Friday 24 July 2015

" அமில-காரத்தன்மை " - அக்குபஞ்சர் அறிவியல்

நமது உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் நாம் கைக்கொள்ளவேண்டிய செயல்கள்  பல இருக்கின்றன. அவற்றில்  மிக மிக முக்கியமான ஒன்றாக  கருதப்படுவது  "நமது உடலின் அமில-காரத்தன்மை"யினை  (Acid - Alkaline Scale )  ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பானஅளவில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதாகும். 

"அமில-காரத்தன்மை " (Acid - Alkaline ) - என்பது என்ன?


பொதுவாக ஒரு திரவத்தின் அமில- காரத்தன்மையின் கலப்பு விகிதசாரம், அந்த திரவத்தின் ஹைட்ரஜன் (Hydrogen) மூலக்கூற்றின் செயல்திறனை - அதாவது - potency -யினை கணக்கிட்டு 1 முதல் 14 வரை அளவிடப்படுவதாகும். அதுவே, potency of hydrogen என்பதின் குறியீடாக "pH" என்று குறிப்பிடப்படுகிறது.

சுகாதாரமான குடிநீரின் "pH" குறியீடு 7 ஆகும். இதுவே "நடுநிலை" - neutral - ஆக கணக்கிடப்படுகிறது.

ஒருவரது ஆரோக்கியம் தொடர்ந்து நிலைத்திருக்க, அவரின் உடலில் ஓடும் இரத்தத்தின் இந்த "நடுநிலை" குறியீட்டு  எண் "pH" என்பது   "7.4" ஆக தொடரச்செய்ய வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே "அமிலம்" என்பது பற்றி நாம் அறிவோம். இங்கு "காரத்தன்மை" என்பது Alkalaine  எனப்படும் தன்மையாகும். "உறைப்புச்சுவை"  எனக்கொள்ளுதல் ஆகாது.

"Alkali" யானது,
    -  எளிதில் நீரில் கரையக்கூடியதும்
    -  தொடுவதற்கு வழுவழுப்பானதாகவும்
     - சிகப்பு "லிட்மஸ்" (Litmus) தாளை நீலநிறமாக மாற்றும் தன்மை 
        கொண்டதாகவும், மேலும்
  -  அடர்த்தி கூடிய அல்கலி பொருட்கள் "அரிக்கும்" (corrosive) தன்மை 
      கொண்டது எனவும்,  பள்ளியில் "விஞ்ஞான பாடத்தில்" படித்ததை
      நினைவு கூறுங்கள்.

நமது உடலின் இயல்பான கார- அமிலத்தன்மை சமன்பாடு சீர்குலைந்து, அமிலத்தன்மை  மிகுமேயானால், நமது உடல் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய  கட்டாயத்தில் தள்ளப்படும் என்பது உறுதி.

அமிலத்தன்மை அதிகமானால் விளைவுகள் என்ன?

அமிலத்தன்மை அதிகமாகும் போது, நமது உடலின் அடிப்படை கட்டமைப்பாகிய 'செல்'-லானது தனது அன்றாட கடமைகளை சரிவரச்செய்ய முடியாமல் போகும். 'செல்'-கள் அனைத்தும், இயல்பான முறையில் சுவாசித்தல், உணவு உண்ணுதல், கழிவுகளை நீக்குதல் ஆகிய அத்தியாவசிய கடமைகளை நிறைவேற்ற இயலாத நிலை உருவாகும்.

அதன் காரணமாக,  நமது உடலின் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து, நோயினை   எதிர்த்து   போராடும்    திறன்   மிகவும்   குறைந்து   விடுகிறது. விளைவாக, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக்காளான் மற்றும் 'பாராசைட்' என்னும் ஒட்டுண்ணிகள் சம்பந்தமான நோய்த்தாக்கங்கள் எளிதில் உடலினுள் புகுந்து ஆரோக்கிய சீர்கேட்டினை உண்டாக்கும்என்பதில் சந்தேகமில்லை.

-அடிக்கடி,எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகுதல்
-அதிக உடல் பருமன்
-அஜீரணக் கோளாறுகள்
-எளிதில் அதிகமாக களைத்துப்போகுதல்
-எலும்பு இணைப்புகளில் அதிக வலி
-எலும்புகள் பலவீனமாகுதல்
-பற்சிதைவு நோய்கள்
-தசைகளில் பிடிப்பும் வலியும்
-எரிச்சலூட்டும் மனஉணர்வு
-சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் அடிக்கடி உருவாகுதல்
-இளவயதில் முதுமை தோற்றம்

                 ஆகியவை நமது உடலில் அளவுக்கு அதிகமாக அமிலத்தன்மை மிகுவதால் ஏற்படக்கூடிய சில விளைவுகளாகும்.


அமிலத்தன்மை மிகுதியாக உள்ள உடலில் கேன்சர் உருவாகுமேயானால், அவை செழித்து(?) வளர வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

"அமில-காரத்தன்மை" சீர்குலைவு ஏன்?

முறையற்ற உணவுப்பழக்கம், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல், உடலின் சக்திக்கு  மீறிய உழைப்பு, முறையான ஓய்வின்மை - ஆகியவையே காரணங்களாகும்.

நாம் உண்ணும் உணவு யாவற்றையும்- அதிக அமிலத்தன்மை கொண்டது, ஓரளவு அமிலத்தன்மை  கொண்டது, குறைந்த அளவு  அமிலத்தன்மை கொண்டது எனவும், மேலும்  அதிக காரத்தன்மை கொண்டது, ஓரளவு காரத்தன்மை  கொண்டது, சிறிதளவு காரத்தன்மை கொண்டது  எனவும் வகைப்படுத்தலாம் எனச்சொல்லப்படுகிறது. வலைத்தளத்தில் இவை பற்றிய கட்டுரைகள்  ஏராளம். ஆனால் பல உணவுப்பொருட்களைப்பற்றிய அமில-காரத்தன்மை தகவல்கள் சற்று  முரண்படுகின்றன.

ஆனால் - முறையானஉணவுப்பழக்கம், முறையற்ற உணவுச்சேர்க்கை என நம் முன்னோர்களின்  வழிகாட்டுதல் நமக்கு இருக்கிறது.

காலையில் - பகலில் - இரவில் என்னென்ன சாப்பிடலாம்,  என்னென்ன உணவுடன் என்னென்ன உணவைச் சேர்த்து சாப்பிடலாம் / சாப்பிடக்கூடாது ; கோடை - மழை - குளிர் காலங்களில் ஆரோக்கியத்தை பேணும்  உணவு வகைகள் என, பல  குறிப்புகள்  உணவுக்கலாச்சாரமாக நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மூத்த குடிமக்களிடம்  கேட்டறிந்து கொள்வோம்.

