயல்பட முடியாமல் போய்விடுகிறது.

அக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்?


 பிரச்சினையிலிருந்து மீண்டுவர, அக்குபஞ்சர் சிகிச்சை மிகவும் எளிதான, பக்கவிளைவற்ற  மருத்துவமுறையாக அமைகிறது. "அக்குபஞ்சர் புள்ளிகள்" நமது உடலை காக்கும் அற்புத சக்தி  வாய்ந்தவை. அவற்றைமுறையாக  அக்குபஞ்சர் சிகிச்சை மூலம், தூண்டிவிடுவதனால் பஞ்ச பூதங்களின் செயல்திறனை முடுக்கி  விடலாம். அதன் மூலம் இழந்த ஆரோக்கியத்தை மீண்டும்  பெறலாம்.

மேலும், நீடித்த,  நிலைத்த ஆரோக்கியத்திற்கு  - "உணவு, உழைப்பு, உறக்கம்"  இம்மூன்றின் முறையான பழக்க  வழக்கங்களை மேற்கொள்ளுதல் மிக மிக அவசியம்.
                               

                                                          "வருமுன் காப்போம்"

 

 

Thursday 8 May 2014

அக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று

அக்குபஞ்சர் - 
இயற்கை வைத்தியம்
ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று

 

பிரபஞ்சம் ஓர் "முழுமை


"பிரபஞ்சம் ஒரு சிலந்தி வலை- அதில் ஏதாவது ஒரு இடத்தைத் தொட்டாலும் - வலை முழுவதிலும் அதன் அதிர்வு  உணரப்படும்" என்ற இணையதளத்தில் படித்த  சிலந்தி வலைத் தத்துவம் ("SPIDER WEB PHILOSOPHY")

மற்றும்

"பிரேசிலில் ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகினை அசைப்பதின் விளைவாக கனடாவிலுள்ள டொராண்டோவில் சூறாவளி எற்படுமா? " என்ற 1972ம் ஆண்டின்  "கேயாஸ் தியரி " (CHAOS THEORY")
- ஆகிய இரண்டு தத்துவங்களும் சொல்வது என்ன?
 
பிரபஞ்சம் ஓர் "முழுமை"
அதன்  அங்கமான நமது உலகமும், நாமும் தனித்தனியே - ஓர் "முழுமை"
     
 "பிரபஞ்சம்" - இன்னும் அது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது. முடிவுகள் வரட்டும். நமது முன்னோர்கள் ஏற்கெனவே கண்டறிந்தது சொல்லிவிட்டார்கள்  "அண்டமும்  பிண்டமும் ஒன்றே" என்று.

பூமியில்- எரிமலை வெடித்து, நெருப்புக்குழம்பை கக்கியபின் பூமிக்கடியில் ஏற்படும், வெற்றிடத்தை நிரப்ப, பாறைத்தட்டுகள் அசைந்து சரி செய்து கொள்கின்றன.  அது பூகம்பம். அதே பூகம்பம் கடலுக்கருகே அல்லது கடலுக்கடியில் நடைபெறுமானால், கடல் நீரின் சமநிலை பாதிக்கப்படுவதனால் சுனாமி ஏற்பட்டு, கடல் தன்னை சமப்படுத்திக் கொள்கிறது. புவியில் வெப்பம் அதிகமாகும்போது, நீரானது ஆவியாகி, மேகமாய் மாறி  மழையைப்பொழிந்து, பூமியைக்குளிரச் செய்கிறது, பூமியில் அதிகமாக பாயும் நீர், வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடி மீண்டும் கடலிலே கலக்கிறது  - நமக்கு இது கண்கூடானது. உலகத்தை இயக்கும் பஞ்ச பூதங்கள் அதன் "முழுமைத்தன்மை" யினை நிலைக்கச்செய்யும் வகையில் நடத்தும் நிகழ்வுகள்தான்  இவை  யாவும்.

இதே வகையாக, நமது உடலிலும், பஞ்சபூதங்கள் ஒரு வரிசைக்கிரமமாக, ஒன்றின் இயக்கக்திற்கு மற்றது காரணமாக அல்லது உறுதுணையாக இருக்கிறது. - அதே நேரத்தில் மற்றொரு வரிசையில் ஒன்று மற்றொன்றை தனது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்துக்கொண்டு ஒரு "முழுமை"யினை நிலை நிறுத்தும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்த "முழுமை" எனப்படுவது வேறொன்றும் அல்ல;    நமது "நலம்" எனும் "ஆரோக்கியம்" தான்.

ஆக்கும் சுற்று 


"நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்" என்ற வரிசையில் ஒன்றிலிருந்து அடுத்ததின் உருவாக்கம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

         நெருப்பு குளிர்ந்து நிலமாகிறது (மண்ணாகிறது)
         நிலத்தினுள் உருவாவது  உலோகம்
         உலோகத்தை உருக்கினால் கிடைப்பது திரவம் - அதாவது நீர்
         நீரின் தன்மையால் வளருவது மரம்
         மரங்கள் உராய்வதினால் உண்டாவது  நெருப்பு
        மறுபடியும் நெருப்பு குளிர்ந்து நிலமாகிறது......

தவிர,  ஒரு மூலகக்திலிருந்து  மற்றொன்று உருவாவதால், உருவாக்கும் மூலகம் "தாய் மூலகம்"  எனவும் உருவாக்கப்பட்ட மூலகம் "சேய் / மகன் மூலகம்" என அழைக்கப்படுகிறது.

       "தாய்" மூலகம்             "சேய்" மூலகம்

            நெருப்பு                         -      நிலம் 
            நிலம்                              -      உலோகம்
            உலோகம்                     -      நீர் 
            நீர்                                     -      மரம்
            மரம்                                -      நெருப்பு



  


இவ்வுருவாக்கம், ஒரு தொடர் நிகழ்வாக அமைவதால், இது "ஆக்கும் சுழற்சி " (GNERATING CYCLE)  அல்லது சீனத்தில் Sheng Cycle  எனப்படும்.

அழிக்கும் சுற்று 


சில பல காரணங்களால், ஒரு மூலகத்தின் செயல்பாடு தேவைக்கு மேல் அதிகமாகும் பொது, அம்மூலகத்தின் "தாயின் தாய் மூலகம்", அதனை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

இவ்வகையில் -

  மரம் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து நிலத்தை ஆக்கிரமிக்கிறது.
  நிலமானது, தேவைக்குமேல்  நீரினை -  உறிஞ்சிக் கொள்கிறது.
  நீர் அதிகமாகி நெருப்பினை அணைத்து விடுகிறது.
  நெருப்பு அதிகமாகி உலோகத்தை உருக்கி விடுகிறது
  உலோகமாகிய காற்று அதிகமாகி மரத்தை சாய்த்து விடுகிறது.




இந்தச்சுழற்சி "அழிக்கும் சுற்று" (DESTRUCTIVE CYCLE) அல்லது சீனத்தில் Co Cycle  எனப்படும்.ஒரு மூலகம் மற்றொன்றினை அழிக்க முற்படும் செயல், கட்டுப்படுத்தும் வகையிலான  செயலாகவும் அமைகிறது. எனவே இது "கட்டுப்படுத்தும் சுற்று" எனவும் சொல்லப்படுகிறது.


எதிர் வினை சுற்று

 


ஒரு மூலகத்தின்  "சேயின் சேய் மூலகம்"  அம்மூலகத்தின் மீது எதிர் வினை  புரியவும் செய்கிறது.

அதாவது,

நிலம், தன்னை ஆக்கிரமிக்கும் மரத்தை வளரவிடாமல் தடுக்கிறது.
நீர் பெருகி நிலப்பகுதியை மூடிவிடுகிறது.
நெருப்பு நீரினை ஆவியாக்கி விடுகிறது.
உலோகமாகிய காற்றானது நெருப்பை அனைத்து விடுகிறது.
மரங்கள், அதிகமாக வீசும் காற்றை தடுத்து விடுகின்றன.

பஞ்சபூதங்களின் மேற்கூறிய சுழற்சி முறைகள் மிகவும் முக்கியமானவை. அக்குபஞ்சரின் சிறப்பு அம்சமான "நாடிப்பரிசோதனை"யின்படி, சிகிச்சைக்கான புள்ளிகளை தேர்வு செய்ய, இத்தத்துவம் மிகவும் அவசியமானது. பல சந்தர்ப்பங்களில், ஒரே ஒரு அக்குபஞ்சர்  புள்ளியை மட்டும் தேர்வு செய்து சிகிச்சையளித்து, பல பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும். பிரச்சினையின் வெகு ஆரம்பக்கட்டத்திலேயே அதை இனம் கண்டு, அதை வளரவிடாமல் தடுக்கும் வழியும், அக்குபஞ்சர் சிகிச்சையில் நிறைய உண்டு.



                                                         "வருமுன் காப்போம்"

 

 

 

 

Wednesday 7 May 2014

அக்குபஞ்சர் - பஞ்சபூதங்கள்

அண்டமும்  பிண்டமும் ஒன்றே


ஆகாயம், நெருப்பு, நிலம், காற்று, நீர் - ஆகிய பஞ்சபூதங்கள்தான் "அண்டம்" (GALAXY-MACROCOSM) எனப்படும் பிரபஞ்சத்தின் அணுக்கூறுகள் ஆகும். "அண்டமும்  பிண்டமும் ஒன்றே" - என்ற வகையில், அண்டத்தின் ஒரு துகளாகிய பூமியாகிய உலகமும், உலகத்தின் ஓர் அங்கமாகிய,  மனிதராகிய (HUMAN-MICROCOSM)   நாமும்   அதே ஐந்து  மூலக்கூறுகளால்  உருவாக்கப்  பட்டவர்கள்தாம்.

ஐந்து மூலகங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒரு முழுமையான சக்தியாக - நமது பிரபஞ்சம், உலகம், நமது உடல் ஆகியவற்றில்  "உயிர் சக்தி" யாக ஓடி இயக்கிக்கொண்டிருக்கிறது.

