Sunday 25 May 2014

பஞ்சபூதங்கள் "நிலம்" மூலகம் - தொடர்ச்சி : மன உணர்ச்சி - "கவலை"

நமது உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் நேரடியாக நமது கட்டுப்பாட்டுக்குள்  இல்லை.

மூளையானது, நரம்பு மண்டலம் வழியாக உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டினை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. நமது உள்ளுறுப்புகள் யாவும், என்னதான் தன்னாட்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு செயலிலும் இறங்குமுன்,   மூளையின்   கட்டளைக்காக  காத்திருக்கிறது.

உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு, நமது உடலில் உள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும்  "ஹார்மோன்" எனப்படும் "உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர்" அடிப்படை காரணமாக அமைகின்றது. இதனை சுருக்கமாக "இயக்கு நீர் / சுரப்பு நீர் " எனலாம். இத்தகைய "சுரப்பு நீர்" வகைகள் யாவும் உடலின் தேவைக்கேற்ப, மூளையின் கட்டளைப்படி, அந்தந்த உறுப்புகளிலும், இரத்தத்திலும்  சுரக்கப்படுகின்றன.

"நிலம்" மூலகத்தின் உறுப்புகளில் ஒன்றாகிய இரைப்பையில், உணவு ஜீரணம் நடைபெறும் விதத்தை நாம் ஏற்கெனவே "உணவு ஜீரணத்தில் உமிழ்நீரின் மகத்துவம்" பதிவினில் பார்த்தோம். நாவில் படும் சுவை, நாசியில் ஏறும்  மணம், இவைகளுக்கேற்ப இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் ஜீரணத்தை நடத்த உதவுகின்றன.

தவிர, உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமான, "ஆற்றல்" அல்லது "சக்தி நிலையில்" குறைவு ஏற்படும்போது, மூளையின் ஹைபோதலாமாஸ் பகுதியின் தூண்டுதலால்,  "பசி" உணர்வினை ஏற்படுத்தும் "HUNGER HARMONE" எனப்படும்  "க்ரெளின் "  (Ghrelin)  வயிற்றில்  சுரக்கிறது.

வயிற்றில் நடக்கும் இவ்வளவு நிகழ்ச்சிகளும் -  மூளையானது, மிக இயல்பாக, அதாவது, அதன் "நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள்" எனப்படும் "மின் அலை கடத்தி"களின் செயல்பாட்டிற்கு எந்த ஒரு  இடையூறும்   இல்லாத  பட்சத்தில் - செவ்வனே நடத்தித் தரும்.

நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான "இரசாயன சமிக்ஞைகள்" - CHEMICAL SIGNALS - சுதி விலகாத  தாள-லயத்துடன் நடக்கும்போது, மூளைக்கும் உள்ளுறுப்புகளுக்குமான தொடர்பில் பாதிப்பு  இல்லை. அவ்வேளையில் சுரக்கப்படும்  "செரோடோனின்" - SEROTONIN - எனும் மூளையின் சுரப்பானது, பசி உணர்வினை முறைப்படுத்துகிறது.  மேலும் - உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருத்தல், "MOOD" எனப்படும் மன நிலையினை  சீராக வைத்திருத்தல், தேவைப்படும் தூக்கத்தை தரும் வகையில் மன அமைதி தருதல், மற்றும் வலி  நிவாரணம் தருதல்  - போன்றவையும்  "செரடோனின்"  துணை  புரியும் முக்கிய  பணிகள் தான்.

ஒருவேளை, ஒரு நபர், நடந்து முடிந்த வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சியைப்பற்றியும், அதன் விளைவாக, வருங்காலத்தில் "என்ன நடந்துவிடுமோ?" என்று தொடர்ந்து "கவலை"ப்பட்டுக்கொண்டிருந்தால் விளைவு என்ன ஆகும்? விரைவில் அவரது நிலைமை கவலைக்கிடமாகிவிடும். அதாவது, நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான தொடர்பில் துண்டிப்பு ஏற்பட்டு, செரோடோனின் சுரப்பு தடைபடுகிறது. செரோடோனின் சுரப்பு தடைபடுவதனால் பசி உணர்வு அதிகமாகவோ அல்லது குறையவோ செய்யலாம். அதாவது பசி முறைபடுத்தப்படமாட்டாது. அதனால்,  இரைப்பை,  மண்ணீரல் மற்றும் கணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் தடைபடும். விளைவு ஆரோக்கியக்குறைவு. மண்ணீரலின் குறைபாட்டினால், இரத்தசோகை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவு, மேலும் கணையத்தின் கவனக்குறைவால் இன்சுலின் சரிவரச் சுரக்காததால் நீரழிவு  எனும் சர்க்கரை நோய் கூட உருவாகலாம்.