நமது உடலின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் வகையில், அமில-காரத்தன்மை  சமன்பாட்டில் ஏற்ற இறக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொள்வதாக அமைந்ததுதான் நமது  முன்னோர்கள் நமக்கு போதித்த உணவுப்பழக்கம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- தயிர்,  மோருடன் வாழைப்பழம்
- மாமிச,  மீன்  உணவுடன்,  தயிர் மற்றும் மோர்
- உளுந்து அதிகம் சேர்த்த  உணவுடன் பால்

என சேர்த்து உண்ணும் போது,  வயிற்றில் புளிப்புச்சுவை அதிகமாகி, அதனால் உடலில் அமிலத்தன்மை கூடிவிடும் என்பதினால், அவற்றை ஒரே நேரத்தில் சேர்த்து உண்ணக்கூடாது என்பது  சித்த  மருத்துவத்தில் சொல்லப்படும் ஆரோக்கிய குறிப்புகள்.

பச்சரிசியினால் செய்யப்பட்ட ஆப்பம் சாப்பிடும்போது அதிகமாக ஏறக்கூடிய அமிலத்தன்மையை  சரிக்கட்ட, neutralizer ஆக தேங்காய்ப்பால் சேர்த்து உண்ண நமக்கு தெளிவாகவே  சொல்லப்பட்டிருக்கிறது நம் முன்னோர்களால்.

வேர்க்கடலையின் புரத்தச்சத்து நமக்கு அவசியம். வேர்க்கடலை அதிகமானால் ஏற்படும் அமிலமிகுதி, அதனுடன் நாம் சேர்த்து சாப்பிடும் பனங்கருப்பட்டியினால் சரிசெய்யப்படுகிறது. அதுதான் "கடலை உருண்டை" எனச் சொல்லவும் வேண்டுமா!

அடுத்ததாக, அதிக உடல் உழைப்பும்/உடற்பயிற்சியும்  உடலின் அமில-காரத்தன்மை சீர்கெட ஒரு காரணமாக அமைகிறது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், "Stress " - எனப்படும் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், மேலும் கோபம், பயம், அதிக துக்கம், எளிதில் எரிச்சலடைதல், பொறாமை, தேவையில்லாத கவலை போன்ற எதிர்மறை  எண்ணங்கள் யாவும்  -  உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வண்ணம், நமது இரத்தத்தில் அமில-காரத்தன்மையின் சமன்பாடு  சீர்குலைய காரணமாக அமைகின்றன.

எப்படி?

நமது மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் - நமது உடலில் அமைந்துள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லாத சுரப்பிகளிலிருந்து பலவகை சுரப்புகள்   சுரக்கின்றன என்பதனை நாம் அறிவோம்.

எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போது, அதன் விளைவாக உடலில் சுரக்கும்  ஹார்மோன் எனப்படும் "இயக்குநீர்" இரத்தத்தில் அமிலத்தன்மையினை வெகுவாக ஏறச்செய்கிறது என்றும்; மாறாக "அன்பு"  "மகிழ்ச்சி" "ஆனந்தம்" ... போன்ற நல்ல எண்ணங்கள், அதிக அமிலத்தன்மையினை மட்டுப்படுத்தும்  வகையில் காரச்சுவையினை (alkaline) சுரக்கச்செய்யும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யக்கூடியதாக  இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் அமைதியான மனம்தான் என்பதால் தான் "அன்பே சிவம்" என்றார் திருமூலர்.

"அன்பே கடவுள்" - எனும் வாக்கினை ஆராய்ந்தோர் இதனை நன்கறிவர்.

அது சரிதான்...... இப்படியான உணவுகளை தரம் பிரித்து..  தேடித் தேடி ... - அது எல்லோராலும்  சாத்தியமா?

உடல் உழைப்பு? - பகலில் தூங்கி, இரவில் கண் விழித்து, அதிக நேரம் வேலை செய்தால்தானே  வாழ்க்கை ஓடும்?

மேலும், அவசர கதியில் இயங்கும் இந்த பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் மனதைக் கட்டிப்போட  முடியவில்லையே? டென்ஷன், கோபம், பதட்டம், பயம் மன உளைச்சல் ஆகியவற்றை தவிர்க்க  முடிவதில்லையே?

அக்குபஞ்சர் மருத்துவத்தில் "அமில-காரத்தன்மை" சமன்பாட்டுக்கு வழி உண்டா?

நிச்சயமாக உண்டு

அக்குபஞ்சர் அறிவியலில்  - நமது நமது உடலில் பஞ்சபூத சக்திகளை  செவ்வனே இயங்கச்செய்ய  ஆறு சுவைகளும் அன்றாடம்  உணவில் அளவோடு உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்று  தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெரும் ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை. அதிகம் சிரமப்பட  வேண்டியதில்லை. ஆறு சுவைகளும்,  அளவோடு,  அன்றாடம்  உணவில் இருக்குமாறு  அமைத்துக்கொண்டால்  நமது உடலின்  அமில-காரத்தன்மை சமப்படும்.  சுவையறிந்து அளவாக  உணவருந்தினால் மட்டுமே  போதும்.

தேவை எனில் அக்குபஞ்சர் மருத்துவரிடம் நாடிப்பரிசோதனை செய்துகொண்டு அவரிடம் ஆலோசனை  பெறலாம். எந்த  மூலகத்தின் நாடியில் சமன்பாடு இல்லையோ, அம்மூலகம் சம்பந்தமான சுவையுள்ள  உணவு  வகைகளை கூட்டவோ குறைத்துக்கொள்ளவோ அவர் ஆலோசனை தருவார். அதன்மூலம்  உடலில் உள்ள அமில-காரத்தன்மை சீர்கேடு சமன்பட வாய்ப்பு நிறைய உண்டு.


உடல் உழைப்பு / பயிற்சி  - அவரவர்  கையில்தானே இருக்கிறது? இதைக்கூட தனது   சொந்த   முயற்சியில் சரி  செய்துகொள்ள முடியவில்லை என்றால் எப்படி?