சீன அக்குபஞ்சரில், பஞ்ச பூதங்களில், "ஆகாயம்"  மூலகத்தை  "மரம்" என்றும் "காற்று" மூலகத்தை  "உலோகம்" என்றும் உருவகப்படுத்தியுள்ளார்கள்.

எனவே,
      மரம்  (Wood)
     நெருப்பு  (Fire)
     நிலம்  (Earth)
     உலோகம் (Metal)
     நீர்  (Water)
    
ஆகிய ஐந்தும் நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் "பஞ்சபூதங்கள்" அல்லது "ஐந்து மூலகங்கள்" ஆகும்.

நமது உடலின் உயிர்சக்தி நிலைத்திருக்கும் வண்ணம் செயல்படும் பன்னிரண்டு பிரதான உள்ளுறுப்புகள், அவற்றின் இயல்பினை கருத்தில் கொண்டு, பஞ்சபூதங்களின் தன்மை கொண்டதாக வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.

யின்-யாங் தத்துவப்படி, ஒவ்வொரு மூலகத்திலும் ஒரு யின் மற்றும் ஒரு யாங் உறுப்பு உண்டு. யின்-யாங் உறுப்புகள்  "சாங்க் - ஃபூ" - (ZANG-FU) உறுப்புகள் எனவும் சொல்லப்படும்




"நெருப்பு"  மூலகத்தில் மட்டும்  இரண்டு  ஜோடி  உறுப்புகள் அமைகின்றன.

"இருதயம்" மற்றும் அதன் இணை உறுப்பான "சிறுகுடல்" ஜோடியினை "பெரிய நெருப்பு" - BIG FIRE - எனவும், "இருதய மேலுறை" மற்றும் அதன் இணை  உறுப்பான "மூவெப்பமண்டலம்"  ஜோடியினை "சிறிய நெருப்பு" - SMALL FIRE - எனவும் நாம் பிரித்தறிந்து கொள்ளலாம்.


Wednesday 30 April 2014

"யின் -யாங்" - தத்துவம்

நமது சிவ-சக்தி தத்துவத்தை  அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான்  சீன "யின் -யாங்"  (yin-yang)-தத்துவம்   எனலாம்.  "யின்" என்பது நமது உடலில் அமைந்துள்ள நெகட்டிவ் (-ve) எனப்படும்  "எதிர்மறை சக்தி" மற்றும் "யாங்" என்பது நமது உடலில் அமைந்துள்ள பாசிடிவ் (+ve) எனப்படும் "நேர்மறை சக்தி" ஆகும். "யின் -யாங்" இவ்விரண்டின் நுண்ணியமான  "சேர்ந்து இயங்கும்" தன்மைதான்   நமது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாக செயல்படுகிறது.

யின்-யாங் செயல்பாட்டின் ஒத்திசைவு கெடுமானால், நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு,  நமது உயிர் சக்தி ஒட்டப்பாதையில் தடைகள்  ஏற்பட்டு உடல்  நலக்குறைவு உண்டாகிறது.

அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு சரிசெய்யப்பட்டு சக்தி ஒட்டப்பதைகளில் ஏற்பட்டுள்ள தடை அகற்றப்படுவதன் மூலம் யின்-யாங் ஒத்திசைவு பாதுகாக்கப்பட்டு, உடல் நலம்  சீராகிறது.

"உடல் நலக்குறைவு" என நாம் கருதும் பல குறிகள், நமது உடலினுள் "யின்-யாங்"   இணைந்து நடத்தும்   போராட்டத்தின் விளைவே தவிர, அவை நோயல்ல. இதனை தனிப் பதிவாக பார்ப்போம்.



யின்-யாங் குணங்கள்:

       யின்                  -            யாங்

நெகட்டிவ்                  -   பாசிடிவ்
பெண் தன்மை         -     ஆண் தன்மை
கெட்டியானது         -    பை போன்று குழிவானது
குளிர்                           -   வெப்பம் 
இருட்டு                      -    வெளிச்சம்
கருப்பு                         -    வெள்ளை
மந்தம்                         -    சுறுசுறுப்பு
இடது                           -    வலது


யின்-யாங் செயல் தன்மைகள்


இரவில்லாமல் பகலில்லை - பகலில்லாமல் இரவில்லை; வெளிச்ச மில்லாமல்  இருட்டில்லை- இருட்டில்லாமல் வெளிச்சமில்லை. அதுபோல்  "யின்" மட்டும் தனியாகவோ அல்லது "யாங்" மட்டும் முழுவதும் தனியாக இருப்பதுமில்லை - இயங்குவதுமில்லை.
எந்த ஒரு "யின்"னும் சிறிதளவாவது "யாங்" இல்லாமல் இருப்பதுமில்லை - அதேபோல் எந்த ஒரு "யாங்"கும் சிறிதளவாவது "யின்" இல்லாமல் இருப்பதுமில்லை.

இரண்டும் எப்போதும் "சம அளவு"  "நிலையாக" இருப்பதில்லை.காலை, பகல், மாலை, இரவு, மற்றும் உடலின் செயலாக்கம் - இவற்றுக்கேற்ப அளவு மாறிக்கொண்டே இருக்கும்.

இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராக - ஆனால் ஆதரவு தரும் வகையில் செயல்படுகின்றன.

ஒன்றின் இயக்கம் அதிகமாகும் போதோ அல்லது குறையும் போதோ-  மற்றொன்றின்  இயக்கம் அதை நிலைப்படுத்தும் வகையில், பூர்த்தி செய்யத்தக்கதாக இருக்கும்.

உடல் நலத்தை நிலைப்படுத்தும் ஒரே குறிக்கோளுடன் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும்.

"யின்- யாங்" தத்துவம்  - ஒரு சாகச வித்தை
 

ஒரு எளிதான உதாரணம், "யின்-யாங்"கின் இயக்கத்தினை தெளிவுறச்செய்யும் முயற்சியாக தருகிறேன். எந்தவித பிடிமானமும் இல்லாமல் ஒருவர் கம்பியின் மீது நடக்கும் சாகசச்செயலை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். அவர் நடக்கையில், சமநிலை பாதிக்கப்படும்போது, புவிஈர்ப்பு விசையினை சரிப்படுத்த அவர் எடுக்கும் முயற்சியை நினைவுகூருங்கள்.

இடப்பக்கம் சாய நேரும்போது, வலப்பக்கம் சற்று உடலை வளைத்து, கூடவே வலது காலினை சற்று உயர்த்தி, கம்பிக்கு  வலது பக்கமாக எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு, உடல் சம நிலைப்படும் அதேகணமே, வலது காலை இறக்கி புவி ஈர்ப்பை சமணம் செய்கிறார். சிறிது கூட இடைவெளி இல்லாமல் நடைப்பயணம் முடியும் வரை அவரது இட-வலது போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் - ஒருவரின் வாழ்க்கை முழுவதும் அவரது உயிரை காப்பாற்றும் முயற்சியாக அவரது  'யின்-யாங்" நடத்தும் போராட்டத்தைப் போலவே.

    

                                                 "வருமுன் காப்போம்"


Sunday 27 April 2014

அக்குபஞ்சர் - உயிர் சக்தி ஓட்டம்

ஆரோக்கிய நிலை 


பஞ்சபூதங்களான   - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் நமது உடல் இயங்குகிறது. ஐந்து மூலகங்களும் -  தமது, இயல்பை மீறாத, கட்டுக்கோப்பான முறையில்,  சீராக  செயல்படும்போது.  நமது "உயிர் சக்தி ஓட்டம்" (Flow of Bio Electric Energy) செவ்வனே நடைபெறுகிறது.  அதுதான் "ஆரோக்கிய நிலை".

இந்த ஆரோக்கிய நிலை தொடர்ந்து நீடிக்க நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பான "செல்"கள் யாவும் தமக்குரிய வேலையை சரிவரச் செய்து செய்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு - நமது உடலின் ஒவ்வொரு "செல்"லுக்கும், பிராணவாயுவும், பிற உயிர்ச்சத்துக்களும் தடையின்றி கிடைத்தாக வேண்டும்.

நமது உடலானது - சுவாசம் மற்றும் உணவு மூலமாக,  பிராணவாயு மற்றும் உயிர்ச்சத்துக்களை, உட்கிரகித்து, ஜீரணித்து, "சக்தி மாற்றம்"  செய்யும்  வேளையில் - திட, வாயு, மற்றும் திரவக்  கழிவுகள் உண்டாகின்றன. இந்தக் கழிவுகள் அவ்வப்போது வெளியேற்றப்பட வேண்டும். உடலில் கழிவுகளின் தேக்கம் தான்,  உடல் நலக் குறைவின்  மிக முக்கியமான காரணியாகும்.

இவ்வாறு, உட்கிரகித்தல் மற்றும் வெளியேற்றுதல் ஆகிய செயல்கள், எந்த ஒரு அக  மற்றும் புறக்காரணிகளாலும் தடைப்படுத்தப்படாமல் ஒழுங்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் நமது "உயிர் சக்தி ஓட்டத்தில்" எந்தவித பாதிப்பும் இல்லை.

ஏதாவது ஒரு காரணத்தால், பஞ்சபூதங்கள் எனப்படும்  - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று  - ஆகிய ஐந்து மூலகங்களில், ஏதேனும் ஒரு மூலகத்தின் செயல்பாடு, சற்றேனும் ஏறக்குறைய இருப்பின் "உயிர் மின் சக்தி ஓட்டத்தில்" தடை ஏற்படுகிறது. அந்த தடையினால் ஏற்படும் உடல் நலப் பாதிப்பினை, நாம் "வலி" "எரிச்சல்" "வீக்கம்", "மரத்துப்போகுதல்" என பல அறிகுறிகளாக உணருகிறோம்.