அதிகமாக, எந்நேரமும் கவலைப்படும் ஒருவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து, அதனால்  ஆரோக்கியம் கெடும் - என்பது மட்டுமல்லாமல் - முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களினால் அவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து அதன் விளைவாக,  அவருக்கு தேவை இல்லாமல் அடிக்கடி கவலை உணர்வு தோன்றவும் செய்யும் எனபதை நாம்  மறுக்க இயலாது.

இவ்வளவு விஞ்ஞான விளக்கங்கள் எதற்கு? அதையெல்லாம் விட்டுவிடுங்கள்.  மறந்துவிடுங்கள். “நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்" என்ற நமது முன்னோர் சொல்லி வைத்திருக்கும் வார்த்தைகளின் அர்த்தத்தை சற்று  யோசித்துப்பாருங்கள். 

நீங்கள்  எதெற்கெடுத்தாலும்  அதிகமாக  கவலைப்படுகிறவரா?

குறைந்தபட்ச கவலை தேவைதான். இல்லையென்றால் வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி? ஓரளவுக்கு,  அடுத்ததாக செய்ய வேண்டியவற்றுக்கான திட்டமிடுதல் இருந்தால் போதும். கூடவே கொஞ்சம் தைரியத்தை  சேர்த்துக்கொள்ளுங்கள். அதிக கவலையினைத் தவிர்த்து விடுங்கள். இந்த நாளின்  அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலை மட்டும் இருக்கட்டும். இன்னும் ஒருமாதம் கழித்து ஏதோ ஒருநாள்  எடுத்துக்கொள்ளபோகும் மதிய உணவைப்பற்றிய கவலை  இப்போதே  எதற்கு?

தேவையில்லாமல் அதிகமாக கவலைப்படுகிறவர் எனில், அருகில் உள்ள அக்குபஞ்சர் சிகிச்சையாளரிடம் ஆலோசனை பெறுங்கள். செரோடனின் சுரப்பினை  சரிப்படுத்தும் வகையில், ஓரிரண்டு அக்குபஞ்சர் புள்ளிகளில் மட்டும் சிசிச்சை தந்து,   அவர் உங்கள்  ஆரோக்கியம் மேம்பட உதவுவார்.

                  கவலையைப்பற்றிய கவலையை  இனி விட்டுவிடுங்கள்.

                                               வருமுன் காப்போம் 

Tuesday 20 May 2014

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் : தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை

"நிலம்" மூலகத்தின்  - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : உதடு (வாய்).

அக்குபஞ்சர் மருத்துவத்தில், நோயறிதல் பகுதியில், முதலாவது செய்யப்படும் வெளிப்புற பரிசோதனை, "அகத்தின் அழகு  முகத்தில் தெரியும்" என்னும்  பழமொழியின் அடிப்படையில்தான்.  பஞ்ச மூலகங்களின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும், கிட்டத்தட்ட அதன் வடிவத்தையொத்த உறுப்பு ஒன்று முகத்திலேயே  படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் "நிலம்" மூலகத்தின் வெளிப்புற உறுப்பாக கணையத்தின்  வடிவத்தையொத்த "உதடு" அமைந்துள்ளது.

அந்தந்த உள்ளுறுப்புகள் பாதிப்படைந்திருக்கும் பட்சத்தில், அதன் வெளியுறுப்பில் அந்த பாதிப்பு  சுட்டிக்காட்டப்படுகிறது. மண்ணீரலின் அல்லது கணையத்தின் செயல்திறன் மாறுபட்டிருக்கும்போது  உதட்டிலும், உதட்டின் உட்புறத்திலும், உதட்டோரத்திலும் அதன் அறிகுறியாக புண்கள் தோன்றும்.

இரைப்பையில் அஜீரணப்பிரச்சினைகள் அல்லது புண்கள் இருக்கும் பட்சத்தில் உதடுகள் உலர்ந்து போகும்.  மேலும், உதட்டில் தோல் உரிய ஆரம்பிக்கும்; புண்கள் கூட ஏற்படும். மண்ணீரல் குறைபாடு நோய்களின்  அறிகுறியாக வாயோரத்தில், உதடுகள் இணையும் இடத்தில் சிறு கொப்புளங்கள் அல்லது புண்கள்  ஏற்படும்.