கட்டிப்போடமுடியாத மனதை அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஒரு சில  அக்குபஞ்சர் புள்ளிகளை, தேவைப்படும் வகையில் தூண்டுவதன் மூலம்,  மனதை சாந்தப்படுத்தி  அமைதி  ஏற்படுத்திக்கொள்ளலாம். தேவைல்லாத பதட்டத்தினால் சுரக்கக்கூடிய  தீமை தரும்  ஹார்மோன் சுரப்புகளைத் தவிர்க்கலாம்.

உணவு - உடல் உழைப்பு - உடலுக்கும் உள்ளத்திற்குமான ஓய்வாகிய உறக்கம் இம்மூன்றினையும் நெறிப்படுத்தி தொடர்ந்து பின்பற்றுவோம்.

                                                  வருமுன்  காப்போம்

Friday 23 January 2015

பிரபஞ்சம் மேக்ரோகாசம் - மனிதர் மைக்ரோகாசம்.

ஒரு நபர், தன் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும்  அவ்வப்போது  உடற்பிணிகளால் பாதிக்கப்படுவது ஏன்?

நாம் வாழும் இந்த பூமியின் பஞ்சபூதசக்திகளின் ஒத்திசைவான நிலைப்பாடு, அதாவது சுற்றுப்புற சூழல், பல காரணங்களால் சமன்பாட்டினை இழந்துவிடுவதுதான் காரணம். நமது சுற்றுப்புற சூழ்நிலைக்கும் நமது ஆரோக்கியத்திற்கும் உள்ள  தொடர்பினை நாம் அறிவோம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஒழுங்காக சூரியனைச் சுற்றி இயங்கி வரும் நமது பூமியின் பஞ்சபூதசக்திகளின் சமன்பாடு  அவ்வப்போது , காலத்தின் கட்டாயத்தால் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சீர்குலைகின்றது  என்பது  மறுக்க   முடியாத  உண்மை.

அதிக வெப்பம், அதிக மழை, அதிக குளிர், வறண்ட காற்று என  சுற்றுப்புற சூழலில் ஏற்ற தாழ்வுகள் - அதன் காரணமாக  அமையும் இயற்கை நிகழ்வுகளால் பூமியின் பஞ்சபூத சக்திகளில் ஏற்படும் மாற்றங்கள்  - நமது உடலின் பஞ்சபூத சக்திகளில்  தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பிரபஞ்சத்தில் எங்கோ நகரும் ஒரு வால் நட்சத்திரத்தின் அசைவு,   சூரியனில் ஏற்படும் வெப்ப சலனம் மற்றும் கரும்  புள்ளிகள் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்து, பூமியின் தட்ப வெட்ப   நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பூமியின் தட்ப வெட்ப நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள்,  அண்டத்தின் ஓர் அங்கமாகிய  நமது உடலின் பஞ்சபூத சக்திகளின் சமன்பாட்டில்  இடையூறு செய்து, ஆரோக்கிய நிலைப்பாடு சீர்குலைய காரணமாக அமைகின்றன.

தவிர, அனைத்து கிரகங்களிலிருந்து பூமியினை வந்தடையும் மின்காந்தப்புலங்கள், பூமிக்கும் அவைகளுக்குமான இடைவெளியின் அளவைப்பொருத்து, பூமியினையும் அதில் வாழும் நம்மையும் நேரடியாக பாதிக்கின்றன. நமது பூமியின்  துணைக்கிரகமான சந்திரனை நாம் சற்று கவனிப்போம். அமாவாசை மற்றும் பௌர்ணமியின் போது, கடல் நீர் மட்டம் மற்றும்  அலைகளின் எழுச்சி ஆகியவற்றில் ஏற்படும் தாக்கங்களை நாம் அறிவோம். அதே அமாவாசை மற்றும் பௌர்ணமியின் போது   நீர் சம்பந்தப்பட்ட தோல்நோயினால் பாதிப்படைந்தவர்கள் அதிக உபாதையினை அனுபவிக்க நேரிடும். மேலும் மனநலம்  பாதிக்கப்பட்ட மனிதர்களில் பலரது ஆரோக்கிய பாதிப்பு சற்று உக்கிரமாகவே இருக்கக்கூடும்.

பிரபஞ்சம் (Galaxy) மேக்ரோகாசம் (Macrocosm) என்றால் பூமி (Earth) மைக்ரோகாசம் (Microcosm).  பூமி மேக்ரோகாசம்  என்றால் நாம்  மைக்ரோகாசம்.


எனவே பிரபஞ்சமாகிய மேக்ரோகாசத்தில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றமும் பிரபஞ்சத்தின் மைக்ரோகாசமாகிய  நம்மை  நேரடியாக பாதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இவ்வுலகம்  நீர்,  நிலம்,  நெருப்பு  ஆகாயம்,  காற்று எனும் பஞ்சபூத சக்திகளால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதனை நாம்  அறிவோம்.  அச்சக்திகளில்  ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை சமன் செய்யும் வகையிலான செயல்பாடுகளே,  எரிமலை வெடித்து   அக்கினிக்குழம்பினை  வெளியேற்றுதல்,  பூகம்பம்,  ஆழிப்பேரலை, கடும் வெயில் - மழை -  காற்று -  குளிர் -  வெப்பம் -  வறட்சி போன்ற   நிகழ்வுகளாகும் என்பதையும் நாம் அறிவோம்.

 அதே வகையிலேயே,  அண்டத்தின் ஓர் அங்கமாகிய நமது பிண்டத்திலும் - அதாவது நமது உடலிலும் பஞ்ச பூத சக்திகளில்  ஏற்படும் ஏற்றதாழ்வுகளினால் உண்டாகும் விளைவுகளை - வலி, வீக்கம், காய்ச்சல் - என  நாம் நோயின் அறிகுறிகளாக உணருகிறோம்.

இத்தகைய பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பெரிதாக நோய்வாய்ப்பாடமல் தப்பித்துக்கொள்ளும் வகையில்   எளிய தீர்வு ஏதேனும் உண்டா?

உண்டு.  அதுதான் நமது உடலின் "தன்னைத்  தானே குணப்படுத்திக்கொள்ளும் சக்தி"

நமது உடலின் "தன்னைத்  தானே குணப்படுத்திக்கொள்ளும் சக்தி" யின் மீது பலருக்கும் சிறிது சந்தேகம் இருக்கத்தான்  செய்கிறது.

எள்ளளவுகூட சந்தேகம் தேவையில்லை.