அக்குபஞ்சர் புள்ளிகள் 


நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகிய ஐந்து மூலகங்கள் -  பிரபஞ்சத்திலும் சரி, நமது உடம்பிலும் சரி - தனித்தனியாக இயங்குவதில்லை - இயங்கவும் முடியாது. அவை ஒன்றுடன் ஒன்றாக இணைந்து, பிணைந்தே செயலாற்றுகின்றன. எந்த ஒரு மூலகமும், சரியான முறையில் இயங்க வேண்டுமென்றால் மற்ற அனைத்து மூலகங்களின் ஆதரவும் வேண்டும். எனவே,  எந்த  ஒரு  மூலகத்தின்  சக்தி  ஒட்டப்பாதையிலும்  மற்ற  அனைத்து  மூலகங்களின்  "பிரதானமாக இயங்கும்  இடங்கள்", அதாவது " அக்குபஞ்சர் புள்ளிகள் "  அமைந்திருக்கும்.


அக்குபஞ்சர் / அக்குபிரஷர் 


அக்குபஞ்சரின் தனிச்சிறப்பான நாடிப்பரிசோதனை மூலம்,  எந்த மூலகத்தின் "சக்தி ஒட்டப்பாதையில்" தடை ஏற்பட்டுள்ளது - அதற்கு காரணமான  மற்றொரு மூலகம் எது  -  என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

எந்த  மூலகத்தின் "உயிர் சக்தி ஓட்டப்பாதையில்"  "எந்த மூலகப் புள்ளியில்" தடை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. தடைகளை அகற்றும் வண்ணம், மெல்லிய   ஊசியினைச்  செலுத்தி  சிகிச்சை தருவது -  அல்லது  விரல்களால் அழுத்தம் தந்து முறைப்படி சிகிச்சையளிப்பது "அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர்"  சிகிச்சை  எனப்படும்.


உணவு - உடல்உழைப்பு -  உறக்கம் 

"உயிர் சக்தி ஓட்டப்பாதையில்"  தடைகள் ஏற்பட்டு, உடல் நலத்தில் பிரச்சினை வந்த பிறகுதான் சிகிச்சை தர வேண்டுமா? உடல் நலக் குறைவு ஏற்படாமல், அதாவது "சக்தி ஒட்டப்பாதையில்" தடைகள் ஏற்படாவண்ணம்  பாதுகாத்துக்  கொள்ள இயலுமா?

நிச்சயமாக உண்டு. நமது முன்னோர்கள் நமக்கு நிறைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தமான நிறைய விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறார்கள். அவற்றில் பல - ஆசார அனுஷ்டானங்களாக இருக்கும் - அல்லது பக்தியோடு இணைந்த பழக்க வழக்கங்களாக இருக்கும். மற்றும் நிறைய குறிப்புகள் கலாச்சாரம் சார்ந்ததாக இருக்கும்.

பரபரப்பான இந்த வாழ்க்கையில் அவற்றை நாம் கிட்டத்தட்ட முழுவதுமாகவே தொலைத்து விட்டோம். புதிய கண்டுபிடிப்புகளால் நமக்கு நிறைய நேரம் மிச்சமாகிறது. ஆனால் கிடைக்கும்  நேரத்தை முறையாக பயன் படுத்துகிறோமா? உடல் உழைப்பு குறைவதோடு மட்டுமல்லாது, மன அழுத்தம் கூடும் வகையில் தான் நமது தினசரி வாழ்க்கைமுறை மாறிக்கொண்டிருக்கிறது.

காலத்திற்கு தகுந்தாற்போல் நாம் மாறிக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை தவற விடலாமா?

உணவு, உடல்உழைப்பு, உறக்கம் - இம்மூன்றையும் நெறிப்படுத்தி முறைப்படுத்தினால் மட்டுமே நீடித்த ஆரோக்கியம் கிட்டும்.

எனினும் அவ்வப்போது, நாடிப்பரிசோதனை செய்துகொண்டு, எளிதான முறையில்,  மெல்லிய அழுத்தமாக  "அக்குபிரஷர்"  மட்டுமே தந்து  உடல் நலத்தை பாதுகாக்கலாம்.


                                                  " வருமுன் காப்போம்"





Monday 21 April 2014

இரைப்பை - வயிறு - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல்.

இரைப்பை - அமைப்பு 


ஆங்கில எழுத்து "J" - இன்  வடிவத்தையொத்த, முழுவதும் தசைகளாலான, சுருங்கி விரியும்  தன்மையுடையது இரைப்பை. நன்கு வளர்ந்த ஒருவரது இரைப்பையின் கொள்ளளவு மிகவும் சுருங்கிய - உணவு எடுத்துக்கொள்ளாத - நிலையில் சுமார் 50 மிலி- யாகவும்,  உணவு அருந்திய நிலையில்  கொள்ளளவு சுமார் 1500 மிலி - யாகவும் இருக்கும். அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொண்ட நிலையில் சுமார் 4000 மிலி அளவுவரை கூட விரியும் தன்மையுடையது.

"FUNDUS " எனப்படும் உதரவிதானத்தை ஒட்டிய (இடது பக்க) மேற்புடைப்பு
உடல் பகுதி
பைலோரிக் அறை
பைலோரிக் குழாய் பகுதி

     - என நான்கு பகுதிகளாக பிரித்து அறியப்படுகிறது - இரைப்பை.

இரைப்பையானது,  உட்புறச்சுவரான "ம்யூகோசா" உள்ளிட்ட நான்கு அடுக்கு தசைச்சுவர்களைக்கொண்டது. உணவுக்கேற்ப - இரைப்பைநீர், மற்றும் அமிலங்கள் சுரப்பதற்கு ஏற்பவும், உணவை அரைக்கவும்,  அரைக்கப்பட்ட உணவினை சிறுகுடலுக்குள் செலுத்துவதற்குமாக - அமைந்திருக்கும் மூன்று தனித்தன்மை  வாய்ந்த தசை அமைப்புகள், இரைப்பையின் சிறப்பாகும்.

கார்டியாக் திறப்பு எனும் சுருக்கு தசை இரைப்பையின் ஆரம்பமாக அமைந்திருப்பது போல், இரைப்பையின்  முடிவில் பைலோரிக் சுருக்கு தசை, சிறுகுடலின் நுழைவாயிலாக அமைந்துள்ளது.

இரைப்பை - சுரப்புகள் - செயல்பாடுகள்


நாம் உண்ணும் உணவினை ஜீரணிக்க நாளொன்றுக்கு சுமார் 1.5 லிட்டர் இரைப்பை நீர் அல்லது ஜீரண நீர்  சுரக்கின்றது. ஜீரண நீரில் 99.5% நீரும்  0.5% நொதியங்களும் அடங்கியுள்ளன. உணவுக்குழாயிலிருந்து பெறப்பட்ட உணவுடன்  மேலும் ஜீரண நீர் கலந்து, ஒரு நல்ல கலவை இயந்திரம்  போல செயல்படுகிறது இரைப்பை. இரைப்பையின் கடைதல் ( churning ) போன்ற அசைவுகள்  உணவை  மேலும் சிறு துகள்களாகச் செய்கின்றன

ஜீரண நீரில் உள்ள ஹைடிரோகுளோரிக் அமிலம், மற்றொரு சுரப்பான "பெப்சினோஜென்" எனும்  நொதியத்தை "பெப்ஸின்" ஆக மாற்றுகிறது. பெப்ஸின் புரோட்டீன் எனும் புரதச் சத்தின் மீது வினை புரிந்து  ஜீரணிக்க வகை செய்கிறது.

கார்போஹைடிரேட் எனும் மாவுச் சத்து, மற்றும் கொழுப்புச் சத்துக்கள், சிறு குடலில்தான்  உறிஞ்சப்படுகின்றன. இரைப்பையில் தண்ணீர், மது மற்றும் சில இரசாயனங்கள், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள்,  குறைந்த  அளவில் உறிஞ்சப்படுகின்றன.

Intrinsic factor - எனும் ஒரு சுரப்பு,  விட்டமின் B 12 சத்தினை குடல் உறிஞ்சுவதற்கு ஏற்ப வழி  வகுக்கிறது.

ஹைடிரோகுளோரிக் அமிலம் - உணவுடன் கலந்து வரும் சில கெட்ட நுண்ணுயிரிகளை  கொன்றுவிடுவதுமட்டுமல்லாமல், உடலுக்கு தீங்கு செய்யும் சில இரசாயனங்களை  செயலிழக்கச்செய்கிறது.

" கேஸ்டிரின் " - எனும் ஹார்மோன் சுரப்பு, இரைப்பை ஜீரணநீர் செவ்வனே சுரக்கச் செய்கிறது

உணவுக்குழாயிலிருந்து பெறப்பட்ட -  வாயிலிட்டு அரைக்கப்பட்ட உணவு, மேலும் கூழாக்கப்பட்டு,  பைலோரிக் திறப்பு மூலம் சிறிது சிறிதாக சிறு குடலுக்கு அனுப்பப்படுகிறது.

வயிற்றுப்பொருமல்- வயிறு உப்புசம் - ஏப்பம் - நெஞ்செரிச்சல்


பொதுவாக, உணவு அருந்திய பின் அளவாக ஏப்பம் வருவது இயற்கை. ஆனால், ஒரு சிலருக்கு,  வயிறு  உப்பிக்கொண்டு,  அதிக ஏப்பம் வருவது ஏன்?  - கொழுப்பு பதார்த்தங்கள் அதிகமாக எடுத்துக்கொள்வது  ஒரு முக்கிய காரணம்.  சோடா போன்ற கார்பனேட்டெட் பானங்கள் மற்றும் வாயுவை அதிகரிக்கச்செய்யும்  உணவு வகைகள் - அதிக ஏப்பம் வருவதற்கு மற்றொரு காரணம்

அவசர அவசரமாக சாப்பிடுவது - உணவை மெல்லாமல்  அப்படியே விழுங்குவது - பேசிக்கொண்டே  உணவு அருந்துவது, ஆகியவையும் காரணங்களாகும். அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொண்டு,  இரைப்பையை திணறச்செய்வது - மிக முக்கியமான  காரணம்.