நிலம் மூலகத்தின் நிறம் : மஞ்சள்

"நிலம்"  மூலகத்தின் நிறம் " மஞ்சள் " ஆகும். ஒருவரது உடலில் நிலம் மூலகத்தின் செயல்திறன்  ஏறக்குறைய இருக்குமானால்,  அவரது முகம், மஞ்சள் பூத்தாற்போல் ஆகிவிடுகிறது. ஜீரணக்  கோளாறுகள், மற்றும் இரத்தக்குறைவு ஆகிய பிரச்சினைகள் முகத்தில் மஞ்சள் நிறமாக வெளிப்படுகிறது.

தவிர, கண்களில் தோன்றும் மஞ்சள் நிறம், கல்லீரலின் குறைபாட்டால் ஏற்படும் மஞ்சள் காமாலையின்  அறிகுறியாக இருப்பினும், அதில் "நிலம்" மூலகத்தின் மண்ணீரலும் ஒரு காரணமாகிறது. மண்ணீரலில்  இரத்த சிகப்பணுக்கள் மிக அதிக அளவில் சிதைக்கப்பட்டு, அதன் காரணமாக ஏராளமாக  உற்பத்தியாகும்  "பிலுரூபின்" - Bilurubin - என்னும் கல்லீரல் சுரக்கும் பித்தநீருக்கு  நிறம் தரும் நிறமியானது, இரத்தத்தில்  அதிகமாக கலப்பதினால்,  அதன் அறிகுறியாக "மரம்" மூலகத்தின் வெளிப்புற உறுப்பான "கண்"ணில்,  "நிலம்" மூலகத்தின் "மஞ்சள்" நிறம் வெளிப்படுகிறது.

நிலம் மூலகத்தின்  சுவை : இனிப்பு, துவர்ப்பு

"நிலம்" மூலகத்தின் சுவை இயல்பு  "இனிப்பு" ஆகும். எனினும் உடலில் இரத்தம் ஊறுவதற்கு மிக  அவசியமான  "துவர்ப்புச் சுவை"  மண்ணீரலின் சிறப்பு சுவையாகச் செயல்படுகிறது

பொதுவாக, நமது உடலின் திசுக்கள் சேதமடைய நேரும்போது, அதனை மூளை நமக்கு "வலி"-யாக  உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளின் நிலையும் அதுதான். ஆனால், திசுக்கள் சேதமடைவதற்கு  முன்னதாகவே, திசுக்களின் அடிப்படை கட்டமைப்பான "செல்"களின் இயக்கத்தில் குறைபாடு தோன்ற  ஆரம்பித்திருக்கும் அல்லவா?  சற்றே யோசிப்போம் - ஆரம்பகட்டத்திலேயே  அதனை  நாம்  உணரமுடியுமானால் எவ்வளவு நல்லது? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அக்குபஞ்சர் அறிவியலின்படி அதற்கு பதில் "நிச்சயம் இருக்கிறது."

அது எப்படி?

ஒருவர், தான் உணவினைத் தேர்ந்தெடுக்கையில், அதன் சுவையில் நிச்சயமாக கவனம் கொள்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அந்த சுவை, அவரது உள்ளுறுப்புகளின்  நிலையினை, மனதின் உணர்ச்சியாக வெளிப்படுத்துகிறது.

ஒருவர்,  அவரது உணவில் ஆறு சுவைகளும் அளவுடன் எடுத்துக்கொள்கிறார் என்றால், அவரது  ஆரோக்கியம் முழுமையாக இருக்கிறது என்று அர்த்தம். இனிப்பு அனைவராலும் விரும்பி ஏற்க்கப்படும்  ஒரு சுவை. ஓர் ஆரோக்கியமான நபர், இனிப்பு சுவை கொண்ட ஒரு பதார்த்தத்தை விரும்பி  எடுத்துக்கொள்வார் - ஆனால் ஒரு நிலையில் "போதும்- திகட்டிவிட்டது" என்றபடி நிறுத்திக்கொள்வார். சுவை உணர்ச்சியானது, - ஆரோக்கிய நிலையில் - தேவைக்கு மட்டும் - குறிப்பிட்ட சுவையுடன் கூடிய  உணவை அனுமதித்து, உடலின் ஆரோக்கியம் நிலைத்திருக்கச் செய்யும்.

ஒருவர் - "இனிப்பு எனக்கு அறவே பிடிக்காது"  என்று இனிப்பு சுவையை  ஒதுக்கினாலும், அல்லது  "  இனிப்பினை நிறைய எடுத்துக்கொள்வேன்" என்று  மிக அதிகமாக இனிப்பை உட்கொண்டாலும் - அவரது  "நிலம் மூலகம்"  முறையாக இயங்கவில்லை என்பதனை உணரலாம்.

தொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் ஒருவருடனான "கேள்வி - பதில்" பகுதியிலேயே,  அக்குபஞ்சர் சிகிச்சையாளர்,  உருவாகவிருக்கும் பிரச்சினையை ஆரம்பத்திலேயே இனம் கண்டு  கொண்டு, நாடிப்பரிசோதனை மூலம் அதை  உறுதி செய்து, சிகிச்சை தர முடியும். எனவே சுவை  உணர்ச்சி, அக்குபஞ்சர் நோயறிதல் பரிசோதனையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லவும்  வேண்டுமா?

                                              "வருமுன் காப்போம்"

Friday 16 May 2014

பஞ்ச பூதங்கள் : "நிலம்" மூலகம் :

நிலம் - மூலகம் :

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், இரைப்பை, மற்றும் மண்ணீரல் ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "நிலம்"  மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :   மண்ணீரல் - SPLEEN - அக்குபஞ்சர் குறியீடு "SP"

SPLEEN- எனப்படும் மண்ணீரலானது இரத்த சிகப்பணுக்களின் தரத்தினை சரிபார்க்கும் முக்கியமான பணியைச் செய்கிறது. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவும்  மண்ணீரலுக்கு வந்து, கடந்து தான் செல்லவேண்டும்.

ஒரு இரத்த சிகப்பணுவின் ஆயுள் 120 நாட்கள் மட்டுமே. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவின் தரம் மற்றும் ஆயுள் - quality  & validity-  அங்கு சரிபார்க்கப் படுகிறது.

நிலமானது  எவ்வாறு இறந்த மற்றும் கழிவுப்பொருட்களைச்  சிதைத்து, மறு சுழற்சிக்கு  தயார்ப்படுத்துகிறதோ,  அதேபோல்  இறந்த  மற்றும் பலமிழந்த இரத்த சிகப்பணுக்களை  சிதைத்து,  கல்லீரலின் துணையுடன் மறு சுழற்சிக்கு தயார்ப்படுத்துகிறது. "இரத்த  சிகப்பணுக்களின் கல்லறை" என்று அழைக்கப்படும் மண்ணீரலின், மண்ணிணையொத்த செயல்பட்டினை  அறிந்த நமது முன்னோர்கள் -  உங்கள் சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள் - எத்தனையோ   ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,  தமிழில் "மண்-ஈரல்"
என்று பெயர் வைத்து விட்டார்கள்.

தவிர, T- லிம்போசைட் மேலும்  B - லிம்போசைட்  ஆகிய வெள்ளையணுக்களின் இருப்பிடமாக விளங்குவதால், மண்ணீரலானது உடலின் மிகப்பெரிய "நிணநீர் உறுப்பு" எனப்படுகிறது.

எப்போதெல்லாம் மூலகத்தை சம்பந்தப்படுத்தி SPLEEN என்று குறிப்பிடுகிறோமோ, அப்போதெல்லாம் PANCREAS எனும் கணையமும் அதில் சேரும் - என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.  இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் போலவே, கணையத்திலுள்ள நாளமுள்ள சுரப்பிகளிலிருந்து கணையநீர் நொதியங்களும், நாளமில்லா சுரப்பிகள் பகுதியிலிருந்து, இரத்தத்தில் சர்க்கரையின்அளவைக்கட்டுப்படுத்தும்  இன்சுலினும் சுரந்து, சிறுகுடலில் உணவை ஜீரணிக்கும் வகையில் செயல்படுகின்றன.

மண்ணீரல் கெட்டியான உறுப்பாதலால் "யின்" உறுப்புகள் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.


உட்புற இணை உறுப்பு :  இரைப்பை STOMACH - அக்குபஞ்சர் குறியீடு "ST"

எவ்வாறு, EARTH - நிலம் , மண்  - தனக்குள் விதைத்ததை, இயற்கை உரமூட்டி, நாம் உண்ணத்தகுந்ததாக - காய், கனி, பூ, இலை, கிழங்கு என விளைவித்து நமக்குத் தருகிறதோ, அதே போல், இரைப்பை - STOMACH - நாம் வயிற்றுக்குள் விதைத்ததை  - நாம் உண்ட உணவினை - "நொதியம்" எனும் உரம் சேர்த்து நன்கு அரைத்து, பதமாக்கி, சிறுகுடலானது - சர்க்கரைச்‌ சத்து, புரோட்டீன், கொழுப்பு, மற்றும் சத்துக்களை - உறிஞ்சும் வகையில்  - தயாரித்துத் தருகிறது.

மண்ணீரலின்   இணை  உறுப்பான இரைப்பை, குழிவான உறுப்பாதலால் "யாங்"   உறுப்பாக  அறியப்படுகிறது.