எவ்வாறு இயற்கை தன்னை தானே சரிசெய்துகொள்கிறதோ, அதேபோல் நமது  உடலும்  தன்னைத் தானே "சரி செய்து"  கொள்ள - இடைவிடாது 24x7 செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாம் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும், நமது உடலில்ஆரோக்கியத்தை எப்போதும் நிலைநிறுத்தும் வகையில், ஒரு  நொடி கூட இடைவெளி இல்லாதவாறு  சதா சர்வகாலமும் அற்புதமான இத்திறன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நம்முள் இயங்கும் பஞ்சபூத சக்திகள் தமக்குள் நிகழும் முரண்பாடுகளை தாமே சரிசெய்து கொள்ளும் தன்மை வாய்ந்தது. சில  சமயங்களில், சரியான சரிவிகித உணவு, மற்றும் முறையான  பழக்கவழக்கங்களை நாம் கைக்கொள்ளாதபோதும், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தாக்கத்தாலும்,  நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும்  பஞ்சபூதங்களாகிய மரம், நெருப்பு, நிலம்,  உலோகம், நீர் - ஆகியவற்றின் சக்தி ஓட்டத்தில்(flow of bio-electric energy;  acupuncture meridian ) தடைகள் ஏற்படுகின்றன.

இந்த சந்தர்ப்பங்களில் ஒருவரது உடலில் இயற்கையாக அமைந்துள்ள "ஆற்றல் மிக்க உயிர்சக்தி" (vital energy)  பலவீனப்பட்டு, செயல்திறன் மிகவும் குறைந்திருக்குமேயனால், அவரது உடல் சுயமாக போராடும் தன்மையினை  இழக்கின்றது.

ஒருவரது உடலில் சுயமாக தாமே இயங்கி, சரிசெய்து கொள்ளமுடியாத இயலாத "பஞ்சபூதங்கள் சார்ந்த சக்தி ஓட்டத்தை",  அக்குபஞ்சர் தூண்டுதல்மூலம் சரிசெய்து ஒருவரது உயிர்சக்தி ஓட்டத்தை சரியாக இயங்கச்செய்யமுடியும். ஒருவரின்  "உயிர்  சக்தி" (vital energy) மிகவும் பாதிக்கப் பட்டிருக்காதவரையில் இது சாத்தியமே.

ஒரு சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர், தம்மை நாடி வரும்  ஒருவரின் உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூத சக்திகளின்  தற்போதைய நிலையினை அக்குபஞ்சர் நாடிப்பரிசோதனை மூலம் சோதிக்கிறார்.
மரம், நெருப்பு, நிலம், உலோகம், நீர் - எனும் ஐந்து மூலகங்களின் செயல்பாடுகளை நடத்திவரும்  உறுப்புகளாகிய

நுரையீரல்
பெருங்குடல்
இருதயம்
சிறுகுடல்
இருதய மேலுறை
மூவெப்ப மண்டலம்
இரைப்பை
மண்ணீரல்
கல்லீரல்
பித்தப்பை
சிறுநீரகம்
சிறுநீர்ப்பை

- ஆகியவற்றின் சக்தி ஓட்டத்தின் தன்மை நாடிப்பரிசோதனை மூலம் பரிசோதிக்கப்படுகிறது.

நாடிப்பரிசோதனை மூலம், பாதிக்கப்பட்ட மூலகத்தினை சோதித்து அறிந்து, பிரச்சனையை தெரிந்து கொள்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர்.

அந்தப்பிரச்சனை,  சம்பந்தப்பட்ட மூலகத்தின் செயல்திறன் குறைவால் ஏற்பட்டதா? - அல்லது, அம்மூலகத்தின் தேவைக்கு  அதிகமான செயல்பாட்டினால்  ஏற்பட்டதா? - என்பதை புரிந்து கொள்கிறார். தேவைப்பட்டால் அதற்கு காரணமாக அமைந்த  நிகழ்வுகளை, விசாரணை மூலம் அவர் அறிந்துகொள்கிறார்.

நாடிப்பரிசோதனையின் அடிப்படையில், அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை தருவதோடு மட்டுமல்லாமல், பிரச்சனையின் மூல  காரணத்தினை சரிசெய்யும் வகையில் ஆலோசனைகள் தரப்படுகிறது.  தொடர்ந்து நீடித்த ஆரோக்கிய வாழ்க்கை அமைய,  அதாவது ஒருவரின் உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் "பஞ்சபூதமூலகங்களின் இசைவான உயிர்சக்தி ஓட்டம்"  தடையில்லாமல் இயங்கும் வகையில், மிக எளிதான முறையில், அவர் கடைபிடிக்க வேண்டிய உணவு மற்றும்  பழக்கவழக்கங்களை ஆலோசனையாகச் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர்,  இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் முழுமையாக அடைய, அவரது "உயிர்சக்தி ஓட்டம்" எந்த வகையிலும்  தளராத வகையில், முறையான சரிவிகித உணவு, மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை தொடர்ந்து  கைக்கொள்ளவேண்டும்  என்பது மிக மிக அவசியம்.

எந்த அளவுக்கு  இயற்கையோடு இணைந்து நமது உணவு மற்றும் பழக்க வழக்கங்களை கைக்கொள்கிறோமோ அந்த  அளவுக்கு நமது ஆரோக்கியம்  பாதுகாக்கப்படும்  என்பது உறுதி.

மற்ற துறையினைச் சார்ந்த மருத்துவர்கள் போல் அக்குபஞ்சர் மருத்துவர்களும் நிச்சயமாக -  நீடித்த நல்ஆரோக்கியத்திற்கு  மிகவும் சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள்.

நமது உடலின் அற்புதமான இந்த தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் செயல், ஒரு தொடர் போராட்டமாகவே நம்முள்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இனி வரும் பதிவுகளில் அதனை நாம் பார்க்க இருக்கிறோம்.

எல்லாம் சரிதான் - நோய்வாய்ப்படாமலேயே நாம்  தப்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?

ஏன் இல்லை!?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிகோலும் கணக்கிலடங்காத அற்புதமான வழிமுறைகளை,  எண்ணிக்கையிலடங்காத  சித்தர்களும், மகான்களும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே - பண்பாடு, கலாச்சாரம் - என எளிய முறையில்  பின்பற்றத்தக்கவாறு வாழ்க்கையோடு இணைந்த முறையாக நமக்குத் தந்திருக்கிறார்கள்.