இரைப்பையின் "பண்டஸ்" என்ற இடது பக்க மேல் புடைப்பு, நாம் ஒரு நேரத்தில் எவ்வளவு உணவு  எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கிறது. அந்த மெக்கானிசம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.

இறைவன், ஒவ்வொருவருக்கும் அவரவரின் உடலமைப்புக்கு தகுந்தவாறே அணைத்து  உறுப்புக்களையும் தந்திருக்கிறார். கைகள், கால்கள், விரல்கள் மற்றும் யாவும் அவரவர் உடல் சிறப்பாக இயங்கும் வகையில்  கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அவரவர் கை அளவிற்கு அவரவர் உடம்பு எட்டு ஜாண் அளவு தான். சந்தேகமிருந்தால் அளந்து  பார்த்துக்கொள்ளுங்கள். வயிறு (இரைப்பை) ஒரு ஜாண் அளவு தான். வயிற்றின் கொள்ளளவு உடலின் தேவைக்கேற்ப டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

நாம் முறையாக உணவு அருந்தும்போது - அதிகமாக வாயுவை அதிகரிக்கச்செய்யாத வகையில் உணவினை தேர்ந்தெடுத்து  மற்றும் உதடுகளை மூடி, நன்றாக உமிழ்நீர் கலந்து சுவைத்து, மென்று உண்ணும் போது - இரைப்பையில் உணவு உடலின் தேவைக்கேற்ற  கொள்ளளவு அடைந்த  நிலையில் - இரைப்பையானது, இதற்கு மேலும் உணவு தனக்குள் வந்தால், தான் சிரமப்பட வேண்டியதிருக்கும்  என்பதை நமக்கு உணர்த்துவதற்காக, தான் விரிவடைவதை சற்று நிறுத்திக்கொண்டு,  "பண்டஸ்" பகுதியில்  இருக்கும் காற்றினை அதாவது வாயுவை ஏப்பமாக வாயின் வழியே வெளியேற்றுகிறது. அது ஒரு திருப்தியான ஏப்பமாக இருக்கும்.

அந்த ஏப்பத்தின் " அர்த்தம் " என்னவென்று புரிகிறதா?  "இதுதான் அளவு, இவ்வளவு தான் என் திறன்,  இதற்குமேல் என்னால் இயலாது, நிறுத்திக்கொள் இத்துடன் "  என்று நமக்கு உணர்த்துகிறது அந்த ஏப்பம்.  ஓரளவு நன்றாக உணவு அருந்திய நிலையில்  நமது உடல் நம்முடன் நடத்தும் உரையாடல் தான் அந்த  ஏப்பம் - வயிற்றின் மொழி. அதனைப் புரிந்து கொண்டு நாம் நடந்தால் வயிற்றுக்கு ஏது துன்பம்?

வயிறு துன்பப்படுவதற்கு மற்றொரு முக்கியமான காரணம்,  சாப்பிடும் பொழுது - அல்லது சாப்பிட்ட  உடனே - அதிக நீர் அருந்துவது ஆகும்.

உணவுடன் தண்ணீர் எவ்வளவு அருந்தலாம்?


உணவு அருந்துவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே நீர் அருந்துவதை நிறுத்தி விடுவது மிகவும்  நல்லது. அப்போதுதான் இரைப்பையில் சுரக்கப்படும் ஜீரணநீர் தரமானதாக இருக்க வாய்ப்பு உண்டு.

மேலும், உணவு அருந்தும் போது இடை இடையே நீர் அருந்துவதும் கூடாது. உணவு அருந்தி முடிந்த  பின்னரும் நிறைய நீர் அருந்துவதும், இரைப்பையின் செயலை முடக்கச் செய்து வயிறு உப்புசம் - அதிக  ஏப்பம் - ஆகியவற்றுக்கு காரணமாகின்றது.

உணவு அருந்தும் போது தாகம் எடுத்தால் என்ன செய்வது? தாகத்தை அலட்சியம் செயலாகாது. தண்ணீர்  குடித்தேயாக வேண்டும். ஆனால் - உணவை நன்றாக மென்று, நிறைய உமிழ்நீர் கலந்து நிதானமாக   விழுங்கும்போது தாகம் மற்றும் விக்கல் எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

உணவு அருந்தி முடிந்த பின்னர் அதிக நீர் அருந்தினால், இரைப்பையின் அசைவுகள் கட்டுப்படுத்தப்பட்டு  ஜீரணக்குறைபாடு ஏற்படுகிறது. வயிறு உப்புசம் ஏற்படுகிறது. கூடவே எடுத்துக்கொண்ட உணவில் அதிக  கொழுப்பு பதார்த்தங்கள் இருக்குமேயனால், வயிற்றுப்பொருமல் ஏற்படுவதுடன் அதிக ஏப்பம் வரவும்  காரணமாகிறது.

உணவை நன்றாக மென்று, நன்கு உமிழ்நீர் கலந்து,  நிதானமாக, அளவாக உணவு அருந்தி முடித்திருக்கும்  பட்சத்தில், அரை டம்ளர் அல்லது அதற்கும் குறைவாகவே நீர்  அருந்தினால் போதுமானது.

நாம் அருந்திய உணவினை,  இரைப்பை நன்கு அரைத்து, சிறுகுடலில் நடைபெறவிருக்கும் ஜீரணத்திற்கு  தயார்ப்படுத்துவதற்கு, சுமார் ஒன்றரை மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை கூட ஆகலாம். அந்த  ஜீரணம் நடைபெற்றுக்கொண்டிக்கும் நேரத்தில் நாம் அதிக தண்ணீர் அருந்துவோமேயானால்,  இரைப்பையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அஜீரணக் கோளாறுகள் அனைத்தும் ஏற்பட வாய்ப்புண்டு.

இரைப்பையில் ஜீரணம் நடந்து கொண்டிருக்கும்பொழுதில், இடையில் ஏதாவது காபி, டீ போன்ற  பானங்கள், அல்லது நொறுக்கு தீனி எடுப்போமேயானால், வயிறு மிகவும் குழம்பிய நிலையில், என்ன  செய்வது என்று தெரியாமல், சரியாகச் செயல்பட இயலாமால் ஆகிவிடும்.

பிறகென்ன? அனுபவிக்க வேண்டியது தான் !

நிறைய உணவு + அதிக தண்ணீர் = நெஞ்செரிச்சல்


இரைப்பையில் உணவு நிரம்பிய நிலையில் அதிக தண்ணீர் அருந்தினால் ஜீரணக்கோளாறு மட்டுமல்ல,  நெஞ்செரிச்சல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் உள்ள "கார்டியாக் ஸ்பிங்க்டர்" என்னும் சுருக்கு  தசையினைத் தாண்டி உணவுக் குழாயினுள், இரைப்பையில் அரைகுறையாக அறிக்கப்பட்ட உணவுக்  குழம்பு எட்டிப் பார்க்கிறது. இந்த உணவுக் குழம்பி‌ல் இப்போது அமிலம் கலக்கப்பட்டிருக்கிறது.

இரைப்பையின் உட்புறச்சுவர், தான் சுரக்கும் அமிலத்தை தான் தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டது. எனவே அங்கு  பாதிப்பில்லை. ஆனால், உணவுக்குழாயின் உட்பக்கத்தில் உள்ள சளிச்சவ்வுப்படலம்  அமிலத்தின் அரிக்கும் தன்மையை, தாங்கிக்கொள்ள இயலாமல், பாழடைகிறது. இந்த நிகழ்வைத்தான்  நாம் நெஞ்செரிச்சலாக உணருகிறோம்.

நெஞ்செரிச்சல் - திரும்ப திரும்ப நிகழும்போது, அது முற்றினால் "ஹயாடல்  ஹெர்னியா" - மேலும்  முற்றினால் "கேன்சர்" உருவாகவும் வாய்ப்பு உண்டென்று சொல்லப்படுகிறது.

வயிறு முட்ட முட்ட " உணவு",  " குளிர் பானங்கள்", " உணவு அருந்திய பின் அதிக  தண்ணீர்" - என  எதுவாக இருந்தாலும், அனைத்தும் ஒரே பிரச்சினைக்குத்தான் காரணமாகிறது,  அது -  நெஞ்செரிச்சல்.

தண்ணீர் எப்போது அருந்தலாம்?


எப்போது தாகம் எடுத்தாலும்  அதை அலட்சியம் செய்தல் ஆகாது. கண்டிப்பாக நீர் அருந்தியே  ஆகவேண்டும் பொதுவாக, உணவு உட்கொண்ட பின், சுமார் ஒரு மணி நேரம் கழித்து, இரைப்பைக்கு தண்ணீர்  தேவையானால், நமக்கு தாக உணர்வு வரும். அப்போது ஒரு டம்ளர் நீர் அருந்தலாம்.

இடையில் தாகம் எடுக்காதபட்சத்தில், உணவு உண்ட இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் கழித்து, அரைக்கப்பட்ட உணவு சிறு குடலுக்குள் செலுத்தப்படும் நேரத்தில், கண்டிப்பாக தாக உணர்வு வரும்.  அப்போது இரண்டு டம்ளர் வரை நீர் அருந்தலாம் - அருந்த வேண்டும்.