நிலம் மூலகத்தின் குணாதிசயங்களான - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை, மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி, இம்மூலகத்தின்  செயல்திறன் பாதிப்பினால் உடல் மற்றும் மனதில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Thursday 15 May 2014

பஞ்சபூத மூலகங்களின் குணாதிசயங்கள்

மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சையில், இருக்கும் நோய்களை குணப்படுத்துவதற்கும்,  வருமுன் காக்கும் வகையில் சிகிச்சை தருவதற்கும்  "உயிர் சக்தி ஒட்டப்பாதை"யில் அமைந்துள்ள  பஞ்சபூதங்களின் தொடர்பிலான அக்குபஞ்சர் புள்ளிகள் பெரிதும் பயன்படுகின்றன. எனவே பஞ்சபூதங்களான " நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம் " பற்றி நன்கு அறிந்திருக்க  வேண்டியது   மிகவும்  அவசியமாகிறது.

பஞ்சபூத மூலகங்களின் தனித்தன்மை, தனித்தனியே அவற்றின் குணாதிசயங்கள் ஒன்று  மற்றொன்றினுடன்  சேர்ந்து செயலாற்றும் விதம் ஆகியவற்றின் தெளிவு மிகவும் அவசியம்.

அக்குபஞ்சர் சிகிச்சையில் வலி நிவாரணப்புள்ளிகளில் அளிக்கப்படும் சிகிச்சை வலியினை நீக்குவது  மட்டுமல்லாது, அந்த வலி ஏற்படுவதற்குக் காரணமான பிர்ச்சினையினையும்  குணமாக்குகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனினும் பஞ்சமூலகங்களின் நிலையினை நாடிப்பரிசோதனை மூலம்  சோதித்தறிந்து, அதன் அடிப்படையில் தரப்படும் சிகிச்சையே  முழுமையானதாகும்.

எனவே, வரும் பதிவுகளில், நாம்  முதலில் தெரிந்துகொள்ளப்போகும் மூலகம் "EARTH - நிலம், மண் "


                                                         "வருமுன் காப்போம்"


Sunday 11 May 2014

அக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்?

நோயெதிர்ப்பு போராட்டம் 


"அக்குபஞ்சர் புள்ளிகள்"
தூண்டிவிடப்படுவதன் மூலம் செய்யப்படும், மருந்தில்லா மருத்துவம் எனும் அக்குபஞ்சர்  மருத்துவம், பஞ்சபூதங்கள் எனப்படும்  "நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்"  ஆகியவற்றின்  அடிப்படை சக்தியில் செயல்படுகிறது.

நாம் ஜீவித்திருக்கும் சதா சர்வ காலமும் நமது  உடல் நலம் பேணும் வகையில், பஞ்சபூத மூலகங்களின் ஒருங்கிணைந்த சீரான "செயல்பாடு" தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. "செயல்பாடு" என்று சொல்வதைவிட "போராட்டம்" என்று சொல்வது மிகவும் பொருந்தும். கண்ணிமைக்கும்  நேரம் கூட கவனப்பிசகில்லாமல், ஓர் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது உடலின் ஆரோக்கியத்திற்காக.

"அறுபடைவீடுகள்"


1. உடலெங்கும் அமைந்துள்ள நிணநீர் முடிச்சுக்கள் எனும்  போர்க்கூடாரங்கள்

2. போராட்ட வீரர்களான  "B-லிம்போசைட்"  வெள்ளை அணுக்களை  உற்பத்தி செய்து பயிற்சி தரும்  எலும்பு மஜ்ஜை

3. சிறுகுடலின் மூன்றாவது பகுதியான -  "இலியம்" பகுதியில் அமைந்திருக்கும், குடல் பகுதியினை பாதுகாக்கக்கூடிய வெள்ளையணுக்கள் நிரம்பிய "பேயரின் திட்டுக்கள்"

4. "மாக்றோபேகஸ் செல் " எனும் "பாதுகாப்பு நுண்ணுயிர்விழுங்கி" அமைந்துள்ள,  இரத்தத்தின் அளவை கட்டுபடுத்தும் திறன் கொண்ட மண்ணீரல்.

5. வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா ஆகியவற்றை எதிர்த்துப்போராடும்  "T-லிம்போசைட்" - எனப்படும் பாதுகாப்பு செல்களுக்கு "இராணுவப்பயிற்சி" தரும் "தைமஸ் சுரப்பி"

6. நாம் அருந்தும் எந்த உணவானாலும், அதில் வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா ஆகியவை இருந்தால்  அவற்றுடன் போராடுவது, மேலும்,  நாசி மற்றும் வாய் வழியே சுவாசக்குழாயினுள் நுழைய எத்தனிக்கும்  கிருமிகளை செயலிழக்கச் செய்வது என கோவிலின் கருவறைக்கு பாதுகாப்பாக இருபுறமும் நிற்கும் துவாரபாலகர்கள் போல், தொண்டையின் நுழைவுப்பகுதியில் இருபுறமும் - "டான்சில்ஸ்"

இவ்வாறாக, ஆறு படைத்தளங்கள், எம்பெருமான் ஸ்ரீ முருகனின் , "அறுபடைவீடுகள்" எனும் வகையில்  அமைந்துள்ளன.  "யாமிருக்க பயம் ஏன்?" என்று பகை விரட்டி அபயம் தரும் இறைவனின் கருணைக்கு  ஈடாக, உடலுக்கு பகையான கிருமிகளை எதிர்த்துப்போராடும் அற்புத அமைப்புகளாகும் அவை.  நமக்கு  இயற்கை அளித்துள்ள இந்த பாதுகாப்பு கவசம் நன்றாக செயல்பட்டாலே போதும் - நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

 

உணவு, உழைப்பு, உறக்கம்  


உணவு, உழைப்பு, உறக்கம் - இம்மூன்றையும் நன்னெறியில் முறைப்படுத்திக் கொண்டாலே நமது உடலில்  அமைந்துள்ள அனைத்து பாதுகாப்புக் கவசங்களும் முழுமூச்சுடன் செயல்பட ஏதுவாகும்.

நல்ல பழக்க வழக்கங்களை தவறவிடும்போது, பஞ்ச பூதங்களின் அற்புத செயல்பாடு திறம்பட இயங்க  முடியாத நிலை ஏற்பட்டு, " உயிர் சக்தி ஒட்டப்பாதையில்" அடைப்புகள் ஏற்பட்டு - அதனால் நோயெதிர்ப்பு  சக்தி சரியான முறையில் செயல்பட முடியாமல் போய்விடுகிறது.

அக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்?


 பிரச்சினையிலிருந்து மீண்டுவர, அக்குபஞ்சர் சிகிச்சை மிகவும் எளிதான, பக்கவிளைவற்ற  மருத்துவமுறையாக அமைகிறது. "அக்குபஞ்சர் புள்ளிகள்" நமது உடலை காக்கும் அற்புத சக்தி  வாய்ந்தவை. அவற்றைமுறையாக  அக்குபஞ்சர் சிகிச்சை மூலம், தூண்டிவிடுவதனால் பஞ்ச பூதங்களின் செயல்திறனை முடுக்கி  விடலாம். அதன் மூலம் இழந்த ஆரோக்கியத்தை மீண்டும்  பெறலாம்.

மேலும், நீடித்த,  நிலைத்த ஆரோக்கியத்திற்கு  - "உணவு, உழைப்பு, உறக்கம்"  இம்மூன்றின் முறையான பழக்க  வழக்கங்களை மேற்கொள்ளுதல் மிக மிக அவசியம்.
                               

                                                          "வருமுன் காப்போம்"

 

 

Thursday 8 May 2014

அக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று

அக்குபஞ்சர் - 
இயற்கை வைத்தியம்
ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று

 

பிரபஞ்சம் ஓர் "முழுமை


"பிரபஞ்சம் ஒரு சிலந்தி வலை- அதில் ஏதாவது ஒரு இடத்தைத் தொட்டாலும் - வலை முழுவதிலும் அதன் அதிர்வு  உணரப்படும்" என்ற இணையதளத்தில் படித்த  சிலந்தி வலைத் தத்துவம் ("SPIDER WEB PHILOSOPHY")

மற்றும்

"பிரேசிலில் ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகினை அசைப்பதின் விளைவாக கனடாவிலுள்ள டொராண்டோவில் சூறாவளி எற்படுமா? " என்ற 1972ம் ஆண்டின்  "கேயாஸ் தியரி " (CHAOS THEORY")
- ஆகிய இரண்டு தத்துவங்களும் சொல்வது என்ன?
 
பிரபஞ்சம் ஓர் "முழுமை"
அதன்  அங்கமான நமது உலகமும், நாமும் தனித்தனியே - ஓர் "முழுமை"
     
 "பிரபஞ்சம்" - இன்னும் அது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது. முடிவுகள் வரட்டும். நமது முன்னோர்கள் ஏற்கெனவே கண்டறிந்தது சொல்லிவிட்டார்கள்  "அண்டமும்  பிண்டமும் ஒன்றே" என்று.