அற்புதமான அந்த வழிமுறைகளை  பின்பற்றுவோம் - 

                                                        வருமுன் காப்போம்

Tuesday 1 July 2014

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை

பஞ்சபூதங்கள் : "மரம்" மூலகம் தொடர்ச்சி   - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை  இப்பதிவில்  பார்ப்போம்

வெளிப்புற உறுப்பு : "கண்"


எனக்கு நன்றாக நிணைவிருக்கிறது - எனது சிறுவயதில், எனக்கு உடல் நலம் சரியில்லாத போது, என் தாயார் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது,  என்னை  சற்று உற்றுப்பார்த்த  மருத்துவர், சற்றே யோசித்தவராக எனது இரு கண்களின் கீழ் இமைகளையும் ஒவ்வொன்றாக கீழிழுத்துப்பார்த்து, உடனேயே சொன்னார் "பையன் உடம்பிலே ரத்தமே இல்லையே!" என்று.

எவ்வளவு எளிதான பரிசோதனை! உடனடி report!!


நமது உடலில்  இரத்தத்தின் அளவு குறைந்திருக்குமேயனால், கல்லீரலில், அவசரத்தேவைக்காக சேமித்து வைக்கப்படும் இரத்தத்தின் அளவும் அதே விகிதத்தில் குறைந்து விடும்.

கண்களின் கீழிமையை சற்று கீழிழுத்துப்பார்க்கும் போது தெரியும் உட்பகுதியில் நாம் காணும் சிகப்பு நிறத்தின் அடர்த்தி,  உடலின் இரத்த அளவினைக்காட்டும் "meter" ஆக விளங்குகிறது.

அடர்ந்த சிகப்பு நிறம், போதுமான இரத்தம் நமது உடலில் இருப்பதையும், வெளிறிய சிகப்பு நிறம்  உடலில் இரத்தம் குறைவாக இருப்பதையும் தெளிவாக காட்டுகிறது.

கண்ணின் வெண்விழிப்படலத்தில் தெரியும் மஞ்சள் நிறம், கல்லீரல் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

கண்ணில் எரிச்சல், மற்றும் நீர் வடிதல் ஆகியவை கல்லீரல் நச்சுப்பொருட்களால் பாதிக்கப்படுவதை அவ்வப்போது நமக்கு உணர்த்தும் குறிகளாகும்.

மரம் மூலகத்தின் சுவை  : "புளிப்பு"

நமது உடலின் உள்ளுறுப்புகளுக்கும் சுவைகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதென்பதை நாம் அறிவோம்.  அந்த வகையில் "மரம்" மூலகத்தின் சுவை இயல்பு  "புளிப்பு" ஆகும்.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புளிப்புச்சுவை அளவோடு இருக்க வேண்டும். ஏறக்குறைய இருப்பின்  "மரம்" மூலகத்தின் உறுப்புகளான கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

அதிகப்படியாக புளிப்பு உணவை எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் அமிலச்சுவை அதிகரிப்பதின் காரணமாக உடலின் அனைத்து இணைப்பு பாகங்களிலும் வலி ஏற்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது.

நீண்டநாளாக, உடலின் இணைப்பு பாகங்களில் மிகுந்த வலியினால் அவதிப்படுபவர்கள், நிச்சயமாக  அதிகமாக புளிப்புச்சுவை மிகுந்த உணவில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புளிப்பு சுவை அதிகம் சேராமல் கவனத்துடன் இருப்பார்களேயானால்,  நிச்சயமாக மருந்துகளின் உதவியின்றி, படிப்படியாக வலியிலிருந்து  விடுபட அதிக வாய்ப்பு  உள்ளது.

மரம் மூலகத்தின் நிறம் : "பச்சை"

கல்லீரலானது, பித்தநீரினை பித்தப்பையில் சேமித்து வைத்து பயன் படுத்துகிறது.  பித்தநீரின் மிக முக்கியமான பணியாகிய கொழுப்பு ஜீரணம் சரிவர நடைபெறாமல் தடைபட்டுப்போகும் நேரத்தில், பச்சை நிற "பித்தப்பை கற்கள்" பித்தப்பையில் உருவாகின்றன.

சிறுகுடலில் அடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும்போதும், அல்லது சிறுகுடலில் வைரஸ்  தாக்குதல் ஏதாவது ஏற்பட்டுள்ளபோதும், பித்தநீரானது சிறுகுடலினுள் செல்ல வழியின்றி, மேலேறி இரைப்பையை அடையும்போது, இரைப்பையானது பித்தநீரினை சகித்துக்கொள்ளும் திறன் இல்லாததால் பித்தநீரை, பச்சைநிற பித்தவாந்தியாக வெளியேற்றுகிறது. 

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில், குளோரபில் அல்லது இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட மருந்துகள் ஏதும் சேராதபோது, திடக்கழிவில் பச்சை நிறம் காணப்பட்டால், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றின் இயல்புக்கு மாறான அதிவேக செயல்பாட்டினை உணர்த்துகிறது

Monday 23 June 2014

"மரம்" - மூலகம்: தொடர்ச்சி - உட்புற இணைஉறுப்பு : பித்தப்பை GALL BLADDER

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், கல்லீரல், மற்றும் பித்தப்பை  ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "மரம்" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன

உட்புற இணை உறுப்பு :   பித்தப்பை  GALL BLADDER - அக்குபஞ்சர் குறியீடு "GB" 

கல்லீரலின் அடிப்பக்கத்தில் அமைந்துள்ள பித்தப்பையானது சுமார் 50 முதல் 60 மில்லி லிட்டர் மட்டுமே  கொள்ளளவு உடையது.

கல்லீரலானது  பித்தநீரினை சுரந்து பித்தப்பையில் சேமிக்கிறது. பச்சை  நிறமான காரத்தன்மையுடையதான பித்தநீர், நாளொன்றுக்கு சுமார் 600 முதல் 1000 மில்லி லிட்டர்  வரை  சுரக்கப்படுகிறது.

கல்லீரல் ஓரளவு தொடர்ச்சியாக பித்தநீரினை சுரந்து கொண்டிருந்தாலும், பித்தப்பையானது, நாம் உணவு எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது இரைப்பையில் அரைக்கப்பட்ட உணவு முன்சிறுகுடலில்  நுழையும் போதோதான் பித்தநீரினை சிறுகுடலுக்கு அனுப்பித்தருகிறது.

சுமார் 50 அல்ல்து 60 மி.லி. கொள்ளளவே கொண்ட  பித்தப்பை கல்லீரலிலிருந்து தொடர்ச்சியாக  பெறப்படும் சுமார் 600 முதல் 1000 மில்லி லிட்டர் வரையான பித்த நீரை சேமித்து வைத்து பயன்படுத்த  வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் பெறக்கூடிய பித்தநீரின் அடர்த்தியை  10 முதல் 15 மடங்கு  வரை அதிகரித்து சேமித்து வைத்து தேவைப்படும்போது அதனை நீர்த்து பயன்படுத்துகிறது.