பொதுவாக இட்லி, இடியாப்பம் போன்ற அரிசிமாவினால் அவித்து சமைக்கப்பட்ட உணவு( அளவாக  உட்கொண்டிருக்கும் பட்சத்தில்) ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்தில் இரைப்பையை கடந்து  விடக்கூடும். எண்ணெய் தடவி சுட்ட தோசை மற்றும் சப்பாத்தி ஜீரணமாக மேலும் அரைமணிநேரம்  அதிகமாகலாம்.  அரிசிசாதம், குழம்பு, காய்கனிக்கூட்டு என அமைந்த மதிய உணவு- காய்கனிகளின்  வேக்காட்டைப்பொருத்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை கேட்கலாம். எண்ணெய் மற்றும்  டால்டா சேர்த்து சமைக்கப்பட்ட , சைவ அசைவ பிரியாணி வகைகள் மூன்று முதல் நான்கு மணி நேரம்  வரை கூட எடுத்துககொள்ளக்கூடும்.

நாம் என்ன மாதிரியான உணவு எடுத்துக்கொண்டிருக்கிறோம்? அதனை இரைப்பை ஜீரணிக்க எவ்வளவு  நேரம் ஆகும்? - என்பதை ஒவ்வொருவரும் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்து, அறிந்து கொள்ள  வேண்டியது மிகவும் அவசியம்.

சில வகை உணவுடன் - சில உணவு வகைகள் அருந்தும் போது ஜீரணம் கெடுவதுடன் மொத்த  வயிற்றையும் பாதிக்கக்கூடும் என்பதால், ஒரே நேரத்தில் உணவாக எடுத்துக்கொள்ளக்கூடிய  உணவுப்பொருட்களை தேர்ந்தெடுப்பதில் கண்டிப்பாக கவனம் தேவை. எந்தெந்த உணவுடன் எந்தெந்த உணவினை சேர்த்து அருந்தக்கூடாது என்பதை நாம் தனிப் பதிவாகப் பின்னர் பார்க்கலாம்.

எப்போதும் தண்ணீர் அருந்தும்போது,  அண்ணாந்த வாக்கில் மட மடவென குடித்துவிடலாகாது.  தண்ணீருக்கென்று ஒரு தனிச்சுவை உண்டு.  அதை நாவில் உணரவேண்டும். ஒவ்வொரு மிடறாக வாயில்  ஊற்றி, உதடுகளை மூடி,  தண்ணீரை நாவினால் சுவைத்து, உமிழ்நீர் கலந்துதான் அருந்த வேண்டும்.

இரவு உணவு


பகலில் பசியறிந்து உண்ணுதல் எவ்வளவு முக்கியமோ, அதே போல் இரவு தாமதமாக உணவு உண்ணாதிருத்தல் மிகவும் முக்கியம்.  இரவு தாமதமாக உண்ணப்படும் உணவின் கழிவுகள், காலையில்  வெளியேறும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்பதால், பெருங்குடலில் மலக்கழிவுகள் தங்கிவிட  நேரிடுகிறது.  இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு, பல பிரச்சினைகள் உருவாக ஏதுவாகின்றது.

சிறுகுடல்- பெருங்குடல்:


உணவை நன்றாக  மென்று  உண்ணுதல்
பசியறிந்து உண்ணுதல்
உண்ட உணவு ஜீரணமானதை அறிந்து அடுத்த வேளை உணவு உண்ணுதல்
இரவு தாமதமாக உணவு உண்ணாதிருத்தல்
உணவுடன் அதிக தண்ணீர்  அருந்தாதிருத்தல்

       - என மேற்கூறிய அனைத்தையும் சரியாக கடைப்பிடிக்கும்போது, சிறுகுடல் மற்றும் பெருங்குடலின்  வேலைகள் எளிதாகின்றன. மேலும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க ஏற்படும் உந்துதல் உணர்வை மதித்து  நாம் நடப்போமேயானால் ஜீரணப்பாதையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

"வருமுன் காப்போம்"

அக்குபஞ்சர் என்றாலே - "வருமுன் காப்போம்"

"அக்குபஞ்சர் என்று தலைப்பு தந்துவிட்டு, வாய், உமிழ்நீர், உணவு ஜீரணம் - என்று போக ஆரம்பித்து  விட்டதே- அக்குபஞ்சரைப்பற்றி மேலும் எப்போது எழுத ஆரம்பிப்பதாக உத்தேசம்? " என்பது சில  நண்பர்களின் கேள்வி.

அக்குபஞ்சர் என்பது, உடல் நலப் பிரச்சினைகளை தீர்க்கும் சிகிச்சை முறை மட்டுமல்லாது, நோய்கள் நம்மை அண்டவிடா வண்ணம் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும், அற்புத சிகிச்சை ஆகும். "வருமுன் காப்போம்" - என்பதே நமது அக்குபஞ்சர் சிகிச்சையின் நிச்சயமான நோக்கமும் ஆகும்.

அக்குபஞ்சர் தத்துவப்படி, இரைப்பை "நிலம்" மூலகத்தின் ஓர் உறுப்பாகச் சொல்லப்படுகிறது.  இரைப்பை எனும் "மண்ணில்" போடும்  "விதையாகிய உணவு" நமது உடம்புக்கு தேவையான "சத்து" ஆக விளைகிறது என்பது உண்மை.

பொதுவாக, நமது ஜீரண மண்டலம் சரியாக செயல் பட்டாலே அறுபது முதல் எழுபது சதவிகித நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். எனவே, ஜீரண மண்டலத்தின் முக்கிய உறுப்புகளைப்பற்றியும், அவை செயல்படும் முறைகளைப்பற்றியும், சிறிதளவாவது நாம் அறிந்திருக்க  வேண்டியது அவசியமாகிறது. ஜீரணம் பற்றிய மிகவும் ஆழ்ந்த அறிவு எல்லோருக்கும் எளிதாக கிடைப்பதில்லை - அது அவசியமுமில்லை. ஓரளவு மேலோட்ட மாகவாவது தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

உணவு அருந்திய பின்னர், அது - சக்கையாக வெளியேறும் வரை நடைபெறும் அனைத்தும், நாம் உணராத வகையில், தன்னாலே நடைபெறும் " தானியங்கி" செயல்களாகும். நமது உடலின் "தன்னைத் தானே  குணப்படுத்திக்கொள்ளும் அற்புத சக்தி" சிறு சிறு பிரச்சினைகளை தானே சரிசெய்துகொள்ளும்.  ஆனால்,  ஜீரண மண்டலத்தில் ஏற்படும் அநேக பிரச்சினைகள், பல நாட்கள் கழித்தே நாம் உணரக்கூடியதாக  இருக்கும்.

குறைந்தது சுமார் பத்து  வருடங்களுக்கு முன்னர் வரை, நமது இல்லங்களில், உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் ஒரு "முறை" இருந்தது. ஆசார அனுஷ்டானங்கள் என்ற  பெயரில் நாம் கடைப்பிடித்த பல நடைமுறைகள் நல்ல  உடல்  ஆரோக்கியத்தையே  மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. அரிசிச்சாதம் ஓரளவு பொதுவாக இருந்தாலும், குழம்பு வகைகள் தினம் தினம் மாறிக்கொண்டே இருக்கும். ஒருமுறை வைத்த குழம்பு திரும்பவும் எட்டிப்பார்க்க குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களாவது  ஆகும்.

இரவில் நகம் வெட்டக்கூடாது, எண்ணெய் தேய்த்து குளித்த அன்று பகலில் தூங்கக்கூடாது, நொறுங்கத் தின்றால் நூறு வயசு, கூழானாலும் குளித்துக் கூடி,  கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கோயிலில்லா  ஊரில் குடியிருக்க வேண்டாம்  ...... இப்படி பல சொற்கள் - எப்போதும் வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவை அனைத்தும் சுத்தம், சுகாதாரம் - என உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் அனைத்தையும் அள்ளி அள்ளித் தரும் ஆலோசனைகளாகவே  இருக்கும்.

தற்போதுள்ள  பரபரப்பான  வாழ்க்கையில், அநேக இல்லங்களில் அத்தகைய ஆலோசனைகள், குடும்ப உறுப்பினர்களின் காதில் விழ வாய்ப்புகள் மிகவும் குறைவு. எந்த ஒரு சந்தேகம் என்றாலும், வலைத்தளத்தில் தேடவே நாம் முயற்சி செய்கின்றோம்.

வயிற்றின் முக்கியமான பிரச்சினைகளாகிய, வயிறு உப்புசம்  - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல் - ஆகிய பிரச்சினைகளை, உணவு இடைவேளை  மற்றும் உண்ணும் முறை ஆகியவற்றை சரியான முறையில்   கடைப்பிடித்தாலே தவிர்த்து விடலாம் என்பது நிச்சயமான உண்மை.

எனவே, அடுத்து நாம் பார்க்கப்போகும் தலைப்பு - இரைப்பை.

அக்குபஞ்சர் என்றாலே - "வருமுன் காப்போம்" 

Monday 14 April 2014

உணவுக்குழாய் - விக்கல் - நெஞ்செரிச்சல்

உணவுக்குழாய்


நாம் உண்ணும் உணவு, தொண்டையின் அடிப்பாகத்தில் ஆரம்பிக்கும்  உணவுக்குழாயின் அலை அலையாக இயங்கும் தன்மையால் (peristatic movement)  வயிற்றுக்குள் அனுப்பப்படுகிறது.

இரைப்பையின் ஆரம்பமாக அமைந்துள்ள "கார்டியாக் ஸ்பிங்க்டர்" (cardiac sphincter) எனும் சுருக்கு தசை துளையில் முடிவடையும் உணவுக்குழாயின் நீளம் சுமார் 25 செ. மீட்டர்.

உணவு அருந்தாத நிலையில் ஓய்வாக இருக்கும் உணவுக்குழாய், உணவின் வருகையால் தூண்டப்பட்டு,  மேலிருந்து கீழாக, ஒரே சீராக, அலை அலையாக சுருங்கி விரியும் தன்மையால், உணவினை  வயிற்றுக்கு கொண்டு செல்கிறது.