பூமியில்- எரிமலை வெடித்து, நெருப்புக்குழம்பை கக்கியபின் பூமிக்கடியில் ஏற்படும், வெற்றிடத்தை நிரப்ப, பாறைத்தட்டுகள் அசைந்து சரி செய்து கொள்கின்றன.  அது பூகம்பம். அதே பூகம்பம் கடலுக்கருகே அல்லது கடலுக்கடியில் நடைபெறுமானால், கடல் நீரின் சமநிலை பாதிக்கப்படுவதனால் சுனாமி ஏற்பட்டு, கடல் தன்னை சமப்படுத்திக் கொள்கிறது. புவியில் வெப்பம் அதிகமாகும்போது, நீரானது ஆவியாகி, மேகமாய் மாறி  மழையைப்பொழிந்து, பூமியைக்குளிரச் செய்கிறது, பூமியில் அதிகமாக பாயும் நீர், வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடி மீண்டும் கடலிலே கலக்கிறது  - நமக்கு இது கண்கூடானது. உலகத்தை இயக்கும் பஞ்ச பூதங்கள் அதன் "முழுமைத்தன்மை" யினை நிலைக்கச்செய்யும் வகையில் நடத்தும் நிகழ்வுகள்தான்  இவை  யாவும்.

இதே வகையாக, நமது உடலிலும், பஞ்சபூதங்கள் ஒரு வரிசைக்கிரமமாக, ஒன்றின் இயக்கக்திற்கு மற்றது காரணமாக அல்லது உறுதுணையாக இருக்கிறது. - அதே நேரத்தில் மற்றொரு வரிசையில் ஒன்று மற்றொன்றை தனது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்துக்கொண்டு ஒரு "முழுமை"யினை நிலை நிறுத்தும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்த "முழுமை" எனப்படுவது வேறொன்றும் அல்ல;    நமது "நலம்" எனும் "ஆரோக்கியம்" தான்.

ஆக்கும் சுற்று 


"நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்" என்ற வரிசையில் ஒன்றிலிருந்து அடுத்ததின் உருவாக்கம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

         நெருப்பு குளிர்ந்து நிலமாகிறது (மண்ணாகிறது)
         நிலத்தினுள் உருவாவது  உலோகம்
         உலோகத்தை உருக்கினால் கிடைப்பது திரவம் - அதாவது நீர்
         நீரின் தன்மையால் வளருவது மரம்
         மரங்கள் உராய்வதினால் உண்டாவது  நெருப்பு
        மறுபடியும் நெருப்பு குளிர்ந்து நிலமாகிறது......

தவிர,  ஒரு மூலகக்திலிருந்து  மற்றொன்று உருவாவதால், உருவாக்கும் மூலகம் "தாய் மூலகம்"  எனவும் உருவாக்கப்பட்ட மூலகம் "சேய் / மகன் மூலகம்" என அழைக்கப்படுகிறது.

       "தாய்" மூலகம்             "சேய்" மூலகம்

            நெருப்பு                         -      நிலம் 
            நிலம்                              -      உலோகம்
            உலோகம்                     -      நீர் 
            நீர்                                     -      மரம்
            மரம்                                -      நெருப்பு



  


இவ்வுருவாக்கம், ஒரு தொடர் நிகழ்வாக அமைவதால், இது "ஆக்கும் சுழற்சி " (GNERATING CYCLE)  அல்லது சீனத்தில் Sheng Cycle  எனப்படும்.

அழிக்கும் சுற்று 


சில பல காரணங்களால், ஒரு மூலகத்தின் செயல்பாடு தேவைக்கு மேல் அதிகமாகும் பொது, அம்மூலகத்தின் "தாயின் தாய் மூலகம்", அதனை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

இவ்வகையில் -

  மரம் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து நிலத்தை ஆக்கிரமிக்கிறது.
  நிலமானது, தேவைக்குமேல்  நீரினை -  உறிஞ்சிக் கொள்கிறது.
  நீர் அதிகமாகி நெருப்பினை அணைத்து விடுகிறது.
  நெருப்பு அதிகமாகி உலோகத்தை உருக்கி விடுகிறது
  உலோகமாகிய காற்று அதிகமாகி மரத்தை சாய்த்து விடுகிறது.




இந்தச்சுழற்சி "அழிக்கும் சுற்று" (DESTRUCTIVE CYCLE) அல்லது சீனத்தில் Co Cycle  எனப்படும்.ஒரு மூலகம் மற்றொன்றினை அழிக்க முற்படும் செயல், கட்டுப்படுத்தும் வகையிலான  செயலாகவும் அமைகிறது. எனவே இது "கட்டுப்படுத்தும் சுற்று" எனவும் சொல்லப்படுகிறது.


எதிர் வினை சுற்று

 


ஒரு மூலகத்தின்  "சேயின் சேய் மூலகம்"  அம்மூலகத்தின் மீது எதிர் வினை  புரியவும் செய்கிறது.