பித்தப்பையானது,  பித்தநீரை சிறுக்குடலுக்கு அனுப்பும்போது "மியூசின்" (musin) எனும்  திரவச்சுரப்பினையும் சேர்த்து அனுப்புகிறது. இந்த மியூசின் அரைக்கப்பட்ட  உணவு சிறுகுடலில் எளிதாக  தடையின்றி நகர்ந்து செல்ல எண்ணைப்பசை (lubricant) போல செயல்படுகிறது.

பித்தநீரானது 89 சதவீகிதம் நீரும், மீதம் 11 சதவிகிதத்தில்  பித்த உப்புக்கள், பித்த நிறமிகள், மியூசின்  போன்ற கரிம (organic) பொருட்களும், சோடியம், கால்சியம், பொட்டாசியம், பை-கார்போனேட்  போன்ற  கனிம (inorganic) திடப்பொருட்களும் கொண்டதாக அமைகிறது.

பித்த உப்புக்கள், சிறுகுடலில் கொழுப்பு ஜீரணத்திற்கு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது.

பித்த உப்புக்கள், சிறுகுடலில் உருண்டைகளாக உருவாகும் கொழுப்பினை நுண்ணிய துகள்களாக உடைத்து கூழ் போன்று  திரவநிலைக்கு மாற்றி, சிறுகுடல் உறிஞ்சத்தக்கதாக மாற்றித்தருகின்றன.

சிறுகுடலின், peristatic movement எனப்படும் சுருங்கி விரியும் தன்மையை ஊக்குவித்து,  உணவுத்  திரவக்கூழின் சிறுகுடல் பயணத்தை எளிதாக்குகின்றன.

மேலும், பித்தநீரின் திரவத்தன்மையை தொடர்ந்து பாதுகாப்பதன் மூலம் பித்தப்பை கற்கள் உருவாகுவதை முற்றிலும் தவிர்க்கச் செய்கின்றன.

சிதைக்கப்பட்ட இரத்த சிக்கப்பணுக்களிலிருந்து பெறப்பட்ட பிலிருபின் - bilirubin - மனித உடலின் முக்கியமான  பித்த நிறமியாகின்றது. நமது மல, நீர்க்  கழிவுகளில் தெரியும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு காரணமாக அமைவது  இந்த பிலிருபின்தான்.

கல்லீரலின் செயல்திறனில் குறைபாடு ஏற்படுவதன் காரணமாக தோன்றும் நோய்களின் போது, பிலிருபின் இரத்ததில் அதிகமாக கலந்துவிட நேருவதால், மலம், சிறுநீர் மற்றும் கண்ணின் வெண்விழிப்படலம் ஆகியவற்றில் தோன்றும் மஞ்சள் நிறம், நோய்த்தாக்கத்தை நமக்கு உணர்த்தும் வகையில் பிலிருபினின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
 
கொழுப்பினை ஜீரணிக்க அத்தியாவசியமான பித்தநீரினை முறையாக பயன்படுத்தும் வகையில் நமது உணவுப்பழக்க வழக்கங்கள் அமையவில்லையெனில், பித்தப்பையில் அளவுக்கு அதிகமாக பித்தநீர், சேர்ந்துவிடும்

இறுகிய பித்தநீர், கற்களாக மாறி பித்தப்பையினை வெடித்துவிடச்செய்யும் அளவுக்கு மோசமான நிலைக்கு நம்மை தள்ளிவிடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது.



                                                       வருமுன் காப்போம் . 


Thursday 12 June 2014

பஞ்ச பூதங்கள் : "மரம்" - மூலகம் - உள்ளுறுப்பு " கல்லீரல்"

பஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS -  தத்துவத்தில், கல்லீரல், மற்றும் பித்தப்பை ஆகியவை,  அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு "மரம்" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

உட்புற உறுப்பு :  கல்லீரல் - LIVER - அக்குபஞ்சர் குறியீடு "LIV"

நமது உடலின் மிகப்பெரிய சுரப்பியாக விளங்கும் -LIVER - எனப்படும் கல்லீரல், நமது உடலின் "இரசாயனத் தொழிற்சாலை" என்று அழைக்கப்படும் அளவுக்கு, நமக்கு அன்றாடம் தேவைப்படும் பலவித  உயிர்ச்சத்துக்களை நாம் உண்ணும் உணவிலிருந்து தயாரித்துத் தரும் முக்கிய பணியினைச் செய்கிறது.

ஒரு மரமானது, எவ்விதம் நிலத்திலிருந்து சத்துக்களை உறிஞ்சி தனது அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறதோ, அதேபோன்று, கல்லீரலானது நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் அனைத்து சத்துக்களையும் நமது உடலின் அனைத்து பாகங்களும் பயன்படுத்தும் வகையில் தயாரித்து அனுப்பித்தருகிறது. தவிர, தான் வெட்டப்பட்டாலும், மீண்டும் முழுமையாக வளர்ந்துவிடக்கூடிய தன்மையுடையதாய் விளங்குவதால், கல்லீரல் மரம் மூலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லீரல் ஆற்றும் அனைத்து பணிகளைப்பற்றியும் சொல்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. முக்கியமான பணிகளை மட்டும் சொல்லலாம் என்று யோசித்தால் எதை சொல்வது, எதை விடுவது என்று பிரிக்கவும் முடியவில்லை. ஓரளவு சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

* நமது உடலின் அனைத்து பாகங்களிலிருந்து பெறப்படும் திரவ நிலையினை கண்காணித்து நிர்வகிக்கும் கல்லீரல், நமது உடலின் அனைத்து பாகங்களுடனும் நேரடியாகத் தொடர்புடையது.

* கார்போஹைடிரேட் எனப்படும் மாவுச்சத்து, மற்றும் புரோட்டீன், கொழுப்பு ஆகியவற்றின் வளர்சிதை மாற்றம் - metabolism - கல்லீரலில் நடக்கிறது.

* கொழுப்பினை ஜீரணிக்கச்செய்யும் பித்தநீரினைச் சுரந்து, பித்தப்பையில் சேமிக்கிறது.

* மாசுபட்ட உணவு மற்றும் நீர், நோய்க்கிருமிகள், போதை தரும் மருந்துகள் மற்றும் மது - இவற்றினால்  இரத்தத்தில் சேரும் அனைத்து நச்சுப்பொருட்களையும் மற்றும் கழிவுகளையும் நீக்குகிறது.

* முக்கியமாக, பெருங்குடலில் நுண்ணுயிரிகளால் சேரக்கூடிய, உயிருக்கு உலை வைக்கக்கூடிய அளவுக்கு கொடிய நச்சுப்பொருளான "அமோனியா"வை  யூரியாவாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றச் செய்கிறது.

* இரத்தச்சுற்றோட்டத்தின் போது, மொத்த இரத்தத்தில் பத்து முதல் பதினைந்து சதவிகிதம் வரை தன்னுள் எப்போதும் இருக்குமாறு வைத்துக்கொள்கிறது - அவசரகாலத் தேவைக்காக.

* சிறுகுடலிலிருந்து பெறப்படும்  - வைட்டமின், மற்றும் தாதுப்பொருள் சத்துக்களை சேகரித்து வைத்து, தேவைப்படும் போது வெளியிடுகிறது.

* இரத்தத்தில் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரைச் சத்து சற்று அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதனை கிளைகோஜனாக மாற்றி சேமித்து வைத்து, தேவைப்படும்போது குளுக்கோஸாக மாற்றி வெளியிடுகிறது.

*  இரத்தம் உறைதலைத் தடுக்கத் (anticoagulant) தேவையான ஹெபாரின் - Heparin - எனப்படும் காரணியினை  சுரக்கிறது.

* இரத்த அழுத்தத்தை தொடர்ந்து சீராக வைத்திருக்கச் செய்கிறது.

* உடலின் electrolyte எனப்படும் "மின்பகு பொருள்" (ion) மற்றும் "நீர்" ஆகியவற்றின் சமநிலையினை பராமரிக்கிறது.

* இறந்துவிட்ட மற்றும் செயலற்றுப்போன இரத்த சிகப்பணுக்களில் உள்ள "ஹீமோகுளோபின்"களை சிதைத்து, மறுசுழற்சி முறையில் மீண்டும் இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்தினை பிரித்து எலும்பு மஜ்ஜைக்கு அனுப்புவதோடு, அதில் பெறப்படும் கழிவினை வெளியேற்றவும் செய்கிறது.

இன்னும் பலவிதமான வளர்சிதைமாற்றச் செயல்பாடுகளை, கல்லீரலானது, நமது உடலில் ஆரோக்கியம் நிலைத்திருக்கும் வகையில் இடைவிடாது செயாலாற்றிக் கொண்டிருக்கிறது.

அமிர்தம் வேண்டி, பாற்கடலை கடையும்போது விளைந்த விஷத்தின் தாக்குதலிலிருந்து தேவகணங்களை காக்குமுகமாக, அவ்விஷத்தை விழுங்க முற்பட்ட சிவபெருமானைப்போல், நாம் உண்ணும் உணவு, மற்றும் நமக்கு ஏற்படும் கிருமித்தாக்குதல் ஆகியவற்றால் நமது இரத்தத்தில் கலந்துவிட்ட கொடிய விஷத்தை தனக்குள்ளேயே  வைத்துக்கொண்டு, தீங்கில்லாத உயிர்ச்சத்துக்களை மட்டும் இரத்ததில் கலக்கச்செய்து தான் இருக்கும் உடலின் ஆரோக்கியம் ஒன்றே பிரதானம் என்று செயலாற்றும் கல்லீரலின் கடமையுணர்ச்சியை என்னென்பது!

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"

தெரிந்தோ, தெரியாமலோ நாம் நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் கைக்கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவோம்.

                                               வருமுன் காப்போம். 
                          ஆரோக்கியவாழ்வினை அனுபவிப்போம்.

Wednesday 4 June 2014

பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும்

ஒரு நபரின் உடலில்,  பஞ்சபூத மூலகங்களின் தற்போதைய நிலைப்பாடு  எந்த அளவில் இருக்கிறது என்று நாம் நாடிப்பரிசோதனை மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். எனினும் அதை  உறுதிப்படுத்தும் வகையில், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று - கழிவு நீக்க செயல்பாடு. 

ஒவ்வொரு மூலகத்தின் உள்ளுறுப்பின் செயல்பாடும், அந்தந்த உறுப்பின் கழிவு வெளியேற்றத்தினால்  எளிதாக  உணரப்படுகிறது. ஆரோக்கிய நிலையில், ஒரு உறுப்பின் கழிவின் தன்மை, மற்றும் அளவு  அதன் இயல்பான  நிலையில் அமைந்திருக்கும். உள்ளுறுப்பின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கழிவுகள் வெளியேறுவதில் இயல்பு நிலையில் மாற்றம் நிகழ்கிறது.

அக்குபஞ்சர் தத்துவத்தில், பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகள் அனைத்திற்குமான கழிவுகள் நாம் எளிதில் அவதானிக்கக்கூடிய வகையில் திரவ நிலையில் அமைந்துள்ளன. அந்த வகையில், "நிலம்" மூலகத்தின் உள்ளுறுப்பான  மண்ணீரலின் கழிவுத்திரவம் எச்சில் எனப்படும் "உமிழ்நீர்" ஆகும்.

நிலம் மூலகத்தின் உறுப்புகளான இரைப்பை மற்றும் மண்ணீரலின் செயல்திறனில் பாதிப்பு ஏற்படும்  வேளையில், அதன் வெளியுறுப்பான வாய் அல்லது  உதட்டில், உமிழ்நீரானது உடனே சுட்டிக்காட்டுகிறது.

அடிக்கடி வாய் உலர்ந்து விடுதல், அல்லது எப்போதும் அதிக உமிழ்நீர் சுரந்து கொண்டிருத்தல் - நிலம்  மூலகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினைக் குறிக்கிறது.

பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும் பின்வருமாறு :



Sunday 25 May 2014

பஞ்சபூதங்கள் "நிலம்" மூலகம் - தொடர்ச்சி : மன உணர்ச்சி - "கவலை"

நமது உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் நேரடியாக நமது கட்டுப்பாட்டுக்குள்  இல்லை.

மூளையானது, நரம்பு மண்டலம் வழியாக உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டினை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. நமது உள்ளுறுப்புகள் யாவும், என்னதான் தன்னாட்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு செயலிலும் இறங்குமுன்,   மூளையின்   கட்டளைக்காக  காத்திருக்கிறது.

உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு, நமது உடலில் உள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும்  "ஹார்மோன்" எனப்படும் "உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர்" அடிப்படை காரணமாக அமைகின்றது. இதனை சுருக்கமாக "இயக்கு நீர் / சுரப்பு நீர் " எனலாம். இத்தகைய "சுரப்பு நீர்" வகைகள் யாவும் உடலின் தேவைக்கேற்ப, மூளையின் கட்டளைப்படி, அந்தந்த உறுப்புகளிலும், இரத்தத்திலும்  சுரக்கப்படுகின்றன.

"நிலம்" மூலகத்தின் உறுப்புகளில் ஒன்றாகிய இரைப்பையில், உணவு ஜீரணம் நடைபெறும் விதத்தை நாம் ஏற்கெனவே "உணவு ஜீரணத்தில் உமிழ்நீரின் மகத்துவம்" பதிவினில் பார்த்தோம். நாவில் படும் சுவை, நாசியில் ஏறும்  மணம், இவைகளுக்கேற்ப இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் ஜீரணத்தை நடத்த உதவுகின்றன.

தவிர, உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமான, "ஆற்றல்" அல்லது "சக்தி நிலையில்" குறைவு ஏற்படும்போது, மூளையின் ஹைபோதலாமாஸ் பகுதியின் தூண்டுதலால்,  "பசி" உணர்வினை ஏற்படுத்தும் "HUNGER HARMONE" எனப்படும்  "க்ரெளின் "  (Ghrelin)  வயிற்றில்  சுரக்கிறது.

வயிற்றில் நடக்கும் இவ்வளவு நிகழ்ச்சிகளும் -  மூளையானது, மிக இயல்பாக, அதாவது, அதன் "நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள்" எனப்படும் "மின் அலை கடத்தி"களின் செயல்பாட்டிற்கு எந்த ஒரு  இடையூறும்   இல்லாத  பட்சத்தில் - செவ்வனே நடத்தித் தரும்.

நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான "இரசாயன சமிக்ஞைகள்" - CHEMICAL SIGNALS - சுதி விலகாத  தாள-லயத்துடன் நடக்கும்போது, மூளைக்கும் உள்ளுறுப்புகளுக்குமான தொடர்பில் பாதிப்பு  இல்லை. அவ்வேளையில் சுரக்கப்படும்  "செரோடோனின்" - SEROTONIN - எனும் மூளையின் சுரப்பானது, பசி உணர்வினை முறைப்படுத்துகிறது.  மேலும் - உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருத்தல், "MOOD" எனப்படும் மன நிலையினை  சீராக வைத்திருத்தல், தேவைப்படும் தூக்கத்தை தரும் வகையில் மன அமைதி தருதல், மற்றும் வலி  நிவாரணம் தருதல்  - போன்றவையும்  "செரடோனின்"  துணை  புரியும் முக்கிய  பணிகள் தான்.

ஒருவேளை, ஒரு நபர், நடந்து முடிந்த வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சியைப்பற்றியும், அதன் விளைவாக, வருங்காலத்தில் "என்ன நடந்துவிடுமோ?" என்று தொடர்ந்து "கவலை"ப்பட்டுக்கொண்டிருந்தால் விளைவு என்ன ஆகும்? விரைவில் அவரது நிலைமை கவலைக்கிடமாகிவிடும். அதாவது, நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான தொடர்பில் துண்டிப்பு ஏற்பட்டு, செரோடோனின் சுரப்பு தடைபடுகிறது. செரோடோனின் சுரப்பு தடைபடுவதனால் பசி உணர்வு அதிகமாகவோ அல்லது குறையவோ செய்யலாம். அதாவது பசி முறைபடுத்தப்படமாட்டாது. அதனால்,  இரைப்பை,  மண்ணீரல் மற்றும் கணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் தடைபடும். விளைவு ஆரோக்கியக்குறைவு. மண்ணீரலின் குறைபாட்டினால், இரத்தசோகை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவு, மேலும் கணையத்தின் கவனக்குறைவால் இன்சுலின் சரிவரச் சுரக்காததால் நீரழிவு  எனும் சர்க்கரை நோய் கூட உருவாகலாம்.

அதிகமாக, எந்நேரமும் கவலைப்படும் ஒருவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து, அதனால்  ஆரோக்கியம் கெடும் - என்பது மட்டுமல்லாமல் - முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களினால் அவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து அதன் விளைவாக,  அவருக்கு தேவை இல்லாமல் அடிக்கடி கவலை உணர்வு தோன்றவும் செய்யும் எனபதை நாம்  மறுக்க இயலாது.

இவ்வளவு விஞ்ஞான விளக்கங்கள் எதற்கு? அதையெல்லாம் விட்டுவிடுங்கள்.  மறந்துவிடுங்கள். “நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்" என்ற நமது முன்னோர் சொல்லி வைத்திருக்கும் வார்த்தைகளின் அர்த்தத்தை சற்று  யோசித்துப்பாருங்கள். 

நீங்கள்  எதெற்கெடுத்தாலும்  அதிகமாக  கவலைப்படுகிறவரா?

குறைந்தபட்ச கவலை தேவைதான். இல்லையென்றால் வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி? ஓரளவுக்கு,  அடுத்ததாக செய்ய வேண்டியவற்றுக்கான திட்டமிடுதல் இருந்தால் போதும். கூடவே கொஞ்சம் தைரியத்தை  சேர்த்துக்கொள்ளுங்கள். அதிக கவலையினைத் தவிர்த்து விடுங்கள். இந்த நாளின்  அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலை மட்டும் இருக்கட்டும். இன்னும் ஒருமாதம் கழித்து ஏதோ ஒருநாள்  எடுத்துக்கொள்ளபோகும் மதிய உணவைப்பற்றிய கவலை  இப்போதே  எதற்கு?

தேவையில்லாமல் அதிகமாக கவலைப்படுகிறவர் எனில், அருகில் உள்ள அக்குபஞ்சர் சிகிச்சையாளரிடம் ஆலோசனை பெறுங்கள். செரோடனின் சுரப்பினை  சரிப்படுத்தும் வகையில், ஓரிரண்டு அக்குபஞ்சர் புள்ளிகளில் மட்டும் சிசிச்சை தந்து,   அவர் உங்கள்  ஆரோக்கியம் மேம்பட உதவுவார்.

                  கவலையைப்பற்றிய கவலையை  இனி விட்டுவிடுங்கள்.

                                               வருமுன் காப்போம்