இந்த இயக்கம் எளிதாக நடைபெற, உணவுக்குழாயின் உட்புறத்தில் சுரக்கும், "ம்யூகஸ்" என்னும்  சளித்திரவம் துணை புரிகின்றது.

விக்கல்


நாக்கினால் தொண்டைக்குள் அனுப்பப்படும் உணவு, உணவுக்குழாயினுள் நுழைந்த மறுகணம் ஏற்படும் தொந்திரவில் ஒன்று விக்கல். விக்கலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஜீரண மண்டலம் சம்பந்தமான ஒன்றை மட்டும் நாம் இங்கே  பார்ப்போம்.

தொண்டையில், குரல்வளைப்பகுதியில் - மூச்சுக்குழலும், உணவுக்குழலும் பிரியும் இடத்தில், மூச்சுக்குழலுக்குள் உணவுத்துகள்கள் சென்றுவிடாமல் தேவைக்குத் தகுந்தாற்போல் திறந்து மூடும் தானியங்கி அமைப்பு "எபிகிளாடிஸ்" எனப்படும்.

நெஞ்சறை, மற்றும் வயிற்றறை - இரண்டையும் பிரிக்கும் தசைத்தட்டு "உதரவிதானம்" எனப்படுகிறது.

உணவு அருந்தும்போதும், நமது மூச்சு சீராக இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.  சுவாசம் சீராக நடைபெற,  நுரையீரல் சுருங்கி விரியும் வண்ணம் உதரவிதானம் ஏறி - இறங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

உணவினை நன்றாக மென்று, நிதானமாக விழுங்கும்போது ""எபிகிளாடிஸ்" செய்யும் பணிக்கு எந்தவித  தொந்தரவும் இல்லை.

உணவினை சரியாக மெல்லாமல், உமிழ்நீர் கலக்காமல், அவசர அவசரமாக அல்லது பெரிய கவளமாக விழுங்கும்போது,  குரல்வளையின்  இயல்பான தானியங்கிச் செயல்பாடு சற்றே குளறுபடியாக நிகழும்

இந்நிலையில், மூச்சுக்குழலினுள்  உணவு சென்று விடாமல் பாதுகாக்கும் "அனிச்சை செயலாக" எபிகிளாடிஸ்  மூடிக்கொள்கிறது.

மூடிக்கொள்ளும் அதே வேளையில், உதரவிதானமானது -  மூச்சை உள்ளிளுக்க வேண்டி, நுரையீரலை விரியச்செய்யும்  முயற்சியாக - கீழிறங்க முற்பட  -  எபிகிளாடிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள  காற்றுத்தடையினால் விக்கல் சப்தம்  எழுகிறது.

இந்த விக்கல் ஆபத்தானதா?  இந்த விக்கலை எவ்வாறு நிறுத்துவது?

மேற்சொன்ன காரணத்தினால் ஏற்படும் விக்கல் - மூச்சை சற்று நிதானப்படுத்தி விடச் செய்தாலே நின்று  விடும்.

தண்ணீர் அருந்தினால் நின்று விடுகிறதே?  அது எப்படி?

தண்ணீர் அருந்தும் வேளையில், மூச்சு நிதானப்படுகிறது என்பதுதான் அங்கே உண்மை.

அதிர்ச்சி தரும் சிறு பயமுறுத்தல் கூட, மூச்சினை சற்று நிறுத்தி, நிதானப்படுத்துவதால், விக்கல்  நின்றுவிட ஏதுவாகிறது.

எந்தவித விக்கலானலும் -   இரண்டு  அல்லது மூன்று அக்குபஞ்சர் புள்ளிகளை  தூண்டுவதன்மூலம்  நிறுத்திவிட அதிக வாய்ப்பு உள்ளது.

உணவை நன்றாக மென்று, நிதானமாக விழுங்கும்போது விக்கல் ஏன் வருகிறது?

வருமுன் காப்போம்.

நெஞ்செரிச்சல் - முற்றினால் - ஹையாடல் ஹெர்னியா


உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது "கார்டியாக் ஸ்பிங்க்டர்"  அல்லது  "LES" எனப்படும் "Lower Esophageal  Sphincter ".

உணவுக்குழாயின் இயக்கம்,  மேலிருந்து கீழாக, ஒருவழிப்பாதையாகவே நடைபெறுகிறது; என்றாலும் சில  நேரங்களில், நாம் செய்யும் தவறுகளால் - அத்துமீறல் நடைபெற ஏதுவாகிறது.

அரைகுறையாக அரைக்கப்பட்ட உணவு, உணவுக்குழாயில் மேலேற எத்தனிக்கிறது - மேலேறவும்  செய்கிறது.


மேலேறிய அரைகுறையாக அரைக்கப்பட்ட உணவு, அமிலக் கலப்புடன் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி இரைப்பைக்கு உண்டு. ஆனால் உணவுக் குழாயின் உட்புறச்சுவரானது அமிலத்தை பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு உறுதி வாய்ந்தது அல்ல.

அதன் மெல்லிய தசைச்சுவற்றின் உட்புற சளிச்சவ்வுப்படலம் அமிலத்தை தாங்கிக்கொள்ள இயலாமல், பாதிப்படைகிறது. அந்த பாதிப்பு நெஞ்செரிச்சலாக உணரப்படுகிறது.

ஒருவருக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுமேயனால், உணவுக்குழாயின் கீழ்பகுதியான "L E S " பகுதியில் தசை சுவர்கள் பலமிழந்து, தளர்ந்த நிலையில் வீக்கம் ஏற்பட்டு,  முற்றுகிறது.

இந்நிலை "ஹயாடல் ஹெர்னியா" என்று சொல்லப்படுகிறது. இந்நிலையினை அடைந்தோருக்கு, மேலும் மேலும்  பிரச்சினை முற்றுமானால் அந்த இடத்தில் "கேன்சர்"  உருவாகவும் வாய்ப்பு உண்டு

ஆரம்ப நிலையிலேயே நெஞ்செரிச்சலை குணப்படுத்த அக்குபஞ்சர் மிகவும் பயன்படும்.

வருமுன் காப்போம்


Wednesday 9 April 2014

வாய் - உணவு ஜீரணத்தில் உமிழ்நீரின் மகத்துவம்

வயிற்றில் பாதி வாயில் 


உணவு ஜீரணம் என்று சொன்ன உடனே நமக்கு , இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவை தான் நினைவில் வரும் .  வாயினையும் ஒரு முக்கிய ஜீரண சக்தியுடைய உறுப்பாக பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை.

ஆனால் வாயினில் உணவினை நாம் மெல்லும்போது  நடைபெறும் நிகழ்வுகளை சற்று கவனித்தோமானால் "வயிற்றில் பாதி வாயில்" என்னும் கூற்றை அப்படியே ஆமோதிப்போம்.

உணவு ஜீரணம் என்பது வாயில் ஆரம்பித்து , இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றில் நடைபெறும் ஒரு தொடர் நிகழ்வாக அமைகிறது

பற்கள்  


நமது வயிறு வெறும் தசைகளாலானது என்பதை நாம் அறிவோம். அப்படி இருக்கையில் வாயிலிட்ட உணவை மெல்லாமல் அப்படியே விழுங்கினால் என்ன ஆகும்?

பற்களின் உபயோகம்தான் என்ன?

வெட்டும்  பற்கள், கிழிக்கும் பற்கள் மற்றும் அரைக்கும் பற்கள் என முப்பத்து இரண்டு பற்களை  - இறைவன் எதற்காக தந்திருக்கிறார்?

தாடையில் வேர்விட்டு வளரும் பல்லின் வெளிப்புறம் எனாமல் எனப்படும்  கடினமான பூச்சாக அமைகிறது.   எனாமல் நமது உடலிலேயே மிக கடினமான திசு ஆகும்.

மிக  கடினமான உணவுப்பொருட்களையும் அரைத்து தருவதன் மூலம்,  வயிறு  உணவை ஜீரணிக்க பற்கள் மிகவும் உதவுகின்றன.
 
அவசரமாக மெல்லாமல் உண்ணும் உணவு, அதிக அமிலச்சுரப்புக்கு காரணமாக அமைந்து, வயிற்றை மிகவும் கெடுக்கிறது.

குறைந்தது பத்திலிருந்து பதினைந்து முறையாவது, உணவை கடித்து மென்று கூழாக்கி உண்ணுவது அவசியம்.

"நொறுங்கத்தின்றால்  நூறு வயது "  என்று  நமது முன்னோர்கள் சொன்னது நூறு சதவிகிதம் உண்மை என்பதை, அதை கடைப்பிடித்தவர் நன்கு அறிவர்.


 நாக்கு 

உணவை  நாம் வாயில் இட்டதும்,  அதன் முதல் ஸ்பரிசம் நாக்குடன்தான்.  உணவினை பற்களால் மெல்லுவதற்கேற்ப, நாக்கின்   அசைவுகள் - பற்களுக்கு  இடையில் சிக்கிக்கொள்ளாமல்  - மிகவும் லாவகமானவை.

 அடிநாக்கின் அலைபோன்ற அசைவின் உதவியினால் தான் உணவை விழுங்க முடியும்.

.நாக்கில் அமையப்பெற்ற சுவையரும்புகள், நாம் நமது உணவினை தேர்ந்தெடுத்து உண்ண உதவுகின்றன. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் நாக்கில் அமைந்துள்ள சுவை அரும்புகள் தன்மீது படும் உணவின் சுவையை அறிந்த கணமே - உணவின்  தன்மை, அதில் உள்ள சத்துக்கள், மற்றும் ஜீரணிக்க தேவையான இதர விஷயங்கள் பற்றிய தகவல்களை வயிற்றுக்கு - மூளை மூலமாக தந்தியடிக்கின்றன  என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

 இந்த இடத்தில் மூக்கின் வாசனை அறியும் திறனும் சேர்ந்து செயல்பட்டு வயிற்றுக்கு தகவல் அனுப்பப்படுகிறது.

எந்தவிதமான  உணவு தன்னிடம் வந்தடைய இருக்கின்றது  - எந்த விதமான நொதியங்களைச் சுரக்கவேண்டும் - எந்த அளவிற்கு  சுரக்க வேண்டும்,  என வயிறு தீர்மானிக்க,  நாக்கு  அனுப்பும் சமிக்ஞைகள் உதவுகின்றன.

முறையாக சுவைக்காமல், அவசரமாக விழுங்கப்படும் உணவு, முழுமையாக ஜீரணிக்கப்படாது என்பது உண்மை.


உமிழ்நீர்

 
வாய் என்றதும் பற்கள் , நாக்கு தவிர நாம் நினைவில் கொள்ள வேண்டியது உமிழ்நீர் சுரப்பிகள்  தாம்.

வயது வந்த ஒரு நபருக்கு, நாளொன்றுக்கு- மூன்று வேளையும் உணவருந்தும்போது - சுமார் 1500 மிலி அளவுக்கு உமிழ்நீர் சுரப்பதாக  கணக்கிடப்பட்டிருக்கின்றது.  உமிழ்நீரில் 99.5% நீரும் 0.5% கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் மற்றும் நொதியங்களும் அடங்கியுள்ளன.

பற்களால் நான்கு அரைக்கப்பட்ட உணவில் உள்ள ஸ்டார்ச் எனப்படும் மாவுப்பொருளை,   உமிழ்நீரின் - அமிலேஸ்('salivary amylase') எனும் முக்கிய நொதியமானது,  டெக்ஸ்ட்றின்  மற்றும் மால்டோஸ் ஆக மாற்றுவதன் மூலம் ஜீரணம் வாயிலேயே ஆரம்பிக்கிறது - மேலும் இதன் தொடர்ச்சி வயிற்றில் நடைபெறுகிறது.

மனிதர்களுக்கு மட்டுமே உமிழ்நீரில் இருக்கக்கூடிய "மால்டேஸ்"  என்னும்  நொதியமானது "மால்டோஸ்"-ஐ  குளுக்கோசாக, அதாவது சர்க்கரையாக மாற்றுகிறது.

இதன்  மூலம்  வயிற்றில்  தரமான  நொதியங்கள் சுரக்க வழி  வகுக்கிறது  - விளைவாக -  கணையத்திலிருந்து  சுரக்கும் இன்சுலின் ஒத்துக்கொள்ளக் கூடிய பக்குவத்தில் குளுக்கோஸ் தயாராவதால் - நீரழிவு எனப்படும் சர்க்கரை நோய் ஏற்படுவது தவிர்க்கப்பட ஏதுவாகிறது.

சர்க்கரை நோயின்  ஆரம்ப கட்ட பாதிப்பில் இருப்பவர்கள்  - சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்து, முறையான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுவதுடன் - நன்றாக மென்று சாப்பிடும் முறையை கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களின் சர்க்கரை  நோய் குணமாகக்கூடிய வாய்ப்பும் அதிகம் இருக்கிறது.
 
"லிங்குவல் லைபேஸ்" எனப்படும் உமிழ்நீரிலுள்ள ஓர் நொதியமானது , நாம் உண்ணும் உணவிலுள்ள "பால்மக் கொழுப்பின்"  மீது  (pre-emulsified fats) வினை  புரிந்து கொழுப்பு  ஜீரணத்திற்கு உதவி  செய்கிறது.

இதன் காரணமாக - கோலஸ்டரால் - பிரச்சினை வராமல் இருக்கவும், தேவைக்கு அதிகமாக எடை கூடாத வகையில், உடலை பேணவும், நிறைய வாய்ப்பு இருக்கிறது. 

உணவை வாயில் அரைத்து சுவைக்கும்போதே உமிழ்நீரில் உள்ள "லைஸோஸைம்" எனும் நொதியம் உணவில்  கலந்திருக்கக்கூடிய சில கெட்ட  பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது.

உமிழ் நீருக்கு இத்தனை சிறப்பா? உமிழ் நீரினை  நாம்  ஏன்  "உயிர்நீர்"  என்று சொல்லக்கூடாது?

டான்சில்
 
நாக்கைதாண்டி தொண்டையில் நுழைய எத்தணிக்கும் ஒரு சில  கெட்ட  பாக்டீரியக்களை தொண்டையினுள் இருபுறமும் துவாரபாலகர்களைப்போல  அமைந்திருக்கும் டான்சில்கள் துவம்சம் செய்துவிடும்.

உணவை, மெல்ல, நிதானமாக சிறிது சிறிதாக  அரைத்து விழுங்கும்போது, டான்சில்களில் சுரக்கும் உடலின் பாதுகாப்புப்படை வீரர்களான ,  நோய்யெதிர்ப்புசக்திமிகுந்த , பலவித வெள்ளை அணுக்கள் , உணவில் உள்ள கெட்ட பாக்டீரியக்களை கொன்றுவிடுகின்றன.  (இதையும் தாண்டி வயிற்றுக்குள் செல்லும் சில  கெட்ட கிருமிகளை வயிற்றில் சுரக்கும் அமிலம் கவனித்துக்கொள்ளும்.)

இத்தனை பாதுகாப்பு செயல்பாடுகள் இருந்தும் டான்சில்களில் கிருமிதொற்று ஏன் ஏற்படுகிறது?  உணவினை  நன்றாக உமிழ்நீர்  கலந்து, மென்று சாப்பிடாததாலும், நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் காரணத்தினாலும், அளவுக்கு அதிகமாக கிருமித்தொற்று ஏற்படும் வகையில் நாம் உணவை தேர்ந்தெடுப்பதினாலும்தான்.
 
உணவை அள்ளி அள்ளி வாயினுள் போட்டு மெல்லாமல் அப்படியே விழுங்கினால்  பிரச்சினைதான்.


அகத்தின் அழகு வாயிலும் தெரியும் 

வாயினுள், நாக்கில், மற்றும் உதடுகளில் ஏற்படும்  சில புண்கள்,  இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை உணர்த்தும் "குறிகள் " ஆகின்றன.

 நமது முறையற்ற உணவுப்பழக்கங்களினால் இரைப்பையில்  ஏற்படும் அதிக அமிலச்சுரப்பு - உதடுகளில் உண்டாகும் புண்கள், மற்றும் உதடுகளில் தோல் உரிதல் போன்றவைகளுக்கு   ஒரு  முக்கியமான காரணமாக அமைகிறது.

தவிர, நாக்கில்  புண்கள் ஏற்படுவதற்கு - உணவில் சத்துக்குறைபாடு, தூக்கமின்மை,  மற்றும் மன அழுத்தம் போன்றவை காரணங்களாகின்றன.

காய்கனிகள், மற்றும் உணவுப்பொருட்களின்   மீது  ஒட்டியிருக்கும் செயற்கையான பூச்சி  கொல்லி  மருந்துகளை, சரியான முறையில் சுத்தம் செய்யாமல் சமையலுக்கு பயன்படுத்துவது,  தொண்டையில் புண்கள் ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாகிறது.


ஆரோக்கியம்  -  ஆரம்பம். 

           -  சிறந்த உணவு வகைகளை கவனமுடன் தேர்ந்தெடுத்து
           -  சிறு சிறு கவளங்களாக வாயிலிட்டு
           -  நன்றாக பற்களால் அரைத்து  
           -  தாராளமாக உமிழ்நீர் கலந்து
           -  நாக்கினால் நன்கு சுவைத்து

            - சிறிது சிறிதாக உணவை உண்ணும் முறையினை நாம் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் அதே வேளையில்
   
                                           ஆரோக்கியம் ஆரம்பம்.



Monday 7 April 2014

அக்குபஞ்சர் - வருமுன் காப்போம் வாழ்க்கை முறை

நோய்க்காரணிகள்  

 

அக்குபஞ்சர் தத்துவப்படி,   நமது உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்கள் எனப்படும் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்- எனும் ஐந்து மூலகங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாலேயே நோய் தோன்றுகிறது.

              -  நமது முறையற்ற உணவுப் பழக்க  வழக்கங்கள்
              - அளவான உடல் உழைப்பு, அல்லது உடற்பயிற்சி இன்மை
              -  போதுமான அளவு உறக்கமின்மை

ஆகிய காரணங்களால்,  பஞ்சபூதங்களின் செயல்திறன்‌ பாதிக்கப்படுவதனால், நமது உடலில் நோய் தோன்றுகிறது.


மேலும்
              - குளிர்
              - வெப்பம்
              - அதிக வெப்பம்
              - காற்று
              - ஈரப்பதம்
              - மிகவும் உலர்ந்த தன்மை

ஆகிய சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஏற்படும் தாக்கங்களும் காரணமாகின்றன.

இவை தவிர

              -  கோபம்
              -  துக்கம்
              -  ஆழ்ந்த சிந்தனை
              -  கவலை
              -  ஆவல்/பதட்டம்
              -  பயம்
              -  சந்தோஷம்

ஆகிய ஏழு வகை உணர்ச்சிகள் ,  அளவுக்கு அதிகமாக மனதை ஆக்கிரமிக்கும்போது, உடலின் சக்தி ஒட்டப்பாதையில் குறுக்கீடு ஏற்பட்டு, நோய் ஏற்படுகிறது.

தவிர,

              - கீழே விழுதல்
              -  விபத்து

போன்ற காரணங்களும் உண்டு.


"உட்கிரகித்தல் - கழிவு நீக்கம் " 


மேற்கூறிய பல காரணங்களால்,  நமது உடலின் அடிப்படை கட்டமைப்பான "செல்"களின் செயல்திறன் கெடுகிறது.

 நமது உடலில் உள்ள ஒவ்வொரு 'செல்'லும்  தான் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவையான  காற்றை சுவாசிக்கிறது,  மற்றும்  உணவு எடுத்துக்கொள்கிறது என்பதை நாம் அறிவோம்.

வாயு,  திரவ மற்றும் திட தாதுக்களின்  "சக்தி கிரியை" ஒவ்வொரு "செல்"லுக்குள்ளும்  முடிவடைந்த நிலையில் - கழிவுகள் "செல்" லிலிருந்து நீக்கப்படுகின்றன.

"உட்கிரகித்தல் - கழிவு நீக்கம் " இவ்விரண்டு செயல்களும் செவ்வனே நடைபெற்றுக்கொண்டிருக்கையில் உடல் நலத்திற்குப்  எவ்விதப் பங்கமுமில்லை.  இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் வலி, வீக்கம் மற்றும் நோய்க்குறிகளாக அறியப்படுகின்றன.

 கழிவுகளின் தேக்கமே அநேக நோய்கள்  ஏற்படுவதற்கு மூல காரணமாக அமைகிறது.

தும்மல், இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு - ஆகியவை ஏற்படும்போது, அதற்கான காரணத்தை நாம் அறிய முற்படவேண்டும்.  அவை  நமது உடலில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நிகழ்க்கூடிய  இயற்கையான கழிவு நீக்கச்செயலாக இருக்கலாம்.

உடலுக்கு தேவையில்லாத, ஒவ்வாத ஒன்றினை, வெளியேற்றும் செயல்களே தும்மல், இருமல் முதலியன.

நமது உடலின் - தன்னை தானே சரி செய்து குணப்படுத்திக்கொள்ளும் அற்புத ஆற்றல் அது.  அது பெரும்பாலும், உடலின் பஞ்ச மூலக சமன்பாடு சீர் குலையாமல் பாதுகாப்பதன் பொருட்டு  நிகழும் அனிச்சைச் செயலாகவே இருக்கும்.

பிரச்சினையின் மூல காரணத்தை கண்டறிவதோடு, இயல்பான கழிவு நீக்கம் நடைபெறும் வகையில் நமது செயல்பாடுகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், ஒருவர் - தனது உடலைப்பற்றியும் , அதன் செயல்பாடுகளைப்  பற்றியும் ஓரளவாவது தெரிந்து வைத்திருப்பது அவசியமாகின்றது.

தேவையில்லாமல் - கழிவு நீக்கத்தை நிறுத்த முற்படும்போது - கழிவுகளின் தேக்கம் அதிகமாகி உடலில் பிரச்சினை  மேலும் முற்றுகிறது.



அக்குபஞ்சரின் சிறப்பு  - நாடிப்பரிசோதனை

 

உடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை  - பஞ்சமூலகங்களின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பாக கைநாடி மூலம் உணரப்படுவது அக்குபஞ்சர் நாடிப்பரிசோதனையின் சிறப்பு.


ஒரு சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர், நோயாளியை நாடிப்பரிசோதனை செய்கிறார். அதன்மூலம், நோயாளியின் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அறிந்து கொள்கிறார்.

நமது உடலை இயக்கும் பஞ்சபூதங்களின் சுழற்சி , மற்றும் செயல்பாட்டினை அவன் நன்கு அறிந்தவராதலால்  அவரால் கைநாடி மூலம் எளிதில் பிரச்சினையை அறிய முடிகிறது.

அளவுக்கு அதிகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் , அல்லது செயலிழந்து கொண்டிருக்கும் மூலகத்தை  அறிகிறார்.

தேவைப்பட்டால்,  நோய்வாய்ப்பட்டவரிடம்,  சிறு விசாரணை செய்து நோயின் தன்மையை அறிந்து கொள்கிறார்.

ஒருவர் நோய்வாய்ப்பட்டபோது, சில அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை "வலி" யாக உணர்த்தும். அந்த புள்ளிகளில் இலேசாக அழுத்தம் தந்து,  நோயின் தன்மை அறியப்படுகிறது.

நோயின் மூல  காரணம் உடலிலா அல்லது, மனதிலா  என்பதை அறிந்து  அதற்கேற்ப சிகிச்சை தருகிறார்.

நமது உடலில் இயற்கையாக ஓடிக்கொண்டிருக்கும் பஞ்சபூதசக்தி ஒட்டப்பாதைகளில் உள்ள தடைகளை அகற்றும் வகையில் சிகிச்சை தரப்படுகிறது.

அது, உடலுக்கும் உள்ளத்திற்கும்  - ஒரே நேரத்தில் தரப்படும் சிகிச்சையாக அமைகிறது.

இது மட்டும் போதுமா?


வருமுன் காக்கும் வழி உண்டா? 

 

திரும்பவும் அதேபோல் அதே பிரச்சினை நோய்வாய்பட்டவருக்கு வர வாய்ப்பில்லையா?

நின்ற வண்டியை அவ்வப்போது உந்தி  தள்ளி விட்டு உதவி செய்யலாம். வருடம் முழுவதும்,  வாழ்க்கை முழுவதும்  தள்ளிவிட்டுக்கொண்டு கூடவே ஓடத்தேவையா?

இந்த இடத்தில் நோயாளியின் பங்கு  நிச்சயம் தேவை.

அக்குபஞ்சர் சிகிச்சை என்பது வெறுமனே உடலில் ஊசிகள் செலுத்துவது, அல்லது கைவிரல்களால் அழுத்தி குணம் தருவது மட்டுமல்ல.

தற்போதுள்ள பிரச்சினையிலிருந்து விடுபடத்தேவையான ஆலோசனைகள், மற்றும் மீண்டும் அதே  பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான உபாயங்களை சொல்லித்தருவது ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும்.

ஒருவரின் தினசரி நடவடிக்கைகளில், எங்கே  தவறு ஏற்பட்டுள்ளது - அதை எப்படி சரிசெய்யலாம் - என்னும் ஆலோசனைகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை.

இதன்  மூலம் - நோய் வருமுன், நம்மை நாமே  பாதுகாத்துக்கொள்வோம்  - என்ற சொல்லை முன் வைக்கிறார். சிகிச்சையாளர்.

பிரச்சினையின் மூல காரணம் என்னவென்பதை எடுத்துச் சொல்லி, மீண்டும், மீண்டும் நோய்வாய்ப்படாமலிருக்க, நமது உடல், மற்றும் உடலின் செயல்பாடுகள் பற்றிய  சிறு சிறு விளக்கங்கள் தருகிறார்.

உணவு, உடல் உழைப்பு, உறக்கம் - இம்மூன்று விஷயத்திலும்  கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், ஆலோசனைகள் நிச்சயம் தரப்படுகிறது.

கூடவே -  அக்குபஞ்சரின்  நாடி சமன் செய்தல் சிறப்பு சிகிச்சை தருவதினால் , ஒருவரின்  நோய் எதிர்ப்பு சக்தி தூண்டி விடப்படுகிறது.

அவ்வப்போது ,  முன்னெச்சரிக்கையாக  அக்குபஞ்சர்  சிகிச்சை எடுத்துக்கொள்வது  மட்டுமல்லாமல் - கூடவே - ஒருவர்  உடலாலும், உள்ளத்தாலும் கட்டுப்பாடுடன் கூடிய  நடைமுறைப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கும் போது - நோய் என்பது எட்டிப்பார்க்கக்கூட வழியில்லை.


உடல், உள்ளம்  

 

 உடல், உள்ளம் - இவை இரண்டின் ஆரோக்கியம் முழுமையாக பாதுகாக்கப்பட்டால் மட்டுமே,  நமது உயிர் எனும் ஆத்மா எடுத்துக்கொண்டுள்ள  பிறவிக்குரிய  கடமையை சரியாகச் செய்ய இயலும்.

மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உடலின் உள்ளுறுப்புகளுக்கும், நேரடித்தொடர்பு  உள்ளது நாம் அறிந்ததுதான். உடலின் உபாதைகள் - உள்ளத்தைச் சோர்வடையச் செய்துவிடும். சோர்வடைந்த உள்ளம் காரணமாக உடலில் உபாதைகள் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.

அடிக்கடி தேவைல்லாமல் கோபத்திற்கு ஆளாகுபவரின்  கல்லீரலின் செயல்திறன் குன்றிப்போகிறது.

சகிப்புத்தன்மை இன்றி "எரிச்சல்" உணர்ச்சி  மிகுந்தோரின் வயிறு புண்ணாகிப்போகிறது.

பய உணர்ச்சி மிகுந்தவர்களின் சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட மறுக்கின்றன.

காரணம் என்ன? - நாம் மனதில் தோன்றும் ஒவ்வொரு உணர்ச்சி அலைகளுக்கும், பதில் விளைவு  தரும் வகையில்  நமது உடலில் அமைந்துள்ள ,   நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் "ஹார்மோன்" எனப்படும் "இயக்குநீர்" - மற்றும் நாளமுள்ள சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும்  "என்ஸைம்" எனப்படும் நொதியங்கள் செய்யும் அதிகப்படியான வேலைதான்.

எதற்கும் அதிக உணர்ச்சிவயப்படாமல் மனநலம் காப்பதுதான் நோயற்ற வாழ்க்கைக்கு சிறந்த அடித்தளம். 

உடல் நலமும் உள்ளத்தின் நலமும் சிறந்து விளங்க.  பாடலாசிரியர் புலமைப்பித்தன் அவர்களின் "எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்" எனற திரைப்படப்பாடலின் ஒற்றை  வரியின்  உண்மையை உணர்ந்து கொண்டாலே போதும்.

ஒரே நேரத்தில் உடல், உள்ளம் - இவை இரண்டிற்குமான எளிய, விரைவான, முழுமையான சிகிச்சை அக்குபஞ்சர் / அக்குபிரஷர் என்றால் அது மிகையல்ல.

 அக்குபஞ்சர்  -  வருமுன் காப்போம் வாழ்க்கை முறை