அதாவது,

நிலம், தன்னை ஆக்கிரமிக்கும் மரத்தை வளரவிடாமல் தடுக்கிறது.
நீர் பெருகி நிலப்பகுதியை மூடிவிடுகிறது.
நெருப்பு நீரினை ஆவியாக்கி விடுகிறது.
உலோகமாகிய காற்றானது நெருப்பை அனைத்து விடுகிறது.
மரங்கள், அதிகமாக வீசும் காற்றை தடுத்து விடுகின்றன.

பஞ்சபூதங்களின் மேற்கூறிய சுழற்சி முறைகள் மிகவும் முக்கியமானவை. அக்குபஞ்சரின் சிறப்பு அம்சமான "நாடிப்பரிசோதனை"யின்படி, சிகிச்சைக்கான புள்ளிகளை தேர்வு செய்ய, இத்தத்துவம் மிகவும் அவசியமானது. பல சந்தர்ப்பங்களில், ஒரே ஒரு அக்குபஞ்சர்  புள்ளியை மட்டும் தேர்வு செய்து சிகிச்சையளித்து, பல பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும். பிரச்சினையின் வெகு ஆரம்பக்கட்டத்திலேயே அதை இனம் கண்டு, அதை வளரவிடாமல் தடுக்கும் வழியும், அக்குபஞ்சர் சிகிச்சையில் நிறைய உண்டு.



                                                         "வருமுன் காப்போம்"

 

 

 

 

Wednesday 7 May 2014

அக்குபஞ்சர் - பஞ்சபூதங்கள்

அண்டமும்  பிண்டமும் ஒன்றே


ஆகாயம், நெருப்பு, நிலம், காற்று, நீர் - ஆகிய பஞ்சபூதங்கள்தான் "அண்டம்" (GALAXY-MACROCOSM) எனப்படும் பிரபஞ்சத்தின் அணுக்கூறுகள் ஆகும். "அண்டமும்  பிண்டமும் ஒன்றே" - என்ற வகையில், அண்டத்தின் ஒரு துகளாகிய பூமியாகிய உலகமும், உலகத்தின் ஓர் அங்கமாகிய,  மனிதராகிய (HUMAN-MICROCOSM)   நாமும்   அதே ஐந்து  மூலக்கூறுகளால்  உருவாக்கப்  பட்டவர்கள்தாம்.

ஐந்து மூலகங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒரு முழுமையான சக்தியாக - நமது பிரபஞ்சம், உலகம், நமது உடல் ஆகியவற்றில்  "உயிர் சக்தி" யாக ஓடி இயக்கிக்கொண்டிருக்கிறது.

சீன அக்குபஞ்சரில், பஞ்ச பூதங்களில், "ஆகாயம்"  மூலகத்தை  "மரம்" என்றும் "காற்று" மூலகத்தை  "உலோகம்" என்றும் உருவகப்படுத்தியுள்ளார்கள்.

எனவே,
      மரம்  (Wood)
     நெருப்பு  (Fire)
     நிலம்  (Earth)
     உலோகம் (Metal)
     நீர்  (Water)
    
ஆகிய ஐந்தும் நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் "பஞ்சபூதங்கள்" அல்லது "ஐந்து மூலகங்கள்" ஆகும்.

நமது உடலின் உயிர்சக்தி நிலைத்திருக்கும் வண்ணம் செயல்படும் பன்னிரண்டு பிரதான உள்ளுறுப்புகள், அவற்றின் இயல்பினை கருத்தில் கொண்டு, பஞ்சபூதங்களின் தன்மை கொண்டதாக வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.

யின்-யாங் தத்துவப்படி, ஒவ்வொரு மூலகத்திலும் ஒரு யின் மற்றும் ஒரு யாங் உறுப்பு உண்டு. யின்-யாங் உறுப்புகள்  "சாங்க் - ஃபூ" - (ZANG-FU) உறுப்புகள் எனவும் சொல்லப்படும்




"நெருப்பு"  மூலகத்தில் மட்டும்  இரண்டு  ஜோடி  உறுப்புகள் அமைகின்றன.

"இருதயம்" மற்றும் அதன் இணை உறுப்பான "சிறுகுடல்" ஜோடியினை "பெரிய நெருப்பு" - BIG FIRE - எனவும், "இருதய மேலுறை" மற்றும் அதன் இணை  உறுப்பான "மூவெப்பமண்டலம்"  ஜோடியினை "சிறிய நெருப்பு" - SMALL FIRE - எனவும் நாம் பிரித்தறிந்து கொள்ளலாம